நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கணுமாம்."
"நீ என்ன பண்ணப் போறே?"
"அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு…"
"ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?"
"மத்தியானம் கொதிக்கிற வெயில்லே நடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு…"
"மாமா ஏதாவது ‘ஆயிண்ட்மெண்ட்‘ வெச்சிருப்பார், வா, கேட்டுப் பார்க்கலாம்."
மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மரமாக இருந்தார்.
மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே நின்றான்.
"மூர்த்தி வந்துட்டான். வெயில்ல செருப்பில்லாம நடந்திருக்கான், கால் கொப்புளிச்சட்டுதாம்" என்றான் கிட்டா.
“செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?" என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா.
"வசதி இல்லையே !" என்றான் கிட்டா.
"அதுக்கென்னடா வசதி ! கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!" என்றார்.
"ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட் மெண்ட் இருக்கா, மாமா?"