கருத்துக் கதைகள் – 01. பீர்பாலின் புத்திக் கூர்மை - பிந்து வினோத்
மொகலாய பேரரசர் அக்பரின் அமைச்சர் பீர்பால் புத்தி கூர்மையானவர் என்று விஷயம் திக்கெங்கும் பரவி இருந்தது.
இது சம்பாலால் என்பவனின் காதையும் எட்டியது.
சம்பாலால் பல பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவன். நல்ல விதமான படிப்பறிவை பெற்ற அறிவாளி.
பீர்பாலின் புகழை கேள்வி பட்டவன் அவரை சோதனை செய்து பார்க்க நினைத்தான். எனவே நேராக அக்பரின் அரண்மனையை அடைந்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.
அக்பரும் ஒரு நல்ல மன்னருக்கு உரிய விதத்தில் கல்வி அறிவில் மேம்பட்டிருந்த சம்பாலாலை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். அவனிடம் பல பல விஷயங்கள் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார்.
இப்படியே ஒரு வாரம் ஓடி செல்ல சம்பாலால் தான் ஊர் திரும்ப போவதாக தெரிவித்தான். அக்பருக்கு அது போன்ற அறிவாளி ஒருவனை அனுப்பி வைக்க பிரியமில்லை என்றாலும், அவனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு பொன்னும் மணியுமாக பல பரிசுகளை அள்ளி வழங்கினார்.
இதை எல்லாம் பெற்று மனம் மகிழ்ந்த போதும், சம்பாலாலுக்கு பீர்பாலை எப்படியாவது ஒருமுறை வாயடைக்க வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
எனவே அரசரிடம்,
“பிரபு, உங்களின் தாராள மனது என்னை பெரிதும் மகிழ்விக்கிறது. இங்கிருந்து கிளம்பும் முன் உலகெங்கும் புகழ் பரவி இருக்கும் உங்களின் அமைச்சர்களின் அறிவு திறமையை சோதிக்க விரும்புகிறேன்... அனுமதி தாருங்கள்...” எனக் கேட்டான்.
அக்பருக்கு எப்போதுமே தன் அமைச்சர்களின் அதுவும் பீர்பாலின் புத்திக் கூர்மையில் நம்பிக்கையும் பெருமையும் அதிகம் என்பதால், அவரும் உடனே அவனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
உடனே முரசுக் கொட்டி, அரசவை கூட இருப்பதாகவும், அதில் அறிவாளியான சம்பாலால், நாட்டின் அமைச்சர்களின் புத்தி கூர்மையை சோதிக்க இருப்பதாகவும் அறிவித்தார்கள்.
அன்று அரசவை கூடும் நாள். அக்பர் கம்பீரமாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க, அமைச்சர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தனர்...
சம்பாலாலின் சோதனையை பார்க்க மக்கள் திரண்டு வந்து குழுமி இருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது....
தன் நாற்காலியில் இருந்து எழுந்த சம்பாலால், அங்கே இருந்த அரசர் மற்றும் பீர்பால் முதலிய அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு,
“அரசே, நான் இங்கே கேட்க போவது மிகவும் எளிமையான சின்ன கேள்வி தான்.... எனக்கு சின்ன சுண்ணாம்பு கட்டி (சாக் பீஸ்) தாருங்கள் “ எனக் கேட்டான்.
அரசரும் சம்பாலால் கேட்டதை காவலாளியிடம் சொல்லி பெற்றுக் கொடுத்தான்.
சம்பாலால் அந்த சுண்ணாம்பு கட்டியை வைத்து தரையில் ஒரு வரியை (line) வரைந்தான்.
“என் கேள்வி இது தான்... நான் வரைந்திருக்கும் இந்த வரியை தொடாமல் இதை யாராலேனும் சிறியதாக்க முடியுமா???”
அங்கிருந்த மக்கள், அமைச்சர்கள் என அனைவரும் குழப்பத்துடன் தங்களுக்குள் சலசலத்தனர்.
ஆனால் பீர்பால் தன் இருக்கையில் இருந்து எழுந்து,
“நான் செய்கிறேன் சம்பாலால் அவர்களே....” என்றார்.
என்ன குட்டீஸ் & மக்களே, பீர்பால் எப்படி அந்த வரியை சின்னதாக்க போகிறார்ன்னு உங்களுக்கு தெரியுமா???
பதிலை படிக்கும் முன் யோசித்து சொல்லுங்கள்.
சம்பாலால் கையிலிருந்த சுண்ணாம்பு கட்டியை வாங்கிய பீர்பால், சம்பாலால் வரைந்திருந்த வரியின் அருகே அதை விட பெரிய வரி ஒன்றை வரைந்தார்.
பின் சம்பாலாலை பார்த்து,
“இப்போது உங்களின் கோடு சின்னதாகி விட்டது சம்பாலால் அவர்களே....” என்றார்.
சம்பாலால் தன்னை அறிவுத் திறனால் வென்ற பீர்பாலை ஆரத் தழுவிக் கொண்டார். அதை பார்த்து அரசர், மக்கள் அனைவருமே ஆனந்த ஆர்பரிப்பு செய்தார்கள்.
பீர்பாலின் புத்தி கூர்மையை மெச்சினார்கள்.
கதை சொல்லும் கருத்து!
THINK OUT OF THE BOX!
போட்டிகள் நிறைந்த உலகம் இது. போட்டிகளை மீறி வெற்றி பெற கல்வியறிவுடன், சாமர்த்தியமும் தேவை.
ஒரு சின்ன வட்டத்துக்குள் நம் சிந்தனையை கட்டுப்படுத்தி வைக்காமல் சுதந்திரமாக சிந்தித்து பழக வேண்டும்.
இங்கே சம்பாலால் கேட்ட கேள்விக்கு அவன் வரைந்த வரியை பற்றி மட்டுமே யோசித்திருந்தால் பீர்பாலால் விடையை கண்டு பிடித்திருக்க முடியாது. அதை தாண்டி சிந்தித்ததால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது.
சிறு வயது முதலே உங்களின் சிந்திக்கும் செயல்திறனை இதெல்லாம் முடியாது, நடக்காது என்று நினைத்து கட்டுபடுத்தாதீர்கள்.
THINK BIG & ACHIEVE BIG!
இது ஒரு சிறந்த management lessonம் கூட
Story # 02 - David'um Goliath'um
{kunena_discuss:875}