நெஞ்சிலோர் நெருஞ்சி முள்... - தங்கமணி சுவாமினாதன்
என்னங்க...என்றபடியே எதிரில் வந்து நின்ற மனைவி மரகதத்தை குனிந்து ஷூவின் லேஸைக்
கட்டி முடிச்சுப் போட்டுக்கொண்டிருந்த சத்யமூர்த்தி நிமிந்து என்ன என்பதைப் போல் பார்த்தார்.
சத்யமூர்த்தி சென்னையில் மிகப் பிரபலமான விரல்விட்டு எண்ணக்கூடிய நரம்பியல் மருத்துவர்களில் ஒருவர்.அரசு பொது மருத்துவ மனையில் நரம்பியல் துறையில் தலைமை மருத்துவராகவும் அரசு மருத்துவக் கல்லூரியில்.நியூராலஜி டிபார்ட்மென்ட்டில் கௌரவப் பேராசிரியராகவும் இருப்பவர்.தர்ம சிந்தனையாளர்.படிக்கவசதியில்லாதவர்களுக்கு படிக்க பண
உதவி செய்வதும் கோயில் திருப்பணிகளுக்கு தாராளமாக நிதி அளிப்பதும் அனாதைப் பிணங்களை
அடக்கம் செய்வதில் உதவுவதுமென இருப்பவர்.சமூகத்தில் சத்யமூர்த்திக்கென தனி மரியாதையும் கௌரவமும் உண்டு.
சொல்லு மரகதம்...
என்னத்தங்க சொல்ரது...எனக்கு எதுவுமே புடிக்கலீங்க..
மௌனமாய்யிருந்தார் சத்யமூர்த்தி....
தொடர்ந்து புலம்ப ஆரம்பித்தார் மரகதம்..என்ன பாபமோ..யாரிட்ட சாபமோ.. வாழ்க்கேல நிம்மதி
இல்லாம போச்சே..ஆச்சு கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு.நம்ம பொண்ணுக்கு இன்னும் வயிறு
தொறக்கலியே..அவ மாமியர் ஜாடைமாடையாய் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க..தினம் ஃபோன் பண்ணி
நம்ம பொண்ணு அழுவுறா..ரொம்ப கஷ்டமா இருக்கு...நம்ம ரமேஷுக்கு வயசு முப்பத்து நாலு ஆச்சு
கல்யாண்ம் கூடி வரமாட்டேங்குது..அவனுக்கு என்ன கொற...ராஜாவாட்டம் இருக்கான்..நல்ல
படிப்பு நல்ல வேல..ஆனாலும் பொண்ணு தகைய மாட்டேங்குது..இந்த புள்ள கார்த்திக் நல்லாத்தான்
இருக்கான் திடீர் திடீர்ன்னு மன நலம் பாதிக்கப்பட்டவன் மாரி நடந்துக்கரான்..நீங்க நரம்பு டாக்டர் ஒங்களுக்கே அவனுக்கு என்னன்னு கண்டு புடிக்க முடியல..இது எல்லாத்துக்கும் காரணம் என்னனு
புரியலயே..ஜோசியர கேட்டா..ஏதோ பாபம்.. சாபம்ன்னு சொல்ராரு...அப்பிடி என்ன பாபம் செஞ்சிருக்கோம் நாம... இப்பிடி குடும்பத்துல நிம்மதி இல்லாம போக?புலம்ப ஆரம்பித்து அழுகையோடு முடித்தார் மரகதம்.
மனைவி அழுவதைப் பார்த்து வேதனையாக இருந்தது சத்யமூர்த்திக்கு.என்ன பாபமோ..யாரிட்ட சாபமோ..இந்த வார்த்தைகளை மரகதம் உச்சரிக்கும்போதெல்லாம்..அந்த வார்த்தைகள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்க் குத்தும் சத்யமூர்த்திக்கு.
அழாத மரகதம்..நேரம் கூடி வந்தா எல்லாம் சரியாயிடும்..சமாதானம் சொன்ன கணவரைப் பார்த்து
மரகதம் ...நாந்தாங்க ஏதும் பண்ணக்கூடாத பாவம் செஞ்சிருப்பேன்..நீங்க..பாவங்க..எவ்வளவு
தான தர்மம் பண்றீங்க..எல்லாருட்டயும் ஒங்களுக்கு எவ்வளவு நல்ல பேரு..நீங்க நல்லவருங்க..
நாந்தாங்க பாவிபோல அதாங்க இப்பிடி எதுவுமே நமக்கு நல்லது நடக்கமாட்டேங்குது..புலம்பிய மனைவியைப் பார்க்க பாவமாய் இருந்தது சத்யமூர்த்திக்கு.
இல்ல மரகதம் இல்ல..நீ ஒரு பாவமும் பண்ணல..நாந்தான் மரகதம் மகா பாவி..என் ஆரம்ப காலத்துல நான் செஞ்ச பாவமும் துரோகமும்தான் மரகதம் இப்ப நம்ம பசங்க வாழ்க்கெய்யில
வெளையாடுது..அந்த பாவத்த போக்கதான் தானமும் தர்மமும் செய்யறேன் ஆனா செய்யக்கூடாத
அந்த பாவத்த போக்க என்ன பிராயச்சித்தம் செஞ்சாலும் அந்த பாவம் விடுமா தெரியல மரகதம்..
மனதிற்குள் அழுதார் சத்யமூர்த்தி.குத்தும் முள்ளின் தாக்கம் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது.
