இன்று ராத்திரிக்கு கணவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சொன்னால் என்ன ஆகும் என்று தெரியும். புயலும் பூகம்பமும் வெடிக்கலாம். நிச்சயம் வெடிக்கும். ஆனால் சொல்லாமல் என்ன செய்வது? இரவுக்காகக் காத்திருந்தாள்.
*** *** ***
டிவியில் ஏதோ ஒரு அமெரிக்க சிரிப்புப் படம் ஓடிக் கொண்டிருந்தது. கையில் பியருடனும் வாயில் சிகிரெட்டுடனும் சிரித்துச் சிரித்துப் படம் பார்த்துக் கொண்டிருந்த கணவன் சேகரனை ஓரக் கண்ணால் பார்த்தாள் ராஜேஸ்வரி. எத்தனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான்! இப்போது சொல்லலாமா? சொல்லி நிம்மதியைக் கெடுக்க வேண்டுமா? வீட்டில் நிலவியிருக்கும் இந்த அமைதியைக் குலைக்க வேண்டுமா?
பிள்ளைகள் இருவரும் தூங்கப் போய்விட்டார்கள். மாமியாரும் இன்று வெள்ளென போய்ப் படுத்து விட்டாள். டிவியில் ஏதாவது தமிழ்ப்படம் இருந்தால் இரவிரவாக கண் விழித்து உட்கார்ந்திருப்பாள். இல்லையானால் வெள்ளென தூக்கம்தான்.
வீடு சாயந்திர அவசரங்கள் முடிந்து ஓய்ந்திருந்தது. பிள்ளைகள் விளையாடி, சண்டை போட்டு, சோறு சாப்பிட அடம் பிடித்து டிவியின் முன்னால் சத்தம் போட்டுச் சிரித்து, விரட்டியவுடன் போய்ப் படுக்கையில் சுருண்டு அடங்கினார்கள். சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுப் பாத்திரங்கள் கழுவி மேசை துடைத்து மாமியாருக்கும் வேலை முடிந்தது. வீடே கொட்டாவி விட்டுச் சோர்ந்து அடங்கிவிட்ட நேரம்.
அவன் டிவியிலிருந்து கண்கள் பெயராமல் சிரித்தவாறே பியரைக் குடித்து கோப்பையைக் கீழே வைத்த சமயமாகப் பார்த்துச் சொன்னாள்: "ஒரு லெட்டர் வந்ததுங்க!"
அவன் கண்களைத் திருப்பி அவளைப் பார்த்தான். "லெட்டரா? என்ன லெட்டர்?"
"பத்மா எழுதியிருக்கா!"