"பரவால்லிங்க நான் பாத்துக்கிறேன்!" என்றாள் ராஜி. இடம் இருக்கிறது என்று காட்டினாள். தன் அறைக்குப் பக்கத்தில் சாமான்கள் போட்டு வைத்திருந்த ஸ்டோர் ரூமை ஒழித்து அவளுக்கு படுக்கை போட்டுக் கொடுத்தாள்.
ஆனால் வீட்டில் அனைவரும் கடுகடுப்புடன்தான் அவளுடன் பழகினார்கள். பாஸ்கரன் மற்றவர்கள் முன்னிலையில் பத்மாவைப் பார்த்து கடுகடுத்தாலும், மற்றவர்கள் பார்க்காத போது அவளைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு நன்றாக இல்லை என்பதை ராஜி கவனித்தாள்.
பத்மா உண்மையில் குடும்பத்துக்கு மிக உதவியாக இருந்தாள். பள்ளிக்கூடம் போய் இருக்கும் நேரம் தவிர வேறு வேளைகளில் ராஜியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டாள். வீடு அவளோடு ஒட்டாமல் இருந்தாலும் இரண்டு குழந்தைகளும் "சின்னம்மா, சின்னம்மா" என்று அவளோடு ஒட்டிக்கொண்டு அதற்காக மாமியாரிடம் முதுகில் அவ்வப்போது அறையும் வாங்கின. பத்மா வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். முதலில் அதை வெறுத்த மாமியார் அப்புறம் ஏதோ வேலைக்காரியை ஏவுவது போல ஏவ ஆரம்பித்தாள். சேகரன் பத்மா என்ற ஒரு பெண் அந்த வீட்டில் இருப்பதாகக் கண்டு கொள்வதே இல்லை.
இந்த நிலையில்தான் அது நடந்தது. பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்து கொண்டிருந்த பத்மா பூப்பெய்தி விட்டாள். அன்று நாளெல்லாம் அறைக்குள் ஒளிந்திருந்து மாலை ராஜி வேலை விட்டு வந்தவுடன் அழுதழுது சொன்னாள். ராஜி அவளை அணைத்துக் கொண்டாள். சிரித்துத் தலையைத் தடவிக் கொடுத்தாள். தனக்குத் தெரிந்த சில சடங்குகளை அடக்கமாகச் செய்தாள்.
வீடு பத்மாவை கொஞ்சம் அருவருப்பாகப் பார்த்தது. பாஸ்கரனின் பார்வையில் காமம் கூடியிருந்தது. அவன் நாசியில் மோப்பம் கூடியிருந்தது. வீட்டில் அதிகமாகத் தங்க ஆரம்பித்திருந்தான். பத்மா அவனைப் பார்த்து வெருண்டிருந்தாள். ஆனால் புறாக் கூடான அந்தச் சின்ன வீட்டில் ஒளிய இடமில்லை. பயந்தாலும் தவிர்க்க முடியாது. வளைய வளையத்தான் வரவேண்டும்.