"நீ எதுக்கு அழறே, இப்ப? உனக்கு வயசு வந்தாயிட்டது. உண்மை தெரியணும்னு சொல்றேன். நான் பதினாலு வயசில் குடும்பப் பொறுப்பை ஏத்துக் கொண்டவன். பெரிய படிப்புப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன், முடியல்ல. உங்கப்பாவுக்கு அந்தப் படிப்பு வேணும்னு பதினெட்டு வயசில் கிளார்க் வேலைக்குப் போனேன். ஆயிரத்துக்கு மேலே சம்பளம் வாங்கினேன். டிராப்ஃட் எழுதினா இங்கிலீஷ் துரையெல்லாம் அசந்து போயிடுவான். மூணு தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, நல்லது பொல்லாதது ஒண்ணு விடாமல் செய்திருக்கிறேன். உங்கப்பா குடும்பத்துக்கு என்ன செய்தான்? உங்க பாட்டி... எங்கம்மா... சாகும்வரை ஒரு முழத்துணி அவன் கையால வாங்கிக் கொடுத்து உடுத்தியதில்லை. இதெல்லாம் எதற்குச் சொல்றேன்னா... ஸில்லியா ஏன் அழறே இப்ப?"
கண்களைத் துடைத்துக் கொள்கையில் அவளுக்கு உள்ளூற நாணமாக இருக்கிறது.
"அதுதான், உங்கப்பா பண்ணின தப்பைப் பண்ணாமல் நல்லபடியாக வாழணும்னு சொல்றேன். ஏதோ கல்யாணம் ஆகும் வரைக்கும் ஏதானும் வேலை செய். ஆசைக்கு மீட்டிங்கிலே பேசு, லேடீஸ் கிளப்புக்குப் போ. ஆனால் அதெல்லாம் உறுதியில்லே..."
ஒரே குழப்பமாக இருக்கிறது. நல்ல குடும்பம். குடும்பத்தை நல்லபடியாகக் கொண்டு வந்தாலே சமுதாயம் சிறக்கும். ஆனால் அப்பாவும் அம்மாவும் தப்பா செய்தார்கள்? எங்கே இருள் மண்டிக் கிடக்கிறதென்று தேடிப் போய் ஒளிரச் செய்ய முயன்றது தப்பா?
"நேத்து நரசிம்மனைப் பார்த்தேன். 'எங்க கம்பெனில நாங்க லேடீஸை வேலைக்கு எடுக்கவே தயங்கறோம். அவங்க வந்தா கல்யாணம், பிறகு மெடர்னிடி லீவு... லீவுக்குப் பதிலாள்... ரெட்டைப்படிச் செலவு... கம்பெனிக்கு நஷ்டம்! என்னதான் ஆயிரம் சமம்னாலும் நாங்க வருஷக் கடைசின்னா ராப்பகலாய் ஆஃபீஸீல் உட்கார்ந்து வேலை செய்வோம். அதுங்களைக் கேக்க முடியுமா? அங்கேயே கண்ணிலே தண்ணி விட்டு அழுதிடுங்க"ன்னான் - நியாயந்தானே?" என்று நிறுத்துகிறார்.
அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
"உனக்கு ஜாதகம் ஏதானும் இருக்கா? உங்கப்பாவுக்கு எழுதினால் பதிலே கிடையாது.