சிறுகதை - அவன் சொன்னால் நடக்கும்! - ரவை
அவனிடம் என் அந்தரங்கமான இந்த விஷயத்தை சொல்லி யோசனை கேட்பதா, வேண்டாமா என்று மனதிலே பெரிய குழப்பம்! ஏனெனில், அவன் சொன்னால், அதுதான் நடக்கும் என்று அனுபவத்தில் பலமுறை பார்த்துவிட்டேன்.
எனக்கு சாதகமாக சொல்லிவிட்டால், சந்தோஷம்! பாதகமாக கூறினால், என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியாதே!
உலகமே, ஐ.சி.சி. உலக கிரிக்கெட் போட்டியில், இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதும், என்று அறுதியிட்டு உறுதியாக எல்லோரும் நம்பி கூறியபோது, அவன்மட்டும், அலட்சியமாக, " அரை இறுதியில் மூன்றாவதாகவும் நான்காவதாகவும் வந்திருக்கிற இங்கிலாந்தும் நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோதும்!" என்றான்.
நான் அவனை தனியே அழைத்து தாஜா செய்து, " எப்படி அத்தனை உறுதியாக சொல்கிறாய்?" என்று கேட்டேன்.
" இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு சொற்களும் நெடில் எழுத்தில் நிறைவாகின்றன, அதாவது முடியாமல் இழுத்தடிக்கிறது, ஆனால், இங்கிலாந்தும் நியூசிலாந்தும் 'லாண்ட்' என முடிகின்றன......."
" அட போடா, ஞானசூன்யம்! நீ ஏதோ கிரிக்கெட் ஆட்டத்தில் இரண்டு டீம்களும் அதிக திறமை வாய்ந்தவை என விளக்குவாய் என நினைத்தால், கிளி ஜோசியம் சொல்றே? முட்டாள்!"
என்னைப் பார்த்து, அவன் சிரித்தான்.
" என்னை முட்டாள்னு நினைச்சு எப்படியாவது என் வாக்கு எப்போதும் பலிக்கிற ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்னு நீ திட்டம் போட்டது, எனக்குத் தெரியாதா? ஏமாறுவேனா?"
அவன் சொன்னது உண்மைதான்! என் அந்தரங்கமான எண்ணம், அவன் சொன்னதுதான்!
இதற்குமுன் பல சந்தர்ப்பங்களில் அவன் வித்தியாசமாக அபிப்பிராயம் தெரிவிப்பான், நாங்கள் யாரும் அலட்சியப்படுத்துவோம், இறுதியில், அவன் வாக்குத்தான் பலிக்கும்!
இப்படித்தான் பொதுத் தேர்தலின்போது, பாராளுமன்றத்துக்கு தி.மு.க. கூட்டணிக்கு மெஜாரிடி கிடைக்கும் என மற்றவர்கள் பொதுவாக கூறியபோது, அவன்மட்டும்தான் குறிப்பிட்டு முப்பத்தேழு இடங்களில் வெற்றி பெறும், என்றான்.
தேசீய அளவில், எந்தக் கட்சிக்குமோ, கூட்டணிக்குமோ, அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமெண்டாகத்தான் தேர்தல் முடிவு இருக்கும் என எல்லோரும் சொன்னபோது, அப்படி எந்த ஒரு சிக்கலும் இல்லாமல், பி.ஜே.பி. தனிப்பெரும்பான்மை பெறும்