வர்ண-தாள ஜாலங்கள் - மது
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே
( குறுந்தொகை; குறிஞ்சி எண் 14)
சங்ககாலப் பாடல்களில் "மடலேறுதல்" என்ற ஒரு வழக்கம் இருந்து வந்தது. தலைவன் பனைமடலால் குதிரையைப் போல ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் வரைந்து கையில் ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்வலம் வருதலை மடல் ஏறுதல் என்பர்; அவன் அப்படி வருவதைக் காணும் ஊர் மக்கள் ,‘இன்னவளுக்கும் இவனுக்கும் நட்பு உண்டு’என்பதை அறிந்து அதனை வெளிப்படையாக கூறிப் பழிப்பர். இப்படி செய்தால் பெற்றோர் உற்றோர் விரைவில் மணம் புரிவிப்பர் என்பதனால் பழியையும் பொருட்படுத்தாது தலைவன் மடலேறுகிறான்
"மடலேறுதல்" கவர்ந்து இழுத்தது என்னை.. இதோ அதன் விளைவாக வர்ண தாள ஜாலங்கள் உங்கள் முன்னே!! மேலும் என்னை மிகவும் கவர்ந்த "சிவகாமியின் சபதம்" பாதிப்பில் மாமல்லபுரத்தில் முக்கிய காட்சிகள் அமைத்திருக்கிறேன். நாயகி நடன மங்கை..நாயகன் சிறந்த ஓவியன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வானம் முழுதும்
வாரி இறைக்கப்பட்ட
வண்ணக் காவியங்கள்(1)
ஒரு நொடிப்பொழுதில்
ஓராயிரம் கலவைகள்
ஓவியமாய் அனுதினம்
ஓய்வதில்லை அதை தீட்டுபவனும்(2)
தக திமி தா
துள்ளி ஆடும் அலைகள்
தாவி ஓடும் நதிகள் (3)
காற்றினில் தவழ்ந்ததோ
கானம் - ஜதியோடு
கரங்களை அசைக்கும்
கிளைகள் நடனம்(4)
இறைவன் வரைந்த வர்ணமும்
இசைத்து ஆடிய தாளமும்
இணைந்த ஜாலம் வர்ணதாளம்(5)
சித்திரமும் கைப் பழக்கமும்
சாத்தியமானது தவழும் பருவத்திலும்
கண் பார்த்த காட்சி மறுகணம்
கரம் தீட்டி விடும் அற்புதம்(6)
நடை பழகினாலோ இல்லை
நிருத்ய தாண்டவம் புரிந்தாளோ!
இயற்கையின் ஒவ்வொரு அசைவுக்கும்
இவள் கால்சலங்கை பதிலுக்கு எதிரொலிக்கும்(7)
இதயங்கள் இடம் மாறும் பின்னே
இறைவன் அறிந்தானோ முன்பே
சித்திரம் வரைபவனோ நிருத்ய ராஜன்
நடன மங்கையோ சித்ராங்கி தேவி(8)
மாமல்லபுரம் உல்லாச பயணம்
மாணவர் அனைவரும் ஆரவாரம்
அங்கோர் சிற்பம்; அபிநயம் பிடித்தாள்
சிலையும் கொண்டதோ பொறாமை
சித்ரா அடவுகள் அதனினும் மேன்மை(9)
கண் மூடி நின்றாள் ஒரு நிமிடம்
காட்சியில் இப்போது மூன்று பிம்பம்
கண்ணாடி தானோ!! இல்லை கடல் மண்
கையொப்பம் இட்டவன் நிமிர்ந்தான்
கண் சிமிட்டி அவள் இமைகளை அசைத்தான்(10)
ஏய்! இது நான்
ஏன் என்னை வரைந்தாய்
சினத்துடன் அவனை சாடினாள்
சித்திரம் கூடப் பேசுகிறதே என அவன் நினைத்தான் (11)
சிலையைத் தீட்டினேன்
சிலுப்பிக் கொள்கிறாயே!!
