"சும்மாவிட்டா, அப்புறம் அது நம்மையே கடிக்கும்."
"கடிச்சா நான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்."
"இந்த முர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே !" என்று மனதுக்குள் வியந்தாள். மஞ்சுவின் உள்ளத்தில் மூர்த்தி விசுவரூபமாய் உயர்ந்து நின்றான்.
மூர்த்தி எதிரில் வந்து நின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் மூழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து, தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி.
"அட, நீயா! வா" என்றவர் "பேப்பர்ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர்வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்" என்றார் கிட்டப்பா.
"அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளூர்லயே விராட பர்வம் வாசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்" என்றான் மூர்த்தி.
"பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரமே பாதி அவருக்கு" என்றார் கிட்டப்பா.
"உங்க கிட்ட, ஒரு சின்ன உதவி…"
"முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்!" என்றார் கிட்டப்பா.
"இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம்.