அழகாக இருக்கின்றன.
"நல்ல பிரதிக்ஞைதான். அதற்காக நீ நம் வீட்டு அடுக்களை ஒத்தாசைக்கு வரும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்ச கிளார்க்குன்னா இரண்டாயிரம் கையில்; நகை, நட்டு, பாத்திரம், கல்யாணம், ஜவுளி இப்படீன்னு பதினைஞ்சுக்குப் போகிறது. அப்ப நீ 'கிளார்க்கை'க் கல்யாணம் பண்ணிக்கிறேன்னாலும் அவன் சம்மதிக்க மாட்டான். 'எம்.ஏ.யா? வேண்டாம்'பான். நீருவை நான் ஏன் டிகிரியே வேண்டான்னு வச்சேன்? நாம வேலைக்கா அனுப்பப் போகிறோம்? பெண்கள் வேலை செய்ய வந்தப்புறம் எந்த ஆபீஸ் உருப்படுகிறது? இல்லை ராஜ்யம் தான் உருப்படுகிறதா?"
யமுனாவுக்குப் பொங்கி வருகிறது. ஆனால் நா எழும்பவில்லை. இந்த இடத்திற்கு வந்ததே தப்போ? அப்படியில்லை இங்கேதான் முட்டி மோதிக் கொள்ள வேண்டும்.
"உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படிப் பேசினால் எப்படி பெரியப்பா? எங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நீங்கள்..."
"என்ன நம்பிக்கையை இன்னும் கொடுப்பது? பார்வதியின் மாமா சாகும்வரை என்னிடம் சொல்லாத நாளில்லை. அப்பவே உங்கப்பாவுக்குப் பெண்ணைக் கொடுத்து நர்ஸிங்ஹோம் வச்சுத் தரேன்னார். லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறான், அவனோடு படிச்ச பூவராகவன். இப்ப... எங்கேயோ போய்ச் சேர்ந்தான். காந்தி பேரைச் சொல்லிட்டு எவனெவனெல்லாமோ உச்சிப் பதவியில் உக்காந்திருக்கிறான். அப்படியேனும் புண்ணியம் உண்டா? நானேனும் பூஞ்சை. வயிரம் பாய்ந்த கட்டையாக இருப்பான். எப்படிக் கைகால் விளங்காது படுக்கை போட்டுட்டது?... எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் பண்ணிக் கொண்டதிலேந்து... ஹும் அதெல்லாம் இப்ப எதுக்கு? மலையாளத்தானே மந்திரம் தந்திரம் வைப்பு ஏவல்னு தொழில் செய்றவன். யார் என்ன செய்தானோ?"
ஒரே புரட்டலாகத் தலைமீறிக் கொண்டு வருகிறது ஆத்திரம். பெரியப்பா இத்தனை நாட்களில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதில்லை. முகம் சிவக்க உளம் குமுற தலை நிமிராமல் கொதித்துக் கொண்டிருக்கிறாள்.
"ஐம்பத்தேழில் இங்கே வந்திருந்தானே, அப்பத்தான் மனசுவிட்டுப் பேசினான். 'எனக்கே