"கொஞ்சம் இருந்து ஒரேயடியா சாப்பிட்டுட்டு போயேம்பா. இன்னைக்குன்னு அம்மா ஒனக்காகத்தான நல்ல கறி ஆக்கிக்கிட்டு இருக்கேன்...!"
"நேரம் இல்லம்மா. சாப்பிட்டுப் போக நேரம் ஆயிடும். ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்" அவன் சைக்கிளில் ஏறிப் போவதை அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த பிள்ளைதான் படித்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டும். நல்லவன்தான். குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன்தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எப்படியோ அவனுக்கு வாய்த்த நண்பர்கள் சரியில்லை.
போன வருஷம் அவன் தமிழ்ப் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு முதல் பாரத்தில் படிக்க தேசியப் பள்ளியில் சேர்ந்தபோது கேசவன் என்ற ஒரு பையனோடு விடாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் படிப்பில் அக்கறை குறைந்தது. மார்க்குகள் குறைந்தன. பள்ளிக்கூடத்திற்கு அவன் முறையாக வருவதில்லை என்று அங்கிருந்து கடிதம் வந்தது.
கேசவன் நல்ல பிள்ளையில்லை என்று பார்வதி கேள்விப்பட்டிருந்தாள். அவன் குடும்பம் சிதைந்த குடும்பம். தலைவன் இல்லாத குடும்பம். ஏறக்குறைய பார்வதியின் குடும்பத்தைப் போலத்தான். ஆனல் பார்வதிக்குக் குடும்பத்தின் மேல் உள்ள அக்கறை கேசவனின் தாய்க்கு இருக்கவில்லை. அவள் மிகச் சுதந்திரமாகக் கெட்டுத் திரிந்து அவன் தலையிலும் தண்ணீர் தெளித்துச் சுதந்திரமாகக் கெட்டுத் திரியவிட்ட மாதிரிதான் இருந்தது.
"ஏம்பா, அந்தக் கேசவனோட உனக்கென்ன அவ்வளவு நெருக்கம்? அவன் நல்லவன் இல்லன்னு எல்லாரும் சொல்றாங்களே!" என்று பார்வதி ஒருநாள் விசாரித்துப் பார்த்தாள்.
"சும்மாதாம்மா! அவன்தான் அடிக்கடி கூப்பிட்றான். நான் அவ்வளவு வச்சிக்கிறதில்ல!" என்றான் முத்தையா.
"ஜாக்கிரதப்பா! அப்பனில்லாத பிள்ளைகளா நாந்தான் உங்கள வளக்க வேண்டியிருக்கு. நீதான் படிச்சி முன்னுக்கு வந்து குடும்பத்த காப்பாத்தணும். என் நம்பிக்கைய வீணாக்கிடாத!"