சிறுகதை - பட்டுமாமி! - ரவை
"ஏய்! பட்டுமாமி வராடி..........."
பெண்கள் கல்லூரி பி.ஏ. இரண்டாம் வருட வகுப்பு மாணவிகள் 'கொல்'லென சிரித்தனர்!
ஆமாம், உஷாவை மற்ற மாணவிகள் அப்படித்தான் அழைப்பார்கள், ஏன் தெரியுமா?
கல்லூரி மாணவியா, பருவ மங்கையா, நவநாகரிகமா டிரஸ் பண்ணிக்காம, தினமும் ஆறுகஜம் புடவையை கட்டிண்டு வந்தால், வேறெப்படி அழைப்பது?
அவளுக்கும் தெரியும், தன்னை மற்றவர்கள் கிண்டல் செய்வது! ஆனால், 'டோன்ட் கேர்'! சட்டையே செய்யமாட்டாள்.
" இத பாருங்க! உங்களுக்கு பிடித்தபடி நீங்க டிரஸ் பண்ணிக்கிறீங்க, எனக்கு பிடித்தபடி நான் டிரஸ் பண்ணிக்கிறேன், இதிலென்ன தவறு? என் வாழ்க்கையை எனக்கு பிடித்தமாதிரி நான் வாழறேன், ஆனால் நீங்க ஊருக்காக, உலகத்துக்காக, வேஷம் போடறீங்க! வேற ஒருவருடைய விருப்பத்துக்கு ஏற்றமாதிரி, நீங்க வாழறீங்க! பிற்காலத்திலே உணருவீங்க, வாழ்க்கையை தொலைத்துவிட்டதை! என் அனுதாபங்கள்!"
இப்படித்தான், அவளிடம் யாராலும் பேசி ஜெயிக்க முடியாது!
புடவை கட்டிக்கொள்வதாலேயே, அவளை பத்தாம்பசலியாக நினைத்துவிடாதீர்கள்!
நீச்சல் போட்டி, வாள் போர், மல் யுத்தம், பேச்சுப்போட்டி எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசு வாங்கியிருக்கிறாள்.
முற்போக்குச் சிந்தனையின் ஒரு வீச்சாகத்தான், தன் விருப்பப்படி வாழும் துணிவின் அம்சமாகத்தான், சேலையணிதல்!
உஷா திரும்பத் திரும்ப வலியுறுத்துவது:
அரசாங்கம்: அடங்கி நட, இல்லையேல், ஜெயில்!
கல்விக்கூடம்: பாஸ் அல்லது ஃபெயில்!
மதவாதிகள்: சொல்படி நட, இல்லையேல் ஹெல்!
இப்படி இந்த சமுதாயமே நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது! பயம்! பயம்! பயம்! எங்கும் எதிலும் பயம்! நாடு விடுதலை அடைந்து எழுபாண்டுகளுக்கு மேல் ஆகியும், தனிமனிதனுக்கு இன்னும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை!
நமது முதல் வேலை, இந்த பயத்திலிருந்து விடுபடுவது!
அவள் வகுப்பறைக்குள் நுழைந்ததும், மற்ற மாணவிகள் அவளை சூழ்ந்துகொண்டனர்.
" பட்டுமாமி! எங்களுக்குள்ளே ஒரு விவாதம்! இந்த பொள்ளாச்சி பெண்கள் கற்பழிப்பு விஷயத்திலே, பெண்கள் சமுதாயம், குறிப்பாக கல்லூரி மாணவிகள், கண்டனம் தெரிவிக்கணும். ஏன்னா, பாதிக்கப்பட்டிருக்கிற பெண்களில் பெரும்பாலோர், கல்லூரி மாணவிகள்!
இந்த வாதம் சரியில்லைன்னு ஒரு குரூப்! அவங்க வாதம், இது அரசாங்கமும் போலீஸும் நீதிமன்றங்களுமே தீர்க்கமுடியாத பிரச்னை! நம்மால் ஒன்றும் செய்யமுடியாதுன்னு சொல்றாங்க! நீ என்ன நினைக்கிறே?"
உஷா சிரித்துவிட்டு சொன்னாள்.
" எந்தப் பிரச்னையிலும் நாம் ஊடகங்களில் வெளிவருவதை மட்டுமே மையமாக வைத்து யோசிக்கிறோம். ஊடகங்கள் வியாபார நோக்கத்துடன் விஷயங்களை ஏற்ற இறக்கத்துடன் சாதகபாதகத்துடன் உள்நோக்கத்துடன் உண்மையை பெரிதுபடுத்தியோ, திரித்தோ, குறைத்தோ வெளியிடலாம். அதனாலே, பொள்ளாச்சியிலே நடந்ததை மட்டும் வைத்து விவாதிப்பதைவிட, பொதுவாக பெண்களுக்கு இந்த நாட்டிலே இன்றைக்கு போதுமான அளவு பாதுகாப்பு இருக்கிறதா, அரசும் நீதித்துறையும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமா, போதாதெனில் வேறு என்னென்ன செய்யலாம்னு சிந்திக்கணும். ஒண்ணு செய்வோம். நம்ம பிரின்சியிடம் பர்மிஷன் கேட்டு, ஒரு கருத்தரங்கம் நம்ம கல்லூரியிலேயே நடத்துவோம். அதற்கு, அரசியல், காவல்துறை, நீதித்துறை, பெண்கள்சமுதாயம் போன்ற மாறுபட்ட பிரிவினரை அழைப்போம். மாணவிகள்சார்பில் நான் கலந்துக்க தயார்! சரியா?"
கூடியிருந்த மாணவிகள் உஷாவை தோளில் தூக்கிவைத்து குதூகலித்தனர்.
மண்டபம் நிரம்பி வழிந்தது. இருக்காதா பின்னே? முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறை முன்னாள் ஆணையர், ஓய்வுபெற்ற அரசு அரசு சீஃப் செக்ரடரி, அரசியல்கட்சித் தலைவர், கலந்துகொள்வதால், ஊடகங்களும் தங்கள் புகைப்பட கலைஞரையும் நிருபரையும் அனுப்பிவைத்திருந்தனர்.
கல்லூரி முதல்வர் வரவேற்க, முன்னாள் நீதிபதி தலைமையுரை ஆற்றினார். மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை கூறினர்.
இறுதியாக, தலைவர் "பிரச்னைபற்றி நிறைய பேசிவிட்டோம்.
இனி பேச அதிகமில்லையாதலால், மாணவி உஷா ஓரிரு நிமிஷங்கள் பேசுவார்." என்று கூறினார்.
உஷா மைக்கை சரிப்படுத்திக்கொண்டு, பேசினாள்.