உட்கார்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்தார் சத்யமூர்த்தி.
என்னங்க...முகத்தைத் துடைத்தபடி மீண்டும் ஆரம்பித்தார் மரகதம்.
சொல்லு மரகதம்..
நேத்து கோயிலுக்குப் போயிருந்தேன்..அங்க ஒரு ஐய்யிராத்து மாமிய அடிக்கடி பாப்பேன்..அவங்க
எனக்கு ஃபிரண்டாயிட்டாங்க..சாதாரணமா பேசிட்டிருந்தப்ப அவங்க ஒண்ணு சொன்னாங்க...
கும்பகோணத்துக்கிட்ட ஒர் ஊரு இருக்காம்..அங்கயிருக்கர காளியம்மன் ரொம்ப சக்தி வாய்ந்ததாம்.
எத நெனெச்சு வேண்டிக்கிட்டாலும் நடக்குமாம்.அப்பிடி நடந்த பிற்பாடு மறுபடி அந்த கோயிலுக்குப்
போயி நேர்த்திக்கடன செய்யணுமாம்..நம்பிக்கையோடு சொன்னாங்க அந்தம்மா..ஏங்க..நாமளும்
ஒரு தடவ அந்த கோயிலுக்குப் போய்ட்டு வரலாமா?எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற
நிலையில் இருக்கும் தன் மனைவியைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது சத்யமூர்த்திக்கு.
மரகதம் ...நீ நெனைக்கிர மாதிரி கோயிலுக்கெல்லாம் போயி தீர்ர பாவமில்ல இது..ஒரு அப்பாவி
பொண்ணுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கான பாவமிது..அவ்வளவு எளிதா இந்த பாவத்தப் போக்க
முடியாது.என்று நினைத்தபடியே..வலிக்கும் நெஞ்சோடு வாசல் நோக்கி நடந்தார் சத்யமூர்த்தி.
என்னங்க... ஒண்ணும் சொல்லாம போறீங்க..
சரி மரகதம்..போகலாம்...
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அரசு பொது மருத்துவ மனை.குட் மார்னிங் டாக்டர் சத்யா....உடன் பணியாற்றும் டாக்டர் அனந்தகிருஷ்ணனின் காலை வணக்கத்தை செயற்கையான
புன்னகையுடன் ஏற்றபடி பதில்வணக்கம் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் நுழந்தார் சத்யமூர்த்தி.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறியது..மரகதத்தின் வருத்தமும் புலம்பலும் அழுகையும் ஒன்றும் புதிதல்ல என்றாலும் இன்று என்னவோ அவருக்கு மனத்தின் பாரமும் வேதனையும்
அதிகமாய்யிருப்பதுபோல் தோன்றியது.
கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்த சத்யமூர்த்தி கண்களைத்
திறந்தபோது மேஜைமீது பிரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த தபால் உறை ஒன்று கண்ணில் பட
அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.அதில் அடங்கியிருந்த விஷ்யம் அவருக்குக் கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது.காலையில் தான் மனைவி மரகதம் கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஊர் பற்றியும் அங்கிருக்கும் கோயில் பற்றியும் சொல்லி அவ்வூருக்குச் செல்லலாமா என்று கேட்டது
நினைவுக்கு வந்தது.
அதற்குக் கொஞ்சம் தொடர்புடையதாகவே பட்டது மருத்துவத் துறையின் மேலிடத்திலிருந்து
வந்திருந்த உத்தரவுக் கடிதம்.
கும்பகோணத்தில் நரம்பியல் மருத்துவர்களின் செமினார் ஒன்றும் இலவச மருத்துவ முகாம் ஒன்றும் குறிப்பிட்ட தேதியில் நடக்கவிருப்பதாகவும் சத்யமூர்த்தியும் அதில் கலந்து கொள்ள
வேண்டியும் அழைக்கப் பட்டிருந்தார்.
நடக்கவிருக்கும் தேதியைப் பார்த்தார் சத்யமூர்த்தி இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.
மதிய உணவு இடைவேளையில் இது பற்றிய பேச்சாகவே இருந்தது மருத்துவர்களிடையே.மற்ற
சில மருத்துவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் செமினாருக்கு.
மரகதத்திர்க்கு கொஞ்சம் சந்தோஷமாவே இருந்தது கணவர் சொன்ன விஷயம்கேட்டு..பாத்தீங்களா.
பாத்தீங்களா....நான் அப்பவே சொன்னேன்ல..அந்த காளியம்மன் ரொம்ப சக்தி வாய்ந்ததாம் அந்த
மாமி சொன்னாங்கன்னு..அம்மன பாக்கப் போகலாமான்னு நெனைச்ச ஒடனேயே நல்லது நடக்கும்ன்னு அறிகுறிய காட்டராப்புல ஒங்களுக்கு கும்பகோணம் போகவேண்டிய அவசியம் ஏற்படுது பாருங்க...ஏதோ எல்லாமே நல்லபடியாய் நடந்து முடிந்தாற்போல சந்தோஷபடும் மனைவியைப் பார்க்க ஐயோ பாவம் என்றிருந்தது சத்யமூர்த்திக்கு.
ஏங்க..சம்பந்திக்கு ஃபோன் பண்ணலாமா..நம்ம பொண்ணு சாதனாவயும் மாப்ளயயும் கும்பகோணம்
கோயிலுக்கு அனுப்ப முடியுமான்னு.?.ரமேஷையும் கார்த்திக்கையும் கட்டாயம் அழைச்சுண்டு
போகணுங்க...