"வேற படம் சொல்லி வச்சிருக்கேன். புளூ ·பிலிம். இந்தியாவிலிருந்து வந்தது. ·பிலிம் ஸ்டார்ஸ். எல்லாம் தமிழ்ப் பொம்பிளங்க!"
"கிர்"ரென்று ஒரு காம உணர்ச்சி ஏறியது. "தமிழ்ப் பொம்பிளங்களா? நெசமாவா? இது வரைக்கும் சீனத்திங்க வெள்ளக்காரிச்சிங்கதான..."
"அதெல்லாம் பழசு. ஆனா ரொம்ப பத்திரமா இருக்கணும். போலிஸ்காரங்க தேடிக்கிட்டிருக்காங்களாம். ஒரு காப்பி மூணு மணிநேரம் வாடகைக்கு எடுக்க அம்பது வெள்ளி"
"அம்பது வெள்ளியா?"
"போடா ---! "அம்பது வெள்ளியா"ன்னு வாயப் பொளக்கிறான். ஒங்கிட்ட இப்ப காசு கேட்டனா? படத்துக்கு நாந்தான் டெலிவரி போய்! நீ எனக்கு பெஸ்ட் ·பிரன்ட் இல்லியா! நாளைக்கு வா. ஒனக்கு ·ப்ரீ ஷோ!"
இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அவனுடைய அபிமான நடிகைகள் நிர்வாணமாக மனதில் உலா வந்தார்கள். கேசவனின் வீரத்தோற்றம் முத்தையாவின் எண்ணத்தில் இன்னும் உயர்ந்தது. என்ன அபூர்வமான விஷயங்களெல்லாம் வைத்திருக்கிறான்! எப்படியெல்லாம் பூந்து விளையாடுகிறான்! எத்தனை தைரியம், தன்னம்பிக்கை! அவனை நெருங்கிய நண்பனாக அடைந்திருப்பதில் அவன் வகுப்பு மாணவர்கள் மத்தியில் அவனுக்கு ஒரு தனிப் பெருமை இருந்ததாக நினைத்துக் கொண்டான்.
நாளைக்குப் பள்ளிக்கூடம் போகும் வேளையில் அம்மா வீட்டில் இருப்பாள். ஆனால் ஏதாகிலும் சமாதானம் சொல்லிவிட்டுப் புறப்படலாம். தெரிந்தால் தொலைத்து விடுவாள். கேசவன் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான்! எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லை. இந்த வீட்டில் எந்த நேரமும் நச்சு நச்சென்று...!
ஆனால் அம்மா சொல்வதும் சரிதான். கேசவனைப் போலத் தான் ஆக முடியாது. அவனைப் போல பொறுப்புகள் இல்லாமல் சுற்ற முடியாது. அம்மா தன்னைத்தான் நம்பியிருக்கிறாள்.