Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 13 - சாவி
உள்ளே போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான்.
"இந்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு ‘ஜில்’லுனு இருக்கும்" என்றான்.
பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது.
"காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி !" என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள்.
"மூர்த்தி ! ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. நாம அந்தப் பந்திலேயே உட்கார்ந்துடுவோம்," என்றான் கிட்டா.
"முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!" என்றான் மூர்த்தி.
"மணி பதினொண்ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோரா யிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கணும்; தெரிஞ்சுக்கோ" என்றான் கிட்டா.
இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண்டார்கள்.
"உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயே!" என்றான் மூர்த்தி.
"ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஓய்வா இருப்பார். சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்" என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா.
"பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?”
"இது ஆபீஸ்கரராள் பந்தி ! இங்க வைதிகம் பார்க்க வேணாம்" என்றான் கிட்டா,
"எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணணும்னு கொள்ளை ஆசையா இருக்கு !"