சிறுகதை - கோளறு பதிகம் - ரஞ்சகுமார்
பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்திரிகளுக்கே உரிய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் திரிந்தன. நான் OPD க்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றுபடி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஓரத்திலிருந்து கிழிபட்டுப்போன தோலோ, தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள ஒரு சிவந்த பேப்பர் நாடா போன்று காற்றில் துடித்தது. மிகுதிக் கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்துப் போயிருந்தன. பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டுச் சொட்டாக பாகுத்தன்மையுடன் ஒழுகித் தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று.
ஒரு ஸ்ரெட்சரில் பிரதேசம் கிடத்தப் பட்டிருந்தது. மறுகரம் சேதமெதுவுமின்றிச் சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட்சரின் ஓரத்தைப் பற்ற விளைந்தது போல் பாவனை காட்டிற்று. விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம் வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது.
ஒரு பெண்ணின் பிரதேசம் தான்.
சனங்கள் சிலர் கூடினார்கள். கூடவே ஈக்களும். ஓரு ஓடலிப் பையன் இன்னெரு ஸ்ரெட்சரை ஓசையெழத் தள்ளியபடி அவசரமாக வந்தான். தோசையைத் திருப்பிப் போடுவதுபோல அசிரத்தையுடனும், இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டிப் போட்டுக் கொண்டு OPD ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம் போலும்
அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள்