சிறுகதை - ஒரு நாள் கூத்து - பூவேந்தன்
முந்திய நாள் இரவு படுக்கும்போது செல்போனில் சார்ஜ் 15% இருந்தது, நாளை விடுமுறைதானே சரி பரவாயில்லை என்று வைஃபை அணைத்துவிட்டு தூங்கினது எத்தனை தவறென்பது அப்போதைக்கு தெரியவில்லை.
பவர்பேங்கில் சார்ஜ் ஏறும் என்பதெல்லாம் அம்மா இல்லாத அரசாங்கம் நம்மள காப்பாற்றும் என்ற நம்பிக்கைய போல, இருந்த சார்ஜ் முழுவதும் இறங்கி 5% ஆக இருந்தது காலையில்
வைஃபை உயிர்பித்து மொபைல் கனெக்ட் ஆனதும் சில வாட்ஸ்ப் மெசெஜ்களுக்கு ஒரு வரியில் பதிலிட்டு, ஃபேஸ்புக் குழுக்களில் குட்மார்னிங் பதிவிட்டு முடிக்கவும் 1% வரவும் சரியாக இருந்தது, சிறிது நேரத்தில் பேட்டரி தீர்ந்து ஒரு கண்ணடித்து விடை பெற்று சமாதியானது மொபைல்.
எழுந்திருக்கும்போதே மணி 8 என்பதால் பிறகு சார்ஜ் போடலாம் என மீண்டும் ஒரு குட்டி தூக்கம் போட்டேன்..
8.45 மணிக்கு மெல்ல எழுப்பி "டீ சாப்ட வாங்க" என்றாள் மனைவி அன்பாக
மொபைலும் பவர்பேங்குமாக எழுந்து சார்ஜ்ஜில் போட்டு அந்த சூடான தேநீரை ரசித்து குடிக்கும்போது ஹவுஸ் ஓனர் ஒரு வெடியை போட்டார் "இன்னிக்கு ஒரு நாள் பவர் கட்டாம் 9மணிக்கு போய்ட்டு 6 மணிக்குதான் வரும்"என்றார்.
நிமிர்ந்து நேரம் பார்க்கவும் மின்சாரம் போகவும் சரியாக இருந்தது
எழுந்து மொபைலும் சார்ஜரையும் பார்த்த பிறகுதான் தெரிந்தது சுவிட்ச் ஆன் பண்ணாதது.
இன்று அவ்ளோதான் என்று நினைத்துக்கொண்டேன்
கொஞ்ச நேரம் எல்லாம் நல்லபடியாக போனது ,குளித்து பூஜையெல்லாம் முடித்து டிபன் சாப்ட்டு அப்பாடா என அமர்ந்த போதுதான் கை மொபைலை தேடியது.
சரி லேப்டாப் வழியாக பவர் பேங்க் சார்ஜ் செய்வதா மொபைல் சார்ஜ் செய்வதா என்று சற்றே குழம்பி பவர் பேங்க் இணைத்த போதுதான் கவனித்தேன் லேப்டாப் சார்ஜ்ஜும் 25% தான் இருந்தது, அதையும் இரவு மடியில் வைத்து ஷின்சேன் பார்த்து காலி செய்திருந்தான் என் முத்துப்பிள்ளை.
சரி எல்லோரும் வாட்ஸப் ஃபேஸ்புக் வழியாகத்தானே வருவார்கள் யாரும் அழைக்க போவதில்லையே என்று விட்டு விட்டேன்,
மொபைலை பார்த்த போது எப்படியாவது எனக்கு உயிர்பிச்சை கொடேன் என கெஞ்சியதாக பட்டது.
சரி லேப்டாப் எவ்வளவு பவர் தருகிறதோ பவர்பேங்க்கு பிறகு மொபைலை பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்
இதற்குள் மனைவி "கொஞ்சம் காய்கறியும் ATMல பணமும் எடுத்து வாங்களேன்" என்றாள்,
ATM நீண்ட வரிசை ஒரு பக்கம், மின்சாரமில்லாத கோவம் ஒரு பக்கம், பணமெடுக்க என் முறை வந்த போது, எனக்கு பின்னால் உள்ளே வந்த நவீன யுவதி செல்போனில் "ஹே நான் உன்னதாண்டா லவ் பண்றேன் நம்புடா,ம்..அக்கவுண்ட்ல பணம் போட்டியா,இப்போ நான் ATMல நிக்கிறேன்டா"என்றாள்.
சட்டென திரும்பி கோவமாக "மரியாதையா ஃபோன் கட் பண்ணு" என்றேன்.
சற்றே மிரண்டு ஃபோன் கட் செய்தாள்
நான் வீடு வந்து சேர்வதற்குள் 1மணி ஆகி இருந்தது.
லேப்டாப் இயக்கத்தை நிறுத்தி இருந்தது பவர் பேங்க் எடுத்து மொபைல் இணைத்து வைத்தேன், கொஞ்ச நேரத்தில் போனால் போகிறதென உயிர் பெற்று மெல்ல சார்ஜ் ஏறியது
மதிய உணவு சாப்பிட்டு வந்து பார்த்தபோது 27% ஏறி இருந்தது, போதுமென்றது மனது
நெட் ஆன் செய்தால்
"எங்க காணோம் என்று வாட்ஸப்பில் சிலரும்,ரொம்ப பிஸியா லீவ் போட்டு ம் ம் ம் என்று சில மெசஞ்சர் மெசேஜ்ஜும்,
ஃபேஸ்புக் நோடிபிகேஷன் கொம்புகளும் பார்த்து முடிப்பதற்குள் 10% மீதமிருந்தது
நெட் வேகத்தின் வரம் என்றால், பேட்டரி ஜெட் வேகத்தில் கீழ் இறங்கி இருந்தது சாபம்.
கொஞ்சம் தூங்கியதில்
ஞாபகம் வந்த கவிதைகளும் எழுதமுடியாமல் போனது,
சரி இருக்கும் வெளிச்சத்தில் விகடன்,தடம் ,தீபாவளி மலர் எல்லாம் படித்தும் 4.30மணி வரை தாக்குபிடித்தது பெரிய ஆறுதல்.
ஜன்னலின் வெளியே வேப்பமரம் அசைந்தபாடில்லை
அசைவற்று பார்த்திருந்தேன்.
மீண்டும் மாலை தேநீர் சாப்பிட அழைத்த மனைவி
"ஆக..நாம இல்லாம மின்சாரம் இருக்கும்,மின்சாரமில்லாம நாமதான் இருக்க மாட்டோம் இல்லையாங்க" என்றாள்
அட..ஆமாம்மா என்றதோடு
சும்மா இல்லாமல்
"பாரு சம்சாரம் இல்லாம இருக்கலாம், கழுத இந்த மின்சாரம் இல்லாம இருக்க முடியல" என்று சொல்லி தொலைத்து விட்டேன்.
சரியாக அப்போது மணி 6.
காலை 9 மணிக்கு போன மின்சாரம் மாலை 6 மணிக்கு வந்தது.
ஆங்..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்
"நான் அப்படி சொன்ன பிறகு மனைவி வெளக்குமாறு எடுத்து கூட்டி பெருக்கி கோலம் போட்டு விளக்கு ஏத்தினாங்க, விளையாட போய்ட்டு வந்த மகன் "என்னப்பா உன்ன சுத்தி ஒரே ஒளி வட்டமா இருக்கு"ன்னு சொன்னான்.
நானோ விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
{kunena_discuss:785}