சிறுகதை - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! - ரவை
அரசூர் ரயில் நிலயத்திலிருந்து, மகாதானம் எனும் கிராமத்தை அடைய பத்து கிலோமீடர் நடந்தே செல்வதென தீர்மானித்ததின் காரணம், பொட்டு வைத்த வட்டநிலா வானில் அரசோச்சியது! தென்றல் உடலை இதமாக வருடியது! மனமும் மகிழ்வில் மிதந்தது!
அந்தக் காலத்து சினிமாக்களில் வந்த பாடல்களை வாய்விட்டு உரக்கப் பாடிக்கொண்டே, கைவீசி நடந்தேன்.
ஏறக்குறைய எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடி முடித்தபிறகு, திடீரென, சிவாஜி வாயசைக்க, எம்.எஸ்.வி. இசையமைக்க, கண்ணதாசன் பாட்டெழுத, வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது!
'கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்-அவன்,
காதலித்து வேதனையில் வாடவேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணரவேண்டும்!'
பல்லவி எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால், திருப்பித் திருப்பி அதையே பாடிக்கொண்டே நடந்தேன்.
" நிறுத்து!"
எங்கிருந்தோ வந்த குரலில் தொனித்த மிரட்டலைக் கேட்டு பயந்தே போய், பேச்சுமூச்சின்றி நின்றேன்.
நெடுஞ்சாலை! இரவு நேரம்! ஈ, காக்கா தென்படவில்லை. தன்னந்தனியாக நான் மாட்டிக்கொண்டேன்!
குரலின் சொந்தக்காரன் மரியாதை தெரிந்தவன் போலும்!
பின்னாலிருந்து பயமுறுத்துவது நாகரிகமில்லை என உணர்ந்து, எதிரே பிரசன்னமானான்.
ஆள், வாட்டசாட்டமாக இருந்தான். (பழக்கத்தில் உள்ள சொல், 'வாட்டசாட்ட'த்துக்கு பொருள் எனக்குத் தெரியாது).
கம்பீரமாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தான்.
என் எதிரில், வழியை மறித்துக்கொண்டு நின்றவாறு, கேள்விக்கணையை தொடுத்தான்.
" நான் தேமேன்னு ( இந்தச் சொல்லுக்கும் பொருள் தெரியாது) உங்களில் எவருடைய வம்புக்கும் வராமல், எங்கோ மறைவாகத்தானே உள்ளேன், என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்?"
" ஐயா! வணக்கம்! தங்களைப்போல, நானும் தேமேன்னு நெடுஞ்சாலையில் தன்னந்தனியாக நடக்கிறபோது தோன்றுகிற பயத்தை விரட்டியடிக்க, வாய்க்கு வந்ததை