"அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா, துரங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு தூங்கச் சொல்லு, கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?"
"ஆஸ்பத்திரியில யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!"
"யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ, ஏதாவது சாப்பிடச் சொல்லு, களைச்சாப்ல தெரியறான், பாவம்"
"என்ன சாப்பிட்றே மூர்த்தி?" என்று கேட்டான் கிட்டா.
"ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன் என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான்.
பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.
இரண்டு நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாள். ’ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஆஸ்பத்திரியில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.
மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான்.
"தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?" என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு.