"எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை நடக்கறது. இன்னைக்கு மஞ்சு புது ‘ஐட்டம்’ பண்ணப்போறா; நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்" என்றான் மூர்த்தி.
"நாலு மணிக்குள்ள வந்துடு, டிபன் காசி அல்வா, மெதுபக்கடா!..." என்றான் கிட்டா.
"ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி.
வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஓரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான்.
"நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை அம்மா சங்கிலி தப்பியது" என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.
கண் முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று நோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனையையும் சாமர்த்தியத்தையும் வியந்தான்.
அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. "இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம் ! தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண் !" என்று பச்சாத்தாபப்பட்டான். அந்தக்கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வில் முகம் சுளித்தான்.
சிவகங்கா தோட்டம் முச்சக்தியை அடைக்தபோது அங்கு யாரையுமே காணவில்லை. ஒரு நாய் மட்டும் நாக்கை நீட்டியபடி படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்தார். மூர்த்தி அவரை நெருங்கி, "இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?" என்று கேட்டான் .