பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்’னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி, பிரமை பிடிச்ச மாதிரி மனசு ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா ! அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே."
கையலம்பிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன ! பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள்.
தற்செயலாய் மாமா அங்கே வந்தார்.
"யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!" என்று கேட்டார்.
"என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மாமா! மூர்த்தின்னு பேரு… இவனைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்" என்றான்.
"அப்டியா? சாப்டாச்சா ! ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க, கும்போணம் கொடிக்கா வெத்தலை!" என்றார் மாமா.
"பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?"
"பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா ! ‘வெத்தலை’ போடறது தப்பா?" என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா!
"நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!" என்றான் கிட்டா.
தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.
முர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான்.