"தோ பாரு ராஜி. நான் ஒரு வருஷத்துக்கு மிந்தியே உங்கிட்ட சொல்லியாச்சி! என் முடிவில ஒரு மாத்தமுமில்ல! ஒன் தங்கச்சிக்கு இந்த வீட்டில இனி எடம் கிடையாது! அதப் பத்திப் பேச்சையே எடுக்காத!" என்றான். டிவியை முறைத்தான். பியரை எடுத்துப் பருகினான்.
"அவ வேற எங்கங்க போவா? எங்க போவா சொல்லுங்க!" ராஜேஸ்வரி அழுதாள்.
"எங்க போனா ஒனக்கென்ன? அந்த கொலைகாரச் சண்டாளிக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இனி சம்பந்தமில்ல. விஷயம் முடிஞ்சது" அவனுக்குக் கோபத்தில் மூச்சிரைத்தது.
கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். கோபத்தால் சிவந்த கண்களுடன் டிவியின் அசையும் பிம்பங்களின் அர்த்தத்தை இழந்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று திரும்பிச் சொன்னான்: "இனிமே இந்தப் பேச்ச எடுத்தீனா நமக்குள்ள உறவே கெட்டுப் போவும், பாத்துக்க!" எழுந்தான். கதவைத் திறந்து வெளியே போய் கேட்டருகில் நின்று கொண்டு சிகெரட்டை ஆத்திரமாக உறிஞ்சி ஊதிக் கொண்டிருந்தான்.
அவள் சென்று படுக்கையில் சாய்ந்தாள். உடம்பில் எல்லா இடங்களிலும் முட்கள் குத்தின. மனம் முழுக்க ரணமாக இருந்தது. என்ன எளிதாக விஷயத்தை முடித்து விட்டான்? ஆனால் அவளுக்கு இந்த பிரச்சினை இதோடு முடிந்து விடுமா? எப்படி முடியும்? பத்மாவின் கையிலிருந்த கொலை அரிவாளிலிருந்து சிந்திய இரத்தக் கறைகள் காய்ந்திருக்கலாம். ஆனால் அவள் மனத்திலும் தன் மனத்திலும் ஏற்பட்ட காயங்கள் காயவில்லை. இன்னும் அங்கே ரத்தம் கசிகிறது. தொட்ட போதெல்லாம் சுரீரென்று வலிக்கிறது.
*** *** ***
திருமணம் முடிந்து சேகரனுடனும் அவனுடைய அம்மாவுடனும் ஒரே தம்பியுடனும் வாழ வந்த போதே அந்தக் குடும்பத்தில் இருந்த நெருக்கத்தையும் இறுக்கத்தையும் ராஜி உணர்ந்து கொண்டாள். அந்தக் குடும்பம் மூடிய குடும்பமாக இருந்தது. அவளை அன்னியமாகவே வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் பல ரகசிய விஷயங்கள் பேசிக் கொண்டார்கள். ராஜியைக் கண்டால் பேச்சுக்கள் நின்றுவிடும்.