தொட்டால் சுடுவது மலர்... - தங்கமணி சுவாமினாதன்
அது ஆண் பெண் இரு பாலரும் கல்வி கற்கும் கல்லூரி.மதியம் இடைவேளை. கல்லூரி நூலகத்தில் அமர்ந்து ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள் மலர்.முது- நிலை பட்டப் படிப்புப் பயிலும் மாணவி.இளங்கலையில் கோல்டு மெடலிஸ்ட். அந்த நூலகத்தின் நீண்ட அகன்ற பெரிய ஹாலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அமர்ந்திருந்தனர் சிலர்.
மலர் யாராலும் தனக்கு எவ்விதத் தொல்லையும் ஏற்படாத வகையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.மலர்...பெயருக்கு ஏற்றார்ப்போல் புதிதாய்ப் பறித்த ஊட்டி ரோஜாக்களை ஒன்றாய்ச் சேர்த்துக் கட்டி வைத்தார்ப்போல அப்படி ஒரு அழகு..அழகு மட்டுமல்லாது அறிவு,அமைதி,அடக்கம் என எல்லா ப்ளஸ்க்- களும் அவளிடம் தஞ்சம் அடைந்திருந்தன.குறிப்பெடுப்பதற்காக அவள் அமர்ந்திருந்த தோற்றம் ஒரு பூக்கூடையே உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது.
அப்போது நூலகத்தின உள்ளே நுழைந்தான் தினா.அவன் பார்வை யாரையோ தேடுவதைப்போல் இங்கும் அங்கும் அலை பாய்ந்தது.கடைசியாய் அவன் பார்வை மலர் மீது வந்து நிலைத்தது.அவன் முகத்தில் லேசான மகிழ்ச்சி. தினா..ஆறடி உயரம் அதற்கு ஏற்றார்ப்போன்ற உடல் வாகு.நேர்த்தியான உடை.. வசீகரமான தோற்றம்..நுனி நாக்கு ஆங்கிலம்.மனதில் உறுதியில்லா பெண்களை எளிதில் வளைத்துப்போடும் ஆற்றல்..எத்தனையோ அப்பாவிப் பெண்களை ப்ராக்கெட் போட்ட அவனால் மலரிடம் மட்டும் நெருங்கவே முடியவில்லை. எது கிடைக்க வில்லையோ அதைப் பெறத்தானே மனம் விழையும்.அது கிட்டும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கும்.மலர் விஷயத்திலும் தினா அப்படித்தான் காத்திருந்தான்.
உள்ளே நுழைந்த தினா ஹாலை ஒரு முறை நோட்டம் விட்டான்.பையப்பைய மலரை நோக்கி நடந்தான்.குனிந்து எழுதிக்கொண்டிருந்த மலரின் முன்னே போய் நின்று அவள் கவனத்தை ஈர்க்கத் தொண்டையைச் செருமினான்.லேசாகத் தலையை உயர்த்திபார்த்த மலர் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டவில்லை. மலர் தன்னைப் பார்த்து முகத்தில் சிரிப்பைக்கூட காட்டாதது தினாவின் மனதில் எரிச்சலை எட்டிப்பார்க்கச் செய்தது.எவ்வளவு திமிர்..எல்லாம் நாம ரொம்ப அழகா இருக்கோம்கிற திமிர்..எத்தனை முறை காதலைப் பெற முயற்சி செய்திருப்போம்..மடங்கலையே...தோக்க மாட்டேன்..ஒன்ன எப்பிடியும் என் வழிக்குக் கொண்டு வருவேன்..என எண்ணியபடியே மலரின் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் தினா.
எக்ஸ்க்யூஸ்மீ...மலர்..ஏதோ எழுதிக்கிட்டு இருக்கீங்க போல இருக்கு..
பேச்சை ஆரம்பித்தான் தினா.
அதான் தெரியிதுல்ல..அப்பறம் என்ன கேள்வி.. எரிச்சலாய் வந்தது மலருக்கு.
ம்...எழுதறேன்.....
