" பெரியவர்கள் அனைவருக்கும் உரிய மரியாதையுடன், மிகப் பணிவாக ஒன்று சொல்லி அமைகிறேன், பிரச்னையின் மையப்பொருளே, பெண்களின் பாதுகாப்பு! ஆனால், இந்த மேடையிலே பேசுவோர்களிலே ஒரே ஒரு பெண்மணி நான்தான்! எனக்கு தலைவர் ஒரிரு நிமிஷம் பேச அவகாசம் தந்திருக்கிறார். இதுதான் நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம். சம்பந்தப்பட்டவர்களை ஓரங்கட்டிவிட்டு, மற்றவர்கள் முடிவெடுத்து அந்த முடிவை திணிப்பது வழக்கமாகிவிட்டது........."
அரங்கமே எழுந்து நின்று கைதட்டி உஷாவை ஆதரித்தது.
உடனே தலைவர் எழுந்து, " எல்லோரிடமும், குறிப்பாக உஷாவிடம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உஷா நிறையப் பேசட்டும், நேரத்தைப்பற்றிய கவலையே வேண்டாம். பெண்குலத்தின் சார்பாக இப்போது மாணவி உஷா பேசுவாள்..." என்றார்.
" தலைவரின் பெருந்தன்மைக்கு என் மனப்பூர்வமான நன்றி. எல்லோருக்கும் ஒரு உத்தரவாதம் தருகிறேன். காலத்தை வீண்டிக்காமல், ரத்னச் சுருக்கமாகப் பேசி முடிக்கிறேன்............."
அரங்கிலிருந்து ' நிறைய பேசு' என்று குரல்கள் எழுந்தன.
அவையை நோக்கி கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, உஷா தொடர்ந்தாள்.
" பிரச்னையில் அடிப்படையானது, ஆண்கள், பெண் உடலுக்காக பலாத்காரத்தில் ஈடுபடுவது! கல்லூரி மாணவி மட்டுமல்ல, மூன்றுவயது சிறுமியிலிருந்து எண்பது வயது கிழவிவரை எவரையும் விட்டுவைக்கவில்லை, இந்த ஆண்கள்!"
அரங்கிலிருந்து 'ஆம்,ஆம்' என்று குரல்கள் எழுந்தன.
" ஆண்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. கிரிமினலா, நீதிபதியா என்று பாகுபாடு இல்லை. தனியிடமா, பொது இடமா என்றும் பார்ப்பதில்லை. தனிநபராகவும் வருவான். நான்குபேராகவும் வருவார்கள்...............இதுவரையில் நான் பேசியதில் ஏதேனும் பிழை உள்ளதா? சொல்லுங்கள்!"
அரங்கிலிருந்து " இல்லை, இல்லை" என குரல்கள் வந்தன. தலைவரும் எழுந்து " தவறேதும் இல்லை, உண்மைதான்." என்றார்.
உஷா தலைவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தொடர்ந்தாள்.
" சிலர் இதற்கு காரணமாக பெண்கள் அரைகுறையாக உடை உடுத்துவதை கூறுவார்கள். மூன்றுவயது குழந்தையும் எண்பது வயது கிழவியும் அந்த தவறை செய்தார்களா? வேறுசிலர், ஊடகங்களையும் சினிமாக்களையும் காரணம் காட்டுவார்கள். ஊடகங்களும் சினிமாக்களும் இல்லாத ராமாயண காலத்திலேயே நான்கு வேதம் படித்த பிரும்மஞானி ராவணேஸ்வரன் மாறுவேடம்போட்டு பிறர்மனைவி என்று தெரிந்தும் சீதையை தூக்கிச்செல்லவில்லையா? நூற்றுமுப்பது கோடி மக்கட்தொகையில் சரிபாதி பெண்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தர கோடிக்கணக்கில் காவலர்களை அரசு நியமிக்கமுடியுமா? குற்றம் நடந்தபிறகு, குற்றவாளியை கண்டுபிடித்து கைதுசெய்யலாம், தடுக்கமுடியுமா குற்றத்தை?
காவல்நிலயத்திலேயே காவலர்களாலேயே சீரழிக்கப்படுகிற பெண்களுக்கு யார் பாதுகாப்பு?
நீதிமன்றங்களில் வழக்கு தொடருவதற்கே சில ஆண்டுகள், பிறகு வழக்கு விசாரணையில் சில ஆண்டுகள், பிறகு தீர்ப்பு வழங்க ஓரிரு ஆண்டுகள், அந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு, ஹைகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, டிவிஷன் பெஞ்ச், ஃபுல் பெஞ்ச் .......முடிவதற்குள், பாதிக்கப்பட்ட பெண்ணின் கதி, அவளை மணமுடிக்கவோ, அடைக்கலம் தரவோ எந்த ஆணாவது முன்வருவானா? 'கெட்டுப்போனவள்' என்று முத்திரை குத்திவிட்டு, சமயம் கிடைத்தால், அவளை ருசிபார்க்கவும் தயங்காத ஆண்கள், உண்டா, இல்லையா?........."
அரங்கிலிருந்து 'உண்டு, நிறைய உண்டு' என குரல்கள் வந்தன.
" இன்றைய சமுதாய அமைப்பிலும், ஆணாதிக்க மனப்பான்மையிலும், மக்களாட்சியில் சட்டத்திலுள்ள ஓட்டைகளிலும், கல்விமுறையிலும், பிரச்னைக்கு தீர்வு காண நெடுங்காலமாகும். அதுவரையில், பெண்கள் தாங்களே பாதுகாப்பை தேடிக்கொண்டாகவேண்டும். தற்காப்பு கலைகளை பயிலுங்கள். தற்காப்புக்கு ஆயுதங்களை கையிலேந்த பயப்படாதீர்கள்! சட்டத்தில் அதற்கு வழி உண்டு. பெண்குலத்துக்கு துணிவு வர, பெண்களில் முற்போக்கானவர்கள், படித்தவர்கள், மற்ற பெண்களுக்கு பாடம் நடத்துங்கள்! வழி காட்டுங்கள்!"
தலைவர் முடிவுரையில், " மாணவி உஷா சொன்னதுதான் உண்மையான நிலை! உஷாவையும் அவளைப்போன்ற பெண்களையும் நிறையப் பேசவைத்து ஆண்களிலே நல்லவர்களின் உதவியுடன் சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட வழி செய்யவேண்டும்" என்று கூறி முடித்தார்.
அன்றிலிருந்து பட்டுமாமி, உஷாராணியாக மாறினாள்.
பயத்தை விட்டொழித்து வாழ்வில் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும். பிறரின் நகலாக இருப்பதை விட்டொழித்து, தான் தானாக வாழவேண்டும்.
இந்த பிரசாரம் சூடுபிடித்து, கல்லூரியில் புதிய கலாசாரம் பிறந்தது!