எந்த அளவுக்கு நம்புவார்களென சொல்லமுடியாது! பாவம்! உங்களை பார்த்தால், பரிதாபமாக இருக்கு!....."
"வக்கீல் ஐயா! நான் இப்போது செய்யாத குற்றத்துக்கு கைதாகியிருப்பது உண்மை! ஆனால், போன பிறவியிலே குற்றம் இழைத்துவிட்டு, தண்டனையிலிருந்து தப்பியிருக்கலாம், அதை சரிசெய்ய, ராமசந்திரமூர்த்தி இப்போது என்னை சிறை வைத்திருக்கிறார். அவரே சரியான நேரத்தில் என்னை விடுவிப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு......!"
" ஐயா! சொல்றேனேனேன்னு கோவிச்சுக்காதீங்க! உங்களை காப்பாற்றுவார்னு நீங்க முழுமையா நம்புகிற ராமசந்திரமூர்த்தி, தன் மனைவி சீதாபிராட்டியையே, யாரோ ஊரிலே சொன்னான்னு, பிராட்டி கர்ப்பமாயிருந்தபோதே, காட்டுக்கு அனுப்பினாரு, அவரா உங்களை காப்பாற்றப் போகிறார்? அவர் காலத்திலே, யாரோ ஒருத்தன்தான் சொன்னான், இன்று உங்களுக்கு விரோதமா ஊரே பேசுதே! என்னவோ நீங்க சிலையை களவாடினதை, அவங்க நேரிலே பார்த்தாற்போல, உங்களை திருடனாகவே முடிவு செய்து, 'அவர் இப்படி செய்யலாமா? மகா பாபம் ஆயிற்றே! அதிலே கிடைத்த பணத்திலே, தன் மகளுக்கு விமரிசையா கல்யாணம் செய்தாரு, மகனை மேல்படிப்புக்கு அமெரிக்கா அனுப்பிச்சாரு'ன்னு உங்களை குற்றவாளியாகவே முடிவு செய்து, எந்த தண்டனை தந்தாலும் தகும்னு தண்டோராவே போடறாங்க! அதனாலே, நியாயத்தை நிலைநாட்ட உங்களுக்கு, என்னைப்போல, வக்கீலைத் தவிர, கடவுள் வந்து உதவமாட்டார்னு புரிஞ்சிக்குங்க!"
'ராம, ராமா!'ன்னு தீட்சதர் காதுகளைப் பொத்திக் கொண்டார்.
தீட்சதருக்கும் டிரஸ்டி முதலியாருக்கும் ஜாமீன் கிடைத்த வெற்றிக்கு, வக்கீல், தன் திறமையினால்தான் கிடைத்ததென பெருமைப்பட்டபோது, தீட்சதர் அந்த ராமசந்திரமூர்த்திக்கு நன்றி செலுத்தினார்.
வீடு திரும்பியதும், அவருக்கு எட்டிய முதல் செய்தி, கோவில் நிர்வாகத்தை, அரசின் இந்து அறநிலைய போர்டு எடுத்துக்கொண்டுவிட்டதாகவும், வழக்கு முடிந்து தீர்ப்பு வெளிவரும் வரையில், கேஸில் தொடர்புடைய எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாதெனவும் தடை செய்துவிட்டனர்!
மீனாட்சியம்மா இனி குடும்பத்தை, வருமானத்துக்கு வழியில்லாமல், எப்படி நடத்துவதென தலையில் கைவைத்து கவலைப்பட்டபோது, தீட்சதர் தன் மனதுக்குள் புலம்பினார்.
" ஹே ராமசந்திரமூர்த்தி! இவ்வளவு தண்டனை பெறும் அளவுக்கா, நான் போன பிறவியில் பாவம் இழைத்திருக்கிறேன்? நீ என்னை இந்த பிறவியிலேயே முழுவதுமாக தண்டித்துவிடு! அடுத்த பிறவியாவது, எனக்கு நல்லதாக அமையட்டும்!"