ஒரு நாள் ராஜி வீடு திரும்பிய போது பத்மா கசங்கிக் கிடந்தாள். ராஜியின் தோள்களைக் கட்டிக் கொண்டு கதறினாள். "அந்த அண்ணன், அந்த அண்ணன் என்னைப் பிடிச்சி கீழ தள்ளி...." தொடைகளில் ரணம் இருந்தது.
ராஜி வெகுண்டெழுந்தாள். மாமியிடம் சொன்னாள். மாமி எதிர்க் கோபம் காட்டினாள். "இது என்ன அநியாயம்! பாஸ்கரன் இன்னக்கி முழுக்க வீட்டுக்கே வரலியே... அவன் மேல இப்படிப் பொய்ச்சாட்டு சாட்டுதே இந்த சனியன்..." என்றாள்.
"நீங்க இன்னக்கி முழுக்க வீட்டில இருந்திங்களா?" என்று கேட்டாள் ராஜி.
"ஆமா வீட்லதான் இருந்தேன்...!" என்றாள் மாமியார்.
"இல்லக்கா, இந்த மாமி கடைக்குப் போறன்னிட்டு போனாங்க, அப்பதான்..." என்றாள் பத்மா விக்கலுக்கிடையே.
"ஆமா ஒரு அஞ்சி நிமிஷம் போனேன்! அதுக்கென்ன? அதுக்குள்ள ஒரு கதய ஜோடிச்சிட்றதா?" என்றாள் மாமியார்.
மைத்துணனை வீட்டில் காணவில்லை. சேகரன் இரவு வந்ததும் அவனிடம் சொன்னாள். எடுத்தவுடன் "சீச்சீ அப்படி இருக்காது!" என்றான் சேகரன்.
இரவு விளக்கணைத்து அத்தனை பேரும் மனதில் தணல்களைச் சுமந்துகொண்டு தூங்காமல் சாய்ந்திருந்த நேரத்தில் எங்கோ திரியப் போயிருந்த பாஸ்கரன் சத்தம் போடாமல் வந்து கதவு திறந்தான். சேகரன் பேசாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து "நான் போய்க் கேக்கிறேன்!" என்று எழுந்தாள் ராஜி.
"இரு இரு! நானே போய்க் கேக்கிறேன்!" என்று அப்புறம் அவன் எழுந்து போனான். அவன் அம்மாவின் அறைக்குள் கூடித் தணிந்த குரலில் சச்சரவிட்டார்கள். சேகரன் திரும்பி வந்தான்.
"என்னங்க?" என்றாள் ராஜி.