சிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா
மின்சாரம் இல்லாத காரணத்தால் தெருவிளக்கில் படித்துக் கொண்டிருந்தான் அக்பர். தன்னந்தனியே அந்த இரவில் யாரும் இல்லா நேரத்தில் அடுத்த நாள் கணக்கு பரீட்சைக்காக படித்துக் கொண்டிருக்கும் தன் மகனைப் பற்றி அக்பரின் தந்தை முஹம்மதிடம் மெச்சிக் கொண்டிருந்தாள் பேகம்.
”ஏங்க நம்ம பையன பார்த்தீங்களா எவ்வளவு தீவிரமா படிக்கிறான்னு.இருங்க அவனுக்கு டீ போட்டு எடுத்துட்டுப் போறேன்” என வேக வேகமாக ஓடிய பேகத்திடம்
“ஆமா,உன் பையன் கலெக்டருக்குப் படிக்கிறான்.ஓடு ஓடு வேகமா டீ போட்டுக் குடு.அவனே விட்ட மூணு நாள் லீவுல படிக்காம முதல் நாள் இரவு படிச்சிகிட்டிருக்கான்.நீ அவனுக்கு டீ போட்டுக்குடுத்து அவன் படிக்கப் போற கொஞ்ச நேரத்தையும் டீ குடிக்க வெச்சு வேஸ்ட் பண்ண பார்க்கிறாயா.டீ எல்லாம் ஒண்ணும் வேணாம்.போய் படு பேசாம” என கடிந்துக் கொண்டார்.
ஏற்கனவே படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் இதை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாதது போல் படித்துக் கொண்டிருந்தான் அக்பர்.அவனுக்கும் கணக்குப் பரீட்சைக்கும் சுத்தமாக ஆகாது.மற்ற பரீட்சைகளுக்குக் கூட முஹம்மது எப்படியாவது படித்து பாஸ் செய்து விடுவான்.ஆனால், இந்த கணக்குப் பரீட்சை அவனை பாடாய் படுத்தியது.இதில் கரண்ட் வேறு கட் ஆனதால் செம்ம கடுப்பில் இருந்தான்.அவனுக்கு திடீரென்று நேற்று படித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நியாபகம் வந்தது.அவனுக்கும் அதைப் போல் ஒரு விளக்கு கிடைத்தால் பரீட்சைக்கு படிக்காமலேயே பாஸ் செய்து விடலாம் என தோன்றியது.ஆனால் அது எல்லாம் கனவில் மட்டுமே நடக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும்.அதனால் வேறு வழி இன்றி பரீட்சைக்கு படிக்க ஆரம்பித்தான்.திடீரென்று தெருவிளக்கு மின்ன ஆரம்பித்தது.விளக்கிற்கு கீழே ஒரு உருவம் அவன் கண்ணுக்குத் தட்டுப் பட்டது.அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.தன் வாப்பாவை அழைக்கலாம் என நினைத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான்.இருட்டில் யாரும் இருப்பதாய் தெரியவில்லை.எனவே வேறு வழியின்றி பயத்தை வெளிக்காட்டாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யார் நீ” என உரக்கக் கேட்டான்.அதற்கு அந்த உருவம் பதில் ஏதும் பேசாமல் இவனை நெருங்கி வருவதிலேயே குறியாக இருந்தது.இவன் பயத்தில் கத்துவதற்குத் தயாரானான்.ஆனால் இவன் அங்கு கண்ட காட்சி இவனைக் கத்த விடாமல் தடுத்தது.இப்பொழுது அக்பரின் முகத்தில் பயம் தெரியவில்லை அதற்கு பதிலாக புன்னகை பூத்திருந்தது.இப்பொழுது அந்த உருவம் அவன் முன்னே வந்து மண்டியிட்டு உட்கார்ந்தது.அதைக் கண்ட அவன் பேச்சு மூச்சற்று சிலையாக நின்றான்.பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த உருவத்தை நோக்கி
“நீ யார்.எதற்காக இங்கு வந்தாய்?” எனக் கேட்டான்.அதற்கு அந்த உருவம்,
“உத்தரவிடுங்கள் எஜமான், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”
அக்பர் ஒரு கனம் மிரண்டு விட்டான்.அவனால் அங்கு நடப்பதை நம்ப முடியவில்லை.எதற்கும் ஒரு முறை உறுதி செய்து விடலாம் என தீர்மானித்து அதனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்
“நான் என்ன கூறினாலும் நீ அதை செய்வாயா” எனக் கேட்டான்.
அதற்கு அந்த உருவம் “உத்தரவு எஜமான்.உங்களின் கட்டளையை நிறைவேற்றவே நான் இங்கு வந்துள்ளேன்.என்ன வேண்டுமோ கேளுங்கள்” எனக் கூறவும் அக்பருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை”.
ஆனால் அந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை.தன் கையில் இருந்த கணக்கு புத்தகம் அவன் கண் முன்னே நிழலாடியது.உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அந்த உருவத்திடம் “உனது பெயர் என்ன.நீ எங்கிருந்து வருகிறாய்.எதற்காக என்னை எஜமானாக ஏற்றுக்கொண்டாய்” என வினவினான்.
அதற்கு அந்த உருவம் “என் பெயர் ஹுஸைன்.நான் வெகு நாட்களாக அந்த தெருவிளக்கினில் அடைபட்டிருந்தேன்.யாரவது என்னைப் பற்றி அந்த தெருவிளக்கினில் இருந்து ஒரு மீட்டர் தூரம் சுற்றளவில் நின்று யோசித்தார்களேயானால்,நான் அவர்களின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பது என் விதி.ஆதலால்தான் நான் தங்களை எஜமானாக ஏற்றுக் கொண்டேன்”.
“ஓ! சரி நான் உன்னை சோதிக்க விரும்புகிறேன்.இப்பொழுது உன்னால் நான் என்ன படித்துக்கொண்டிருக்கிறேன் என கூற இயலுமா?”
.”நீங்கள் கணக்கு பரீட்சைக்கு படிக்கிறீர்கள்.நூறாம் பக்கத்தில் ஆறாம் கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்”.
“அப்படியே கூறுகிறாயே.நீதான் எனக்கு ஏற்ற ஆள்.நான் உன்னிடம் ஒரு உதவி கேட்கப் போகிறேன்.அதை நீ யாரிடமும் கூற கூடாது.நமக்குள்ளேயே அந்த ரகசியமிருக்க வேண்டும்.இதை நம்மை தவிர வேறு யாராவது தெரிந்து கொண்டார்களேயானால் நான் உன்னை மறுபடியும் அந்த விளக்கிற்கு உள்ளே அடைத்து வைத்து விடுவேன்”
“உத்தரவு எஜமான்.தங்கள் உத்தரவுப்படியே நடப்பேன்.யாரிடமும் இதைக் கூற மாட்டேன்.நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்”