கருமமே கண்ணாய் வரைந்தான்
கரங்களும் நிருத்யம் புரிகிறதே என அவள் வியந்தாள்(12)
குருத்துகள் தாம் இன்னும் எனினும்
கருத்தினில் ஆழப் பதிந்தது கலை வடிவம்
காலம் சுழல திறமைகள் மெருகேற்றம்
கன்னியும் காளையுமாய் இருவரும் உருமாற்றம்(13)
கட்டிடக் கலை பயின்றான்
கோயில்கள் அரண்மனைகள்
தேடித் பிடித்து வரைந்தான்(14)
தில்லை நாதனை தரிசிக்க - தன்
தூரிகையால் அர்ச்சித்து பூஜிக்க
தன் அத்தையின் வீட்டை அடைந்தான்(15)
சலங்கையிடம் சிணுங்கலுடன்
செல்ல சண்டை போடுவாள்
சர்வமும் நாட்டியமே என சுவாசித்தாள்(16)
அஜந்தா சித்திரங்களின் ஜடாகா கதைகளை
அரங்கேற்ற நினைத்தாள் நாட்டியத்தில்
அவள் குருவிடம் ஆலோசித்தாள் அவர் வீட்டில்(17)
அறிமுகங்கள் தேவை இல்லை
அன்றே விதிக்கப்பட்ட இணை
மாறியது தோற்றம் வடிவம் மறக்கவில்லை
மனதில் மொட்டவிழ்ந்தது காதல் நறுமுகை(18)
தப்புத் தப்பாக வரைகிறாய்
கிள்ளையாய் செப்பியவள்
கிள்ளி விட்டு சிரித்தாள்(19)
கண்ணால் காண்பதை என்
கைகள் தப்பாது வரைந்திடும்
கிள்ளாதே!! பிழை சொல்லாதே!! (20)
இவ்வளவு அழகாய்
இவள் யாரோ!! பார்த்தது என்னை
இங்கு வரைந்திருப்பது யாரை? (21)
என் சித்தத்தை மயக்கிய சித்தினி
என் எதிரில் நிற்கும் சித்திரம் நீ
வரைந்த அழகோ ஒரு பாதி
வர்ணிக்கவோ மீதியை என் தேவி(22)
சட்டென செம்மை படர்ந்தது
சூடேறிய கன்னம் குழிந்தது
நவரசங்களை நடனத்தில் பிரதிபலித்த முகம்
நாயகன் வர்ணனையில் காட்டிய ஒரே பாவம் நாணம்!!(23)
அவளின் நிருத்யத்தை
அவன் இதயத்தில் பதித்தான்
அவனின் சித்திரத்தை
அவள் நெஞ்சின் தாளத்தோடு கலந்தாள்(24)
காதல் ஓவியம் அழியுமோ
நேசத்தின் ஜதிகள் ஓயுமோ
பிரிவும் நிரந்தரம் ஆகுமோ
இணைந்த இதயங்கள் தனித்து இயங்குமோ(25)
அயல்நாடு செல்கிறேன் அங்கே மேற்படிப்பு
அங்கும் நித்தம் வரைந்திடுவேன் உன் வடிவு
வருவேன் நிச்சயம் அது வரை காத்திரு என்
வாக்கு சத்தியம் இப்பொழுது விடை கொடு (26)
பிரிவுத் துயரை தத்ரூபமாய்
பார்ப்பவர் நெஞ்சம் உருக ஆடிய போது
அப்போது தெரியவில்லை அதன் தாக்கம்
உன்னோடு என் உயிரும் சேர்ந்து விடை கேட்கும் –இக்கணம்
உன் சித்திரமாய் உணர்வற்று மாறி விட விருப்பம்(27)
எண்ணத்தைச் சொன்னாளில்லை
எத்தனை முயன்றும் இமைகள்
அணை போட இயலவில்லை (28)
அவள் அசைவிலே
அறிந்து கொண்டான் அனைத்தையும்
அவளை இறுக அணைத்துக் கொண்டான்(29)