புது வீடியோவுக்கு சொல்லி வச்சிருக்கேன். பாத்திட்டுப் போலாம்" என்றான்.
"என்ன படண்டா? படையப்பாவா?" ஆவலோடு கேட்டான் முத்தையா.
"போடா உன் படையப்பாவும் --ரப்பாவும்!" அவன் அப்படித்தான் பேசுவான். கொச்சை வார்த்தைகள் சரளமாக வந்து விழும் பேச்சு. அது ஆண்மையும் தைரியமும் கலந்த உலகத்தைப் புறந்தள்ளி தன்னை ஏற்றி வைத்துக் கொண்ட வீரப் பேச்சாகவும் முத்தையாவுக்குத் தெரியும்.
அதுதான் இந்த கேசவனிடமிருந்த கவர்ச்சி. அவன் இந்த உலகத்தைத் தலைகீழாகப் படித்திருக்கிறான். படித்து இதைப் புறக்கணிக்கவும் இகழவும் உமிழவும் கற்றுக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம், படிப்பு அவனுக்குக் கால் தூசு. "படிச்சி என்ன --ரப் --ங்கப் போறோம்? ஒரு நாளைக்கு இருவது முப்பதும் சம்பாரிக்கவா? இப்பவே நான் முப்பது நாப்பது சம்பாரிக்கிறேன் தெரியுமா?"
யார் யாருக்கோ ஏதேதோ டெலிவரி வேலை செய்தான். ஒவ்வொரு டெலிவரிக்கும் கை மேல் பணம். அவன் அண்ணன் வீட்டில் விட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிளில் லைசன்ஸ் இல்லாமலேயே சுற்றுவான். போலிஸ்காரன் எங்கு மறைந்திருப்பான், அவனை எப்படி ஏய்த்து வேறு குறுக்கு வழிகளில் போகலாம் எல்லாம் அவனுக்குத் தெரியும். அப்படியே பிடிபட்டுவிட்டால் எப்படிக் குழைவது, எத்தனை தருவது எல்லாம் தெரிந்து தயாராக இருப்பான்.
பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட அவன் அஞ்சுவதில்லை. அவன் பள்ளிக்கூடம் வரவில்லை என்று அறிவிக்கும் கடிதங்கள் வீட்டு முகவரிக்கு வந்தால் தானே பிரித்து கள்ளக் கையெழுத்துப் போட்டு கொண்டு வந்து கொடுத்துவிடுவான். முத்தையாவிடம் எல்லாம் சொல்லியிருக்கிறான். முத்தையா ஏதேதெல்லாம் செய்ய முடியாமல் தயங்குகிறானோ அத்தனையும் கேசவன் செய்வான். கேசவன் முத்தையாவின் ஹீரோ. அவன்தான் படையப்பா, அருணாச்சலம், பாட்சா!
"அப்புறம் என்ன படண்டா?"