சொன்னாள்.
அவனும் அழுதான். "சரிம்மா! நீ அழுவாதம்மா!" என்று அவள் கண்களைத் துடைத்தான். "நான் நல்லவனா இருக்கிறேம்மா. இனிமே அந்த கேசவனோட சேரமாட்டேம்மா! இது சத்தியம்மா!"
அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
இந்த வருஷம் பிள்ளை அக்கறையாகப் படிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. அமைதியாக இருக்கிறான். மற்ற நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறான். பாடங்களில் சுமாரான மார்க்குகள் வாங்குகிறான்.
அவன் சைக்கிள் மறையும் வரை அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.
*** *** ***
முத்தையா சைக்கிளைக் கீழே நிறுத்திவிட்டு அந்த நான்கு மாடி மலிவு விலை அடுக்கு மாடிக் கட்டிடத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஆவலோடு ஏறி வந்தான். குப்பை கூளம் மிக்க வராந்தா வழியாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்டிய போது அது தானே திறந்து கொண்டது. வீடு "ஓ"வென்று கிடந்தது. கேசவன் வீட்டில் இல்லை. வழக்கம் போல் வீட்டில் வேறு யாரும் இல்லை.
கேசவனின் அப்பாவைப்பற்றி முத்தையாவுக்கு ஒன்றும் தெரியாது. கேசவனும் பேசுவதில்லை. அவன் அண்ணன் கோலாலும்பூரில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். எப்போதாவது இந்த பினாங்குக்கு அம்மாவையும் தம்பியையும் பார்க்க வீட்டுக்கு வருவதோடு சரி. அப்படி வீட்டுக்கு வரும் போதெல்லாம் கேசவனுக்கு நிறையப் பணம் கொடுத்துப் போவான். அந்த நாட்களில் எல்லாம் கேசவனின் அனுசரணையில் முத்தையாவுக்கும் ரொம்ப விருந்துதான். படம், வீடியோ கேம், சாப்பாடு என்று அலுக்காது. கேசவனின் அம்மா இதை ஒன்றையும் கண்டு கொள்வதில்லை. காலையில் மிகத் தாமதமாக எழுந்து அலங்கரித்துக் கொண்டு வெளியே போனால் திரும்ப வருவது நள்ளிரவோ அதற்குப் பிறகோ...!
எங்கே போயிருப்பான் கேசவன்? "நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னால வா!