பணம் மண்...மண் பணம்... - தங்கமணி சுவாமினாதன்
நான்கு நாட்களாய் கடுமையான பல் வலி.முகமே வீங்கிப்போய் தலைவலியும் காய்ச்சலுமாக பல் வலியால் வாயில் ஆகாரம் எதனையும் போட்டு மெல்ல முடியாமல் பசியோடு கூட தவித்துக் கொண்டிருந்தார் அந்த தாய்.ஏற்கனவே வயதானதால் வற்றி மெலிந்த தேகம்.வீட்டின் வறுமையும் கூட அவரின் வற்றிய உடலுக்கு ஓர் காரணமாய் இருந்தது.அவர் வேறு யாருமல்ல...ஆன்மிகத்தை
இப்பூமியில் வளர்க்கவே அவதாரம் எடுத்த புண்ணிய புருஷர் ராமகிருஷ்ணரின் தாய்தான் அவர்.
பல் வலியாலும் காய்ச்சலாலும் துன்பப்படும் தன் தாயைப் பார்த்தார் ராமகிருஷ்ணர்.வீங்கிப் போன
முகத்தோடு,கடும் பல் வலியால் கண்களில் கண்ணீர் பெருக படுத்துக்கிடக்கும் தன் தாயைப் பார்த்த
ராமகிருஷ்ணருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
தாயை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ,மருந்துக் கடையிலிருந்து மருந்தாவது வாங்கிக் கொடுக்கவோ காலணாகூட இல்லாத நிலைமை வீட்டில். தாய் படும் துன்பம் பார்த்து வருந்தியதெல்லாம் ஓர் நொடிதான்.அடுத்தநொடி காளி மீது அவர் கொண்டிருந்த அதீத பக்தியால் காளியிடம் அவரின் மனம் ஒன்றி விட்டது.காசு பணத்தைப் பற்றிக் கவலைப் படாத மகான் ராமகிருஷ்ணர்.பணம் மண்..மண் பணம் என்று சொல்லி தன் கையில் இருந்த காசைக் கடலில் வீசி எறிந்தவரல்லவா அவர்.
படுத்திருந்த ராமகிருஷ்ணரின் தாய் மெதுவாக எழுந்து காளிகோயிலை நோக்கி நடந்தார்.நடக்க முடிய வில்லை.கோயிலின் பிரகாரத்தில் ஓரிடத்தில் சுவற்றில் சாய்ந்து கொண்டு அமர்ந்து கொண்டார் .பல்வலியும்,காய்ச்சலும் அவரைப் பாடாய்ப் படுத்தியது.குனிந்தவாறு அமர்ந்திருந்த அவரின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது.அது வலியால் ஏற்பட்ட கண்ணீரா?அல்லது வயிற்றுப் பசியால் ஏற்பட்ட கண்ணீரா அவருக்குத்தான் தெரியும்.
அந்தக் காளி கோயிலின் வாசலில் குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒன்று வந்து நின்றது.அதிலிருந்து அப்பகுதி ஜமீனைச் சேர்ந்த இளைய ஜமீந்தார் கீழே இறங்கினார்.இளம் வயது.காளியிடம் மிகுந்த பக்தியுடையவர்.இக் காளி கோயிலில்தான் ராமகிருஷ்ணர் பூசாரியாகவேலைபார்த்துவந்தார்.
ஜமீந்தார் குடும்பத்திற்கு காளிமீது மட்டு மல்ல ராமகிருஷ்ணரிடமும் மரியாதையும்,பிரேமையும், பக்தியும்உண்டு.
சாரட் வண்டியிலிருந்து கீழே இறங்கிய சின்ன ஜமீந்தார் காளியை வணங்கிவிட்டு ராமகிருஷ்ண
ரிடம் சிறிது நேரம் ஆன்மிக விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரகாரம் சுற்றிவரக்
கிளம்பினார்.அப்படிப் பிரகாரம் சுற்றிவரும் அவரின் பார்வை பிரகாரத்தில் சுவற்றில் சாய்ந்தவாறு
அமர்ந்திருந்த ராமகிருஷ்ணரின் தாய் மீது பட திடுக்கிட்டுப் போனார் அவர்.
அம்மா..அம்மா..அருகில் சென்று அழைத்தார்.
பதில் இல்லை...
அம்மா..அம்மா..மீண்டும் அழைத்தார்.
கண்களை மூடி அமர்ந்திருந்த ராமகிருஷ்ணரின் தாய் யாரோ தம்மை அழைப்பது போல் இருக்கவே
நிமிந்து பார்த்தார்.
அதிர்ந்து போனார் சின்ன ஜமீந்தார்....ஐயோ..என்ன இது..முகமெல்லாம் வீங்கிப்போய்..கண்கள் சிவந்து கண்ணீர் பெருக என்னவாயிற்று ராமகிருஷ்ணரின் தாய்க்கு..தவித்துப் போனார் சின்ன ஜமீன்.
அம்மா..அம்மா..என்னவாயிற்று அம்மா..ஏன் முகமெல்லம் வீங்கி யிருக்கிறது..?ஏனம்மா உங்கள் கண்களில் கண்ணீர்?தவிப்போடு கேட்டார் அவர்.
தட்டுத் தடுமாறி எழுந்து நின்று கொண்டார் அந்தத் தாய்.
வாயை அசைத்து பதில் சொல்ல முடியவில்லை.என்றாலும் பிரயாசைப்பட்டு பதிலளித்தார்..
பல்வலி..காய்ச்சல்..
ஏனம்மா மருத்துவரைப் பார்க்கவில்லையா..?
பதில் சொல்லாமல் மவுனமாய் இருந்தார் ராமகிருஷ்ணரின் தாய்.
சொல்லுங்களம்மா..
மருந்து வாங்கக் காசில்லை....வீட்டின் வறுமையை இன்னொருவரிடம் சொல்கிறோமே என்ற
எண்ணம் ஏதும் இல்லாமல் வெள்ளந்தியாய் பதில் சொன்னார் அவதார புருஷனை மகனாய்த்
தன் வயிற்றில் சுமந்த அந்தத் தாய்.
அந்தத் தாயின் பதிலை கேட்டு அருவியெனக் கண்ணீர் பெருகியது சின்ன ஜமீனுக்கு.
சட்டென தன் சட்டைப் பையிலிருந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்தத் தாயிடம் நீட்டினார்.
மருந்து வாங்கிக்கொள்ளுங்கள் அம்மா...தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள்...
தீயை மிதித்தவர் போல் இரண்டடி பின்னால் நகர்ந்தார் அந்தத் தாய்...
ஐயோ..வேண்டாம்..வேண்டாம்...பணமெல்லாம் ஏதும் வேண்டாம்..என் மகன் இதனை அறிந்தால்
மிகுந்த வேதனை அடைவான்....என்னிடமும் என் மருமகளிடமும் அவன் சத்தியமொன்று
வாங்கியுள்ளான்..அது..யாரிடமும் எந்த உதவியும் கேட்கக் கூடாது..யார் எது கொடுத்தாலும்
அதைப் பெறக்கூடாது...பொருளோ,பணமோ யாரிடமிருந்தும் வாங்கக் கூடாது..தன் சொந்த
உழைப்பின் மூலம் கிடைக்கும் பணமின்றி..வேறு எவ்வழியிலிருந்து வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என சத்தியம் வாங்கியுள்ளான்..எனவே இப் பணத்தை என்னால் பெற்றுக்கொள்ள முடியாது என மிகுந்த பிரயாசையுடன் பல் வலியைப் பொறுத்துக்கொண்டு சொல்லிமுடித்தார் அந்தத் தாய்.
அத் தாயின் பதில் சின்ன ஜமீந்தாருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.தன்னால் அந்தத் தாய்க்கு
உதவ முடியவில்லையே என்ற வேதனை அவ்ர் முகத்தில் பிரதிபலித்தது.அம்மா என்றார் நா
தழுதழுக்க..
ஐயா....என்று எதையோ சொல்ல ஆரம்பித்த ராமகிருஷ்ணரின் தாய் சட்டென அமைதியானார்.
அம்மா..எதையோ சொல்லவந்தீர்கள்..என்னவென்று சொல்லுங்களம்மா...ஆர்வத்தோடு கேட்டார் சின்ன ஜமீன்.
ஐயா..மன்னித்து விடுங்கள் ஐயா.. உங்கள் மனதை வருத்த எனக்கு மனமில்லை..பல்வலிக்கு..புக
யிலையைப் பொடித்து வலிக்கும் பல்லில் வைத்தால் வலி சரியாகும் என்று சொல்வார்கள் ஒரு
காலணாவுக்குப் புகையிலைப் பொட்டலம் வாங்கித் தரமுடியுமா?
ஒரு சின்ன உதவியாவது செய்ய முடிந்ததே என்று கொஞ்சம் நிம்மதியானார் சின்ன ஜமீந்தார்.
அடுத்த் நிமிடம் காலணா மதிப்புள்ள புகையிலைப் பொட்டலம் ராமகிருஷ்ணரின் தாயின் கைகளில்.
அந்தத் தாய் நன்றி சொல்ல விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தார் சின்ன ஜமீந்தார்.
புகயிலைப் பொட்டலத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டாலும் அதனைப் பயன்படுத்த ராமகிருஷ்ணரின் தாய்க்கு மனமில்லை.தன் மகன் யாரிடமும் எந்த உதவியும் பெறக்கூடாது எனத்
தன்னிடம் சத்தியம் கேட்டுப் பெற்றிருக்கையில் தான் அதை மீறி சின்ன ஜமீந்தாரிடமிருந்து
புகையிலைப் பொட்டலத்தைக் கேட்டு வாங்கியது அவரின் மனதை உறுத்தியது.
தன் மகனிடம் கேட