" கண்ணதாசன் பாட்டையே தங்களுக்கு பதிலாகத் தருகிறேன்,...
'அவனியில் பிறக்கவைத்து,
ஆசையில் மிதக்கவிட்டு,
ஆட டா ஆடு என்று
ஆட்டிவைத்து மகிழ்ந்திருப்பேன்!
வருவான், படுவான், பட்டதே
போதும் என்பான், பாவியவன்!
பெண்களையே படைக்காமல்
இருந்திடுவான்........'
தங்களுக்கு, தான் படும் துன்பத்தை அப்படி மறைமுகமாக தெரிவிக்கிறான், அவ்வளவுதான்!......."
" அப்படியா!"
" தங்களிடம் இந்த சிறியவன் ஒரு சந்தேகம் கேட்கலாமா?"
" தாராளமாக......"
" படைக்கப்பட்ட எல்லா பிறவிகளும், பொருட்களும், ஈரேழு உலகமும் தங்களுடன் ஐக்கியமாகி நிம்மதியாக இருந்தபோது, ஏன் அவைகளை தங்களிடமிருந்து பிரித்து தான் யாரென்பதையே மறக்கச்செய்து, படைக்கப்பட்டு, இப்படி துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும்ஆளாக்குகிறீர்கள்? இதில் என்ன ஆனந்தம்? எங்கள் கவிஞன் கம்பன் சொல்கிறான், 'அலகிலா விளையாட்டுடையான், அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் யாங்களே' என்று, தாங்கள் தொடர்ந்து முடிவின்றி விளையாடுவதாகச் சொல்கிறானே, எங்கள் துன்பம் தங்களுக்கு விளையாட்டாக உள்ளதா? அதிலும், மனிதப் பிறவிக்கு சற்று, இல்லை இல்லை, கூடுதலாகவே வேதனையை தருகிறீர்களே, நியாயமா?"
" மற்ற படைப்புகளைவிட, மனிதனுக்கு கூடுதலாக ஆறாவது அறிவை தந்திருப்பதை ஏன் மறைக்கிறாய், அதையும் சொல்லவேண்டியதுதானே! அந்த ஆறாவது அறிவை, பகுத்தறிவை, பயன்படுத்தாமல், நீங்கள் வேதனைப்பட்டால், நான் என்ன செய்வது?"
" எங்களை தங்களிடமிருந்து பிரித்து பூமிக்கு ஏன் அனுப்பினீர்கள்?"
" பதில் சொல்கிறேன், பாவம்! உனக்கு கால் வலிக்குமே! என் தோளில் ஏறிக்கொள், பேசிக்கொண்டே போகலாம்!"
" இத்தனை இளகிய மனம் கொண்ட தாங்களா, எங்களுக்கு கொடுமை செய்தீர்கள் என