Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 14 - சாவி
வெயிலின் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப் புழுதி கால்களை நெருப்பாய்ச் சுட ‘மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் மூர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து நின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார்.
"தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்ல? கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை !" என்றார்.
"பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கணும்" என்றான் மூர்த்தி.
“ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்" என்றார்.
மூர்த்தி தயங்கியபடி "வேணாம், பெரியவாளுக்கு சிரமம் !" என்றான்.
"பரவாயில்ல, ஏறிக்கோ."
ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்.
"உங்க உதவியை மறக்க மாட்டேன்" என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான்.
ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான். மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்டான்.
"அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?"
"என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க."
"இங்கயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று ஓடினான்.