சிறுகதை - எல்லோரும் நல்லவரே! - ரவை
" அவர் அப்படி செய்வார்னு நான் கனவிலேகூட நினைக்கலே! யார், எதை செய்வார்னு நம்பவே முடியலியே! பல வருஷமா, சாமி தரிசனம் செய்ய வருகிற லட்சக்கணக்கான பக்தர்கள், சாமியை தரிசனம் செய்கிறாங்களோ இல்லையோ, அவரைப் பார்த்து, அவர் எல்லோர்க்கும் சொல்கிற, அந்த ஒத்தை வார்த்தையை, 'சாமியை நம்புங்க! அவர் யாரையும் கைவிடமாட்டார்!'னு சொல்றதைக் கேட்டு, நம்பிக்கையோட போவாங்களே, அவரா இப்படி செய்தார்?"
ஊரே இதைச் சொல்லி புலம்பியது!
அன்று காலை செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் வந்த அந்த செய்தியை படித்த அத்தனை பேரும், செய்த முதல் காரியம், செய்தியை படிக்காத மற்ற அனைவருக்கும், அதைச் சொல்லி, கும்பல் கும்பலாக ஆங்காங்கே கூடி புலம்புவதே!
தப்பு செய்வது சகஜம்! திருத்திக்கொள்ளலாம்! ஆனால், இது மகா பாபமாயிற்றே, எவருமே, கொடிய கள்வன்கூட செய்யக்கூடாத செயலாயிற்றே, அதை எப்படி அவர் செய்தார்? மற்றவர்களின் பாபங்களுக்கு பரிகாரம் சொல்பவர் அப்படி செய்யலாமா?
இப்படி புலம்பினார்களே தவிர, ஒருவர்கூட, நுனிநாக்கால்கூட, 'சேச்சே! அவர் ஒருக்காலும் அப்படி செய்திருக்கமாட்டார்' என்று சொல்லவேயில்லை!
கங்காதர தீட்சதரின் குடும்பம், இவ்வளவு ஆண்டுகளாக பெரும் மரியாதைக்குரியதாக மதிக்கப்பட்டுவந்த குடும்பம், இன்று காலையிலிருந்து, ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிவிட்டது.
" எப்போது அவர் தன் மகளின் திருமணத்தை அவ்வளவு தடபுடலாகச் செய்தாரோ, அப்பவே நான் சந்தேகப்பட்டேன், அவரிடம் ஏது இவ்வளவு பணம்?னு! இப்பத்தானே தெரியுது, ரகசியம்!"
" அதை விடுங்க! அவர் மகனை மேல் படிப்புக்கு அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்காரே, அதற்கு ஏது பணம்? எல்லாம் தில்லுமுல்லுதான்!"
" அதெப்படி தினமும் கடவுளை தொட்டு, குளியல் செய்துவைத்து, அலங்காரம் செய்கிறவராலே, அந்த கடவுளையே கடத்தல் பண்ண மனம் வந்தது?"
செய்தியை விவரமாகத் தெரிந்துகொள்ளலாமா?
"தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகள் திருடப்படுவதை, போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குற்றத்தை ஆங்காங்கே சில பேர் கூட்டாகச் செய்துவருகின்றனர். ஆனால், அந்தக் கூட்டத்தினரில், ஒரு அர்ச்சகரே கலந்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது.