சிறுகதை - நாளைக்கு - ரெ.கார்த்திகேசு
கடித உறையைப் பார்த்ததுமே ராஜேஸ்வரிக்கு மனசுக்குள் கிலி பிடித்துவிட்டது. "அரசாங்கச் சேவையில்" என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பழுப்பு உறை. எங்கிருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. யார் எழுதியிருப்பார்கள் என்று புரிந்தது. ஓரத்தைக் கிழித்துப் படித்தாள். பத்மாதான் எழுதியிருந்தாள். தமிழில் சுருக்கமாக எழுதியிருந்தாள். இது படிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடிதம் என்று காட்ட இளங்குற்றவாளிகள் நிலையத்தின் அரசாங்க முத்திரையும் இருந்தது.
"அன்புள்ள அக்காவுக்கு, வணக்கம்.
இங்கு சுகம். உங்கள் சுகம் அறிய ஆவல்.
நிற்க, அடுத்த மாதக் கடைசியில் என்னை இங்கிருந்து விடுவிக்கப் போகிறார்களாம். இன்று காலை மீட்டிங் போட்டு முடிவு செய்தார்களாம். என்னுடைய மேற்பார்வை அதிகாரி சொன்னார். ஒரு வருஷம் இடையிடையே வீட்டுக்கு வந்து மேற்பார்வை பார்ப்பார்களாம். யாராவது பொறுப்புள்ளவர்கள் வந்து கையெழுத்துப் போட்டு அழைத்துப் போக வேண்டும். எனது கார்டியன் என்ற முறையில் உங்களுக்கும் விரைவில் கடிதம் எழுதுவார்களாம்.
அக்கா, தயவு செய்து அடுத்த மாதக் கடைசியில் வந்து கையெழுத்துப் போட்டு என்னை அழைத்துப் போங்கள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நேரில் வந்து பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.
இப்படிக்கு
பத்மா"
மனதில் திகில் படர்ந்தது. இவ்வளவு சீக்கிரமாகவா இரண்டு வருஷம் ஓடிவிட்டது? இல்லை. இரண்டு வருஷம் இன்னும் முடியவில்லை. நன்னடத்தைக்காக தண்டனைக் காலத்தைக் குறைத்திருக்கிறார்கள்.
கடிதத்தை மேசை டிராவரில் ஒளித்து வைத்தாள். அது எளிது. ஆனால் விஷயத்தை ஒளித்து வைக்க முடியுமா? நாளை இது வெடிக்காதா?