ஒரு கருவின் கதறல் - ஜெனிட்டா
அதிகாலை ஆதவனின் வரவை எதிர்பார்த்து அவன் வரவை உணர்ந்து வெட்கத்துடன் சந்திரமதி மறைந்து கொண்டாள். மார்கழிக் குளிரில் எங்கிருந்தோ கேட்ட குருவிகளின் சத்தத்தில் போர்த்தியிருந்த போர்வைக்குள் புரண்டு படுத்த நிகில் ஆழ்ந்த உறக்கத்திலும் அருகில் மனைவி இல்லாததைக் கண்டு கண் விழித்து திரும்பிப் பார்த்தான். ஜன்னல் வழியே எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி ஏஞ்சலின். மணியைப் பார்த்தான் 5:45.
“என்னாச்சு ஏஞ்சல்...?
திடீரென்று கணவனின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஆங்..அது ..ஒண்ணுமில்ல..“
“எப்போ கண் விழிச்ச? ஏன் அங்கே போய் உட்கார்ந்திருக்க? “
“அது..தலை வலி..ரொம்ப வலிச்சது..அதான்..அதான்... இங்க வந்து உக்கார்ந்தேன்..” திக்கித் திணறி பதில் வந்தது.
“ சரி . இங்க வா..வந்து பக்கத்துல உட்காரு..நான் நெற்றிய தடவி விடுரேன்.”
“வேண்டாங்க. நீங்க தூங்குங்க. இன்னும் கொஞ்சம் நேரம் தானே இருக்கு.
நான் ஃப்ரெஷ் ஆயிட்டு 6:30 க்கு உங்களுக்கு காபி கொண்டு தரேன். அதுவரைக்கும் நீங்க தூங்குங்க.”
சரி உனக்கு ரொம்ப முடியலைனா வந்து படுத்துக்கடா..”
“ எனக்கு ஒண்ணும் இல்லைங்க..ஜஸ்ட் தலை வலி. இப்போ போயிடுச்சு. நீங்க தூங்குங்க..” முகத்தில் புன்னகையோடு சொன்னாள்.
“ ம்ம்..இந்த சிரிப்ப பார்த்தாதான் எனக்கு நிம்மதி.. சரிடா..நான் தூங்குறேன். என்னை 6:30 க்கு வந்து எழுப்புடா..”
“ம்ம் சரிங்க..” சொல்லிவிட்டு எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.
காலை 9:30 மணி. கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள். நேற்றைய நிகழ்ச்சி மனக்கண் முன்னால் வந்தது.
பகல் மணி 2.30. வீட்டு காலிங்க் பெல் அடித்தது. திறந்து பார்த்தால் கல்லூரித் தோழி சுமிதா வந்திருந்தாள்.
“ வாவ் சுமிதா வாடி..எப்போ கனடாவிலிருந்து வந்த? நம்ம க்ருப்-ல நீ மட்டும் தான் என் மேரேஜ்க்கு வரல. ?
ஆமாடி ..அப்பொ வர முடியல..ஹஸ்பண்டுக்கு லீவ் கிடைக்கல”
“ஓ..உட்காருடி..நீ அப்படியேதான் இருக்க. கொஞ்சம் கூட மாறவே இல்ல.”
சந்தோஷமாக பழைய கல்லூரிக் கதைகளை பேசிக் கொண்டிருக்கும்போது ஏஞ்சலின் திடீரென்று கேட்டாள்.
“ சுமிதா உனக்கு தானே நம்ம க்ருப்-ல ஃபர்ஸ்ட் மேரேஜ் ஆச்சு.. ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கல?”
“ஏண்டி உனக்கு கேட்க வேற கேள்வியே இல்லியா? கல்யாணம் செஞ்சு 5 வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கிட்டா போதும். அதுவரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணனும். நம்ம செட்-ல யாருமே இன்னும் குழந்தை பெத்துக்கல. உனக்கு மேரேஜ் முடிஞ்சு த்ரீ மந்த்ஸ் தானே ஆயிருக்கு. உடனே குழந்த கிழந்த பெத்துடாத..அப்புறம் நம்ம பிரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து உன்னைக் கிண்டல் பண்ணிடுவாங்க. ஒரு 5 வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்க. அதுவரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணு..”
தோழிகள் இரண்டு பேரும் கதை பேசிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து சுமிதா சென்று விட்டாள்.
சிறிது நேரம் சென்றது.. தலை சுற்றுவது போல் இருந்தது. குடல் குமட்டியது. வாந்தி வருவது போல் இருக்க உடனே வாஷ் பேஸனை நோக்கி ஓடினாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டு ஸோஃபாவில் வந்தமர்ந்த போது தான் கழிந்த இரண்டு மாதமாக நாள் தள்ளிப் போயிருந்தது நினைவு வந்தது. மனது பக்கென்று உணர்ந்தது.