ஒரே வார்த்தையில் முடித்துக்- கொண்டாள் மலர். மலர் தன்னை அலட்சியப்படுத்துவதைப் புரிந்து கொண்ட தினாவுக்கு மெலிதான கோபம் எட்டிப்பார்த்தது....காரியம் முடியும் வரை மனமே பொறுமையாய் இரு மனதைச் சமாதானம் செய்தான்.
மலர்..
மெதுவாய் அழைத்தான். என்ன என்பதைப்போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மலர்.
மலர் நான் சொன்னதை யோசிச்சீங்களா?
எதப்பத்தி?
மலர்...அது வந்து..அது வந்து..அதான்...நான் ஒங்கள லவ் பண்றேன்..
பல முறை ஒங்ககிட்ட இதுபத்தி பேசியும் நீங்க பிடிகொடுத்தே பேச மாட்டேங்கிறீங்க....அதான் ..இன்னிக்காவது நீங்க நல்ல பதில குடுக்க மாட்டீங்களான்னு..
மிஸ்டர் தினா..இன்னொருமுறை இது மாதிரி கேட்டு அனாகரிகமா நடந்துகிட்டீங்க..நான் சும்மா இருக்க மட்டேன்.. நீங்க எனக்கு மென்டல் டார்ச்செர் தரதா போலீஸ்ல புகார் குடுத்துடுவேன்...சீ..
என்றபடியே எழுதிக்கொண்டிருந்த நோட்புக்கையும் ,புத்தகத்தையும் பட்பட்டென்று மூடிவிட்டு எழ முயன்றாள் மலர்.
என்ன திமிரரிவளுக்கு என்று நினைத்த தினா அவள் தன்னை அவமானப்படுத்திவிட்டதை எண்ணி வெகுண்டான்..நீ என்னடி பெரிய இவளா... என்று நினைபடியே எழுந்தவன் சட்டென மலர் உட்கார்ந்திருந்த இடம் சென்று மலர் சிறிதும் எதிர் பார்க்காத நிலையில் தனது வலது கையால் அவள் வலது கையைப் பற்றி இடது கையை அவள் தோள் மீது வைக்க சட்டென எழுந்த மலர் மகா ஆவேசத்தோடும் ஆத்திரத்தோடும் தினாவின் கையிலிருந்து தன் கையை விடுவித்து தன் தோளிளிருந்து அவனின் மற்றொரு கையையும் தள்ளிவிட்டு..பொளேர் என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.அந்த சப்தம் நிசப்தமாய் இருந்த அந்த நூலகத்தின் ஹாலில் அமர்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்க்க சட்டென்று அனைவரும் நிமிர்ந்து சப்தம் வந்த திசையைத் திரும்பிப்பார்க்க தினா கன்னத்தை தடவியபடி நின்றுகொண்டிருக்க மலர் வெகு வேகமாக வெளியேறிக்கொண்டிருப்பதையும் பார்த்தனர்.என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களால் நன்றாகவே யூகிக்க முடிந்தது.
சிலையாய் நின்று கொண்டிருந்தான் தினா.அவன் நெஞ்சம் கனன்று கொண்டிருந்தது.மலர் அறைந்ததால் கன்னத்தில் ஏற்ப்பட்ட எரிச்ச்லைவிட மனம் ஏகத்துக்கும் எரிந்தது.ஏய்..ஒன்ன சும்மா விடமாட்டேண்டி....இதுக்கு நீ அனுபவிப்ப..ஒனக்கு நான் கொடுக்கப்போற தண்டனய நீ வாழ்க்கபூர மறக்கமாட்டடி..கருவினான் தினா.
தினாவை மலர் அறைந்ததைப் பார்த்தவர்கள் உடனடியாக விஷயத்தைப் பற்றவைக்க தீ காட்டுத்தீயாய் கல்லூரி முழுதும் பரவ...ஒருவழியாய் தினா கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
தினாவின் தாய் காந்திமதிக்கு இரண்டு நாட்களாய் மகன் கல்லூரிக்குச் செல்லாமல் தனது அறையிலேயே அடைந்து கிடப்பதர்க்கான காரணம் புரியவில்லை.யாருடனும் பேசாமலும் சரியாகச் சாப்பிடாமலும் இருந்த அவனிடம்அதுபற்றிக் கேட்டபோது தனக்கு விரைவில் தேர்வு வர- விருப்பதால் அதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்வதாய் சொன்னபோது சரியாகத்தான் இருக்கும் என்றெண்ணி விட்டுவிட்டார் காந்திமதி.
