சிறுகதை - சீதாவா! வேண்டாமே! - ரவை
" மாம்ஸ்! எப்பவும் டேபிளில் தலையை கவுந்துண்டு, வேலை செய்தால் மட்டும், போதாது! முன்னுக்கு வரணும் என்றால், அதோ பார்! அங்கே என்ன நடக்குதுன்னு......."
ஜே.கே. என்கிற கண்ணன், உடனே நிமிர்ந்து பார்த்தான்.
ஆர்.வி. என்னும் வெங்கி, பை நிறைய கறிகாய் எடுத்துக்கொண்டு, மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.
பத்து நிமிஷம் கழித்து, அவன் வெளியே வந்தபோது, அவன் தோளில் கைபோட்டு, மேனேஜரும் சிரித்தபடியே வந்தார்.
பிரேம்நாத் தொடர்ந்து கண்ணனை வெறுப்பேற்றி, உசுப்பிவிட்டான்.
" நீ பார்த்துண்டே இரு, உனக்கு கிடைக்கவேண்டிய அடுத்த பிரமோஷனை, வெங்கி தட்டிண்டு போகப் போறான்......"
" பிரேம்! கேவலமான வழியிலே வர பிரமோஷன் எனக்கு தேவையில்லேடா!"
" வீராப்பா பேசி, இப்படி ஏமாந்துபோய், பிரமோஷனே கிடைக்காம, ரிடையரான ரங்கன், பிரிவுபசாரத்திலே, கண்ணீர் விட்டானே, அதை மறந்துடாதே! உனக்கு பிள்ளைகுட்டி இருக்கு, உழைக்கவும் செய்கிறே, இந்த வீண் ஜம்பத்தினாலே பிரமோஷனை கோட்டை விட்டுடாதே! நண்பனா நான் சொல்றது, அதுதான்!"
"சரிடா, பிரேம்! நானும் மேனேஜருக்கு கறிகாய் வாங்கித்தரணும்னு சொல்றியா?"
" முட்டாள்! நீ ரூட்டை மாற்றுடா! வேற விதமா, கவர் பண்ணப்பாரு!"
" அதையும் சொல்லேன்டா!"
" மாம்ஸ்! மேனேஜருக்கு கல்யாணம் செய்கிற வயசிலே ஒரு மகள் இருக்கா, அவளுக்கு பொருத்தமா நல்ல பையனா பார்த்துச் சொல்லி, கல்யாணத்தை முடித்துக் கொடுடா! அப்புறம் பாரு, என்ன நடக்குதுன்னு!"
" ஏதாவது நடக்கிற விஷயமா சொல்லுடா! எனக்கு அந்தப் பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாது, எப்படிடா........?"
" மாம்ஸ்! சாப்பிடுன்னு அட்வைஸ் பண்ணலாம், ஊட்டிவிட முடியுமாடா?"
பிரேம், தன் காரியம் முடிந்த மகிழ்ச்சியில் நகர்ந்து தன் இடத்தில் அமர்ந்து ஜே.கே.யை பார்த்தான்.
அவன் தலை,இப்போது கவிழ்ந்து வேலையில் கவனம் செலுத்தவில்லை, மேலே எதையோ தேடியது, கண்கள் மூடியிருந்தன!
ஜே.கே. யோசிக்கத் துவங்கிவிட்டான்!
பிரேம், தன்வேலையில் கவனம் செலுத்தினான்.