ஒண்ணும் பிடிக்கலே அண்ணா. காந்திஜி நினைச்சபடி நடக்கலே. எல்லாம் சுயநலமும், பதவி ஆசையுமாகப் போய்விட்டது என்ன பண்றது? காலம் கடந்து போய்விட்டது, இனிமே வேற விதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. ஒரு சட்டத்தில் புகுந்தாச்சு. அவ்வளவுதான். ஓரோரு சமயம் இந்தப் பெண் குழந்தையை நல்லபடி வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கவலை தான் தோணுறது'ன்னான். 'அதுக்கு ஏண்டா நீ கவலைப்படறே, நான் பார்த்துக்கறேன்'னு கூடச் சொன்னேன். இப்ப அங்க ஸ்கூல் நடக்க, கவர்மென்ட் கிரான்ட் ஏதானும் வரதா?"
அவளுக்கு மறுமொழி கூறப் பிடிக்கவில்லை.
அந்த இருட்டுக் காட்டிலே, ராட்சஸச் சக்கரங்கள் சுழன்று தேஜோ மயமாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்திருப்பாரா இவர்? எங்கிருந்தோ குடும்பம் குடும்பமாய்ப் பஞ்ச, பனாதைகளும் வந்து கல்லுடைத்து வயிறு பிழைத்து, தேரும் திருநாளும் கொண்டாடியதைப் பார்த்திருப்பாரா? விளக்கென்றால் இன்னதென்று தெரியாமல் காட்டுக்குள் என்றோ வலை வைத்துப் பிடித்த விலங்குகளின் இறைச்சியை அடுப்படியில் கட்டித் தொங்கவிட்டு அடுத்த விலங்கு விழும் வரை வைத்து உண்டும், உண்ண ஒன்றுமிராமல் பட்டினி கிடந்தும் மலேரியாவிலும், அறியாமை நோய்களிலும் சீழ் பிடித்து நெளிந்த சமுதாயம் இன்றைக்கு ஒளியிலே சிரிக்கும் காட்சிகளைக் கண்டு அந்தப் பெருமிதத்தை அநுபவித்திருப்பாரா? ரங்கிக்கும் முருகிக்கும் பிரேமா குதித்துக் குதித்துக் கோலாட்டம் சொல்லிக் கொடுக்கையில் அவர்களின் முகங்களில் மலரும் உற்சாகங்களைக் கண்டிருப்பாரா?
காரும் பங்களாவுந்தான் முன்னேற்றம் என்பதை அவர் கண்டிருக்கிறார். மனிதன் மனிதனாக வாழப் பயில்வதே முன்னேற்றம் என்பதை அவள் கண்டிருக்கிறாள். தந்தை நோயில் விழுமுன், ஒவ்வொரு கானக மூலையாகத் தேடிக் கொண்டு எளியவருக்குச் சிகிச்சை செய்யப் போவார். அவரை ஒரு தேவகுமாரனுக்கு மேலாக இன்றும் அவர்கள் போற்றுகின்றனர். அவரா இவரிடம் அந்தச் சேவை வாழ்க்கையைப் பற்றிக் குறைபட்டிருப்பார்! அப்படியே அம்மை அப்பாவை வழி திருப்பி விட்ட குற்றத்தைச் செய்திருப்பவளானால் அது வாழ்த்தப்பட வேண்டியதன்றோ...? அம்மா... அம்மாவையா...?
கண்கள் நிறைந்து விடுகின்றன அவளுக்கு.