பாவம் அவர்...தன் பையனின் நடவடிக்கைகள் பற்றியோ....அவன் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பற்றியோ ஏதும் அறியாதவராகயிருந்தார்.அதுவே கல்லூரிக்குச்செல்லாமல் வீட்டில் இருந்த தினாவுக்குச் சாதகமாகவே இருந்தது.அடிக்கடி வெளியே செல்லும் தினா அப்படிச் செல்லும் போதெல்லாம் தேர்வுக்குப்படிக்க நண்பன் வீட்டிற்க்குச் செல்வதாகச் சொல்லிச்செல்வான்.தாய் காந்திமதிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.நம்ம பிள்ளை படிப்புல எவ்வளவு பொறுப்பா இருக்கான் என்று பெருமையாக இருக்கும் அவருக்கு.ஆனால் பாவம் மகன் தினா எப்பேற்பட்ட கொடுஞ்செயல் செய்ய தன் நண்பனோடு திட்டம் போடுகிறன் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு சந்தோஷமும் பெருமையும் அடந்திருப்பார என்ன?
காலை முதலே தினா பரபரப்பாக இருந்தான்.அவனுக்குப் பிடித்த பூரியும் உருளைக்கிழங்கும் காலை டிபனுக்கு செய்திருந்தார் காந்திமதி.சாதாரணமாக பூரிகிழங்கு என்றால் கூப்பிட்ட உடனேயே சாப்பிட வரும் அவன் அன்று தாய் பலமுறை கூப்பிட்டும் பசி இல்லை பசியில்லை என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை வற்புறுத்திச் சாப்பிட வைத்தார் காந்திமதி.
அம்மா நான் சூரி வீட்டுக்குப் போயிட்டுவரேன்..
சொல்லிக்கொண்டே அம்மாவின் பதிலை எதிர் பார்க்காமல் வாசலுக்குச் சென்று வண்டியை சப்தத்தோடு உதைத்துக் கிளப்பினான் தினா.
ஒரு மணி நேரத்தில் திரும்பிவந்த தினா அம்மாவிடம் ஏதும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவைத்தாள் போட்டுக்கொண்டான். நண்பன் சூரியிடம் தேர்வுக்காக ஏதாவது புத்தகம் வாங்கிவந்திருப்பான் என்ற எண்ணத்தில் காந்திமதி அவனிடம் ஏதும் கேட்கவில்லை.
கிச்சனிலிருந்து வெளியே வந்த காந்திமதியின் பார்வை எதேச்சையாக தினாவின் அறைக்கு வெளிப்புற சுவற்றில் இருந்த சுவிட்ச் போர்டில் கை வைத்து கைவைத்து அது அழுக்கேறிக் கிடப்பது கண்களில் பட்டது. போர்டைத்துடைத்து சுத்தப்படுத்தலாமே என்ற எண்ணத்தில் கைப்பிடித் துணி ஒன்றில் லைசாலைத்தொட்டு போர்டைத் துடைக்க ஆரம்பித்தார் காந்திமதி.உள்ளே தினா யாருடனோ செல்போனில் பேசுவது கேட்டது.
அவன் பேசுவதைக் கேட்கவேண்டுமமென்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை.தானாக வந்து காதில் விழுவதை எப்படித்தவிற்பது?
டேய்..சூரி...கெடச்சுடுச்சுடா..வாங்கிட்டு வன்டேன்..
.........................
ஆமாண்டா...ஒண்ணுக்குரெண்டா கெடச்சுது..வாங்கிட்டேன்..
...............
குறி தப்பக்கூடாதுடா...அப்பிடி முதல்ல தப்பினாலும் ரெண்டாவது குறிக்கு அவ தப்பக் கூடாதுடா..அதான் ரெண்டா இருக்கட்டுமேன்னு ரெண்டு வாங்கிட்டேன்...