சிறுகதை - அப்பா - பிந்து வினோத்
என்னுடைய கைப்பேசி அலறியது. அழைப்பது என் அக்கா என்பதை உணர்ந்து, எடுத்து
"ஹலோ அக்கா..." என்றேன்.
"ஹாய் டி அமுதா... இன்னைக்கு ஃபாதர்ஸ் டே. அப்பாக்கு விஷ் பண்ணுன்னு ஞாபகப் படுத்த தான் கால் செய்தேன்... நான் கிளினிக் கிளம்பனும் அப்புறம் பேசுறேன்..."
எப்போதும் போல் தந்தி பாஷையில் பேசி விட்டு அழைப்பை கட் செய்து வைத்தாள் என் அக்கா.
இன்று தந்தையர் தினம் என்பது எனக்கு நினைவே இல்லை தான். அப்பாவை ஃபோனில் அழைத்து வாழ்த்த வேண்டும். அப்பாவின் நினைவு வந்த உடன், மனதில் தானாக ஒரு வித சந்தோஷம் தோன்றியது...
என்னுடைய அப்பாவின் பெயர் கண்ணன். என் பெற்றோரின் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் நானும் என் அக்காவும், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் அப்பாவிற்கு நிலையான அரசு உத்தியோகம் இருந்தது. அவர் முகத்தில் எப்போதும் சிறிது கடுமை இருக்கும். அவர் சிரித்துப் பேசி நான் பார்த்ததே இல்லை. அவரின் நினைவு வந்தாலே எப்போதும் அதனுடன் நினைவு வரும் அவருடைய அறிவுரை, "நல்லா படி..." என்பது தான்.
எங்கள் வீட்டில் பொதுவாக எல்லா முடிவுகளையும் எடுப்பது என் தந்தை தான். மற்றவர்களுக்கு அதை கேட்கும் உரிமை மட்டும் உண்டு, ஆனால் மறுத்து பேசும் உரிமையோ, கேள்வி கேட்கும் உரிமையோ இல்லை. யாருடன் விளையாடுவது என்பதில் தொடங்கி என்ன விளையாடுவது என்பது வரை என் தந்தையின் தலையீடல் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டின் செல்ல பிள்ளையான என்னால் மற்ற இருவரையும் போல் கேள்வி கேட்காது இருக்க முடியாது. பல முறை அப்படி கேள்வி கேட்டும், மறுத்து பேசியும் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன். அப்படி திட்டு வாங்கி நான் அழும் போதெல்லாம், என் அம்மா என்னை சமாதான படுத்துவது,
"அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றார்... சும்மா கேட்டால் என்ன?" என்பது தான்.