"ஒன் தங்கச்சி பொல்லாதவ ராஜி. இதுக்குத்தான் அவள இங்க சேக்காதேன்னு சொன்னேன்."
"ஏன்? அவ என்ன பண்ணினா?"
"பாஸ்கரன் மேல இத்தன அநியாயமா சொல்றாளே! அவன் சாப்பிட்டுட்டு வெளிய போனவன் இப்பதான் வர்ரான்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதாம்! அம்மாவும் அப்படிதான் சொல்றாங்க!"
"அப்ப பத்மா இப்படி ஒரு பொய்ய இட்டுக் கட்டிச் சொல்றாளா?"
"யாரோ ஒரு பையனோட அவளுக்குத் தொடர்பு இருக்காம். அவனாத்தான் இருக்கும்னு பாஸ்கரன் சொல்றான்!"
குளிக்காமல் உடை மாற்றாமல் அறைக்குள் துவண்டு கிடந்த பத்மாவை இழுத்து வந்தாள் ராஜி. "சொல்லுடி! யாரோ இன்னொரு பையனாமில்ல! அப்படியா?"
"ஐயோ!" என்று அழுதாள் பத்மா. "அந்தப் பையன் இல்லக்கா. நான் பள்ளிக்கூடத்தில இருந்து வரும்போது அவனோட நடந்து வர்ரத இந்த பாஸ்கரன் அண்ணன் பாத்திருக்கு. ஒருநாள் என்ன மிரட்டினிச்சி. "ஒன்னோட போய் ·பிரண்டான்னு கேட்டிச்சி!" இல்லைன்னேன். தான் செஞ்சிட்டு அவன் மேல வீணா பழி போடுதுக்கா!"
சேகரன் எரிந்து விழுந்தான். "யார நம்பப் போற நீ? என் தம்பின்னா அவ்வளவு இளக்காரமா? அவன் இந்த மாதிரி காரியத்த எல்லாம் செய்ய மாட்டான். இந்த பொய்க்கார நாயோட நடிப்பப் பார்த்து அவன குத்தம் சொல்லாத! இந்த நாய எங்காவது தெரத்து!" அவன் போய்ப் படுத்து விட்டான்.
தன் ஆத்திரத்துக்கு தங்கையின் முதுகில் ரெண்டு போட்டுவிட்டு அவளை அவள் ஸ்டோர் ரூம் அறைக்குள் இழுத்துக் கொண்டு போகும் போது பாஸ்கரன் தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். பத்மாவை முறைத்தான். "பிளடி ப்ராஸ்டிடியூட்" என்று சொல்லிவிட்டு வெடுக்கென்று அறையில் புகுந்து சாத்திக் கொண்டான்.