வயிற்றுப் பிழைப்புக்கு, தீட்சதர், வைதீகராக, வீடுகளுக்குச் சென்று வைதீக காரியங்களைச் செய்துவைப்பவராக மாறினார்.
அந்த மாறுதல் பசி, பட்டினியிலிருந்து காப்பாற்றியதே தவிர, தீட்சதரின் இதயத்தை குத்திக் கீறி காயப்படுத்த தவறவில்லை!
தவறாமல், எல்லா வீடுகளிலும், அவரிடம் துளைத்தெடுத்த விசாரணையும் துருவித் துருவிக் கேட்ட கேள்வியும் இதுதான்:
"நீங்க நல்லவர்னு நாங்க நம்பறோம், ஆனா, அசல் சிலைகள் களவாடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டது, தினமும் அந்த சிலைகளை கையால் தொட்டு, குளியல் செய்துவைத்து, அலங்கரித்து, பூஜிக்கிற உங்களுக்கு சிலை மாறியது எப்படி தெரியாமல் போயிருக்கமுடியும்? நீங்கள், குற்றம் செய்த, வேறு யாரையோ, காப்பாற்ற உண்மையை மறைக்கிறீர்கள்! இது நியாயமா? பயப்படாமல், நடந்ததை விசாரணையில், ஒப்புக்கொண்டு சரண்டராகி, அப்ரூவராக மாறிவிடுங்கள்!"
தீட்சதர் இதை தன் மனைவியிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாமல் தனக்குள்ளேயே மருகி மாய்ந்தார்!
" ஶ்ரீராமா! இதற்குமேலும் நீ என்னை சோதித்தால், நான் தாங்கமாட்டேன். விரைவில் எனக்கு விடுதலை கொடு!"
மறுநாள் செய்தித்தாளில் பிரசுரமான புதைபொருள் ஆராய்ச்சியாளர் நா.முருகானந்தம் விடுத்திருந்த அறிக்கை, தமிழ்நாட்டையே உலுக்கியது!
" ஏமாந்தூர் கோவிலில், அசல் சிலைகள் களவாடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை, அனுமானத்தின்பேரில் விசாரணையும் வழக்கும் தொடர்ந்திருப்பது, தவறானது.
ஆராய்ச்சி முடிவுகளின்படி, பிரசித்தி பெற்ற சில கோவில்களில்தான் ஐம்பொன் சிலைகள் ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகின்றன. எல்லா கோவில்களிலும் ஐம்பொன் சிலைகளே இருந்தது போலவும், ஏமாந்தூரிலும் ஐம்பொன் சிலைகளே இருந்திருக்கவேண்டும் என்ற அனுமானமே, காவல்துறை விசாரணை மற்றும் வழக்கின் அடிப்படை! அந்த அனுமானம் தவறானது.
ஏமாந்தூர் கோவிலில் இருந்ததாக நம்பப்படுகிற ஐம்பொன் சிலைகளை பார்த்தவர்கள் எவரேனும் உண்டா? புகைப்படங்களோ, பக்தி நூல்களில் காணப்பட்டதாகவோ, கல்வெட்டில் எழுதிவைக்கப்பட்டுள்ளதாகவோ, ஏதேனும் ஆதாரம் உண்டா?