“ ஒரு வேளை... ஒரு வேளை...இது குழந்தையாக இருக்குமோ..இல்லை இருக்காது..இருந்துட்டால்...”
சுமிதா சொல்லி சென்றது நியாபகம் வந்தது...தோழிகளின் கிண்டல் பார்வை கண் முன்னே காட்சியாய் வந்தது.
“ வேண்டாம்..இப்போ எனக்கு குழந்தை வேண்டாம்..இது எனக்கு வேண்டாம்..எதற்க்கும் பக்கத்துல இருக்குற கிளினிக்ல போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்” என்று சீக்கிரமாக கிளம்பினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து தளர்வுடன் வீட்டிற்க்கு வந்தமர்ந்தாள். தான் இரண்டு மாதக் கருவை சுமந்து கொண்டிருப்பதைத் தெரிந்து மனதில் ஒரு சோர்வும் வலியும் உண்டானது..இதை கணவனிடம் சொல்லக்கூடாது. நாளைக்கே மருத்துவமனைக்கு சென்று கருவைக் கலைத்துவிட முடிவெடுத்தாள்.
கண்ணைத் திறந்தாள். நேற்றைய நினைவில் நேரம் போனது தெரியவில்லை..”ஹாஸ்பிட்டல் போகணும்..தூக்கம் வர மாதிரி இருக்கு. கொஞ்சம் நேரம் தூங்கிட்டு கிளம்பலாம்” என்று கண் மூடினாள். அப்படியே தூங்கி விட்டாள்..காற்று வீசும் சத்தம் காதில் கேட்கிறது.. மெலிதாக ஒரு குழந்தையின் ஆழுகுரல் சத்தமும் கேட்கிறது...
“ அம்மா...! அம்மா..!.நான்தாம்மா உன் குழந்தை பேசுறேன். நான் பேசுறது கேட்குதா? ஏம்மா என்னை அழிக்கனும்னு நெனைக்குற? என்னை உனக்கு புடிக்கலியா? ரெண்டு மாசமா உன் கருவரறையில நான் நல்லா இருந்தேன்மா. உன் உயிருக்குள்ள நான் இருக்குறதுனால உன் உள்ளுணர்வு கூட உன்னவிட எனக்குதாம்மா நல்லா தெரியுது.நீ பேசுறது கேட்குது. நீ பாடுறது நல்லா கேட்குது. உன் குரல் ரொம்ப அழகா இருக்கும்மா. நீ பேசுறது கூட அழாகாதாம்மா இருக்கு. நான் உருவான சந்தோஷத்துல தான் நீ இவ்வளவு அழகா பாடுறேனு நெனச்சேன்.ஆனா இப்போ தான் தெருஞ்சது நான் உருவானதே உனக்கு புடிக்கலைனு. உன் கருவறையில என் இதயம் தான் முதல்ல உருவாச்சு. என் இதயம் முதல் முதல்லா துடிக்க ஆரம்பிச்சப்ப “அம்மா”னு உன்னதான் சொல்லிச்சு. நேற்று வரைக்கும் உன் கருவறையில மென்மையான பஞ்சு மெத்தையில படுத்திருக்கிறமாதிரி எனக்கு நல்ல சுகமா இருந்துச்சு. ஆனா நீ என்னை அழிக்க நினச்ச நேரத்திலிருந்து எனக்கு இங்க எரியுதும்மா..
உனக்குப் பசிக்கும்போது எனக்கும் பசிக்குது.நீ அழும் போது உன் அழுகுரல் எனக்கு கேட்குது. நீ சந்தோஷமா சிரிக்கும்போது எனக்கு டான்ஸ் ஆடணும்னே தோணுது. உலகத்துல வந்து முதன்முதலா உன்னதான் பார்க்கணும்னு ஆசையா வெயிட் பண்ணிட்டிருந்தேன். ஆனா உனக்கு தான் என்னை பிடிக்கவேயில்லையே.. உலகத்துல மனுஷங்கள வெட்டிக் கொல்லுரதுக்கு எதாவது ஒரு விரோதம் காரணமா இருக்கும். ஆனா கருவுல இருக்குற குழந்தைய கொல்லுரதுக்கு எதாவது காரணம் இருக்கா? உனக்கு என்னாதாம்மா நான் துரோகம் செஞ்சேன்? கத்தியால் வெட்டுபட்டு சாகிறவங்ககூட அவங்ககிட்ட உள்ள நியாயத்தை கத்தி கத்தி சொல்லுவாங்க.ஆனா கருவுல இருக்குர குழந்தைய அழிக்கும்போது அதோட வலியின் கதறல் சத்தம் யாருக்குமே கேட்குறதேயில்ல. உலகத்துல 10-ல் 4-கு பேர் கருக்கலைப்பு செய்றாங்களாம். கொலை செய்யுறதை பாவம்னு நெனைக்குற மனுஷங்க கருக்கலைப்பு செய்யுறதை மட்டும் பாவம்னு நெனைக்குறதே இல்ல. சிலர் அவங்க சந்தோஷத்துக்காகவும், சிலர் அவங்க உயிர் வாழுறதுக்காகவும், சிலர் அவங்க அழகை தக்கவச்சுக்குறதுக்காகவும் எங்கள பலி ஆக்கிடுறாங்க. அப்படி நாங்க என்னதான்மா உங்களுக்கு தப்பு செஞ்சுட்டோம்?
கருவுல உரு கொடுத்த கடவுளைவிட கருவறையில இடம் கொடுத்த அம்மா தான் எல்லா குழந்தைக்கும் முதல் கடவுள். அம்மா சுட்டிக்காட்டுற தெய்வம் தான் எங்க தெய்வம்னு ஏத்துக்குறோம். அப்படிப்பட்ட எங்கள காரணமே இல்லாம கொல்லுறதுக்கு நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு புரியவே இல்லம்மா.
காரணமே இல்லாம அழிக்குற கருவின் கதறல்கள் எல்லாம் கடவுள் முன்னாடி அபலமிட்டுட்டே இருக்கு. என்னைப் போல நிறைய கருவின் கதறல்கள் பூமியில யாருக்கும் கேட்குறதே இல்ல. ஆனா என்னோட கதறல் உனக்குக் கேட்கும்னு நினைக்குறேன்மா. என்னைக் கொன்னுடாதம்மா. உன்னைப் பார்க்கணும்னு ஆசையோட இருக்குற என்னை அழிச்சிடாதம்மா.”
திடுக்கிட்டு கண் விழித்தாள் ஏஞ்சலின்..கண்டது, கேட்டது எல்லாம் கனவா...நனவா..ஒன்னுமே புரியவில்லை அவளுக்கு. அந்தக் குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.கைகள் தானாக வயிற்றின் மேல் சென்றது.
“இல்ல..எனக்கு உன்னை வேணும். நான் உன்னை அழிக்க மாட்டேன்..என் குழந்தையை அழிக்க மாட்டேன்..எனக்கு நீ வேணும்.. என்னப் பெரிய பாவம் செய்ய இருந்தேன்..இயேசப்பா என்னை மன்னிச்சிடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க இயேசப்பா..” வாய் விட்டு கதறினாள்...
மனம் மாறியவுடன் ஒரு தெய்வீக சமாதானம் உள்ளத்தில் உண்டானது.. சிறிது நேரம் கழித்து செல்ஃபோனை எடுத்து கணவனை அழைத்தாள்..முதல் ரிங்க்லயே அழைப்பை எடுத்தான்.
“என்னடா...உனக்குதான் ஃபோன் பண்ண செல்ஃபோனை எடுத்தேன்.. நீயே கூப்டுட்ட.. தலைவலி எப்படி இருக்கு?..பரவாயில்லையா..?”
“பரவாயில்லை ...இப்போ தலைவலி இல்ல. என்னங்க...”
“ம்ம்..சொல்லுடா..”
“என்னங்க...எனக்காக ஒண்ணு செய்வீங்களா..? இன்னைக்கு ஈவ்னிங் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வர்றீங்களா ”
“ம்ம்..யோசிக்கணும்.. சீக்கிரம் வரணும்னா கொஞ்சம் செலவாகுமே...ம்ம்.. வந்தா என்ன தருவ?”’ கொஞ்சம் குறும்புடன் கேட்டான்..
“ம்ம்ம்..ரெண்டு கொழுக்கட்டை தாரேன்..”
“வாட்.. கொழுக்கட்டையா..அத நீயே சாப்பிடு...போ..நான் சீக்கிரம் வர மாட்டேன்..”
“ அடடா..என் செல்லம்மல..என் முத்துல்ல..என் தங்கம்ல...பிளீஸ்.. சீக்கிரம் வந்திடுங்களேன்...”
“ம்ம்ம்...அது! சரி..என்ன விஷயம்டா?..
“அது சஸ்பென்ஸ்..வந்தபிறகு தான் சொல்லுவேன்..”
“ம்ம் சரி.. நான் சீக்கிரம் வந்து சஸ்பென்ஸ் எல்லாம் உடைக்குறேன்...”
“ம்.வாங்க.. வாங்க..” சிரித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தாள்..
வெளியே குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டுப் பெண் சாப்பிட அடம் பிடித்த தன் இரண்டு வயதுக் குழந்தைக்கு காகத்தைக் காட்டி, பூக்களைக் காட்டி உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். சந்தோஷ சிரிப்புடன் அதை ரசித்துவிட்டு கணவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.....!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.