"அடl இவன் எப்படி வந்தான் இங்கே?" என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி "கிட்டா !" என்று கூப்பிட்டான் மூர்த்தி.
மூர்த்தியைக் கண்டதும் கிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடடே’ என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்!
"மூர்த்தி! நீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல உன்னைத் தேடிப் பார்க்கணும்னு நினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!" என்றான் கிட்டா.
"மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு?"
"எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என் கூட வா. கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றான் கிட்டா.
"உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கோஜமா இருக்குடா. நான் வரலே, என்னை விட்டுரு" என்றான் மூர்த்தி.
"அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போறதில்லே. நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.“
"கனபாடிகள் செளக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?”
"தினமும் உன்னை நினைச்சு நினைச்சு புலம்பிண்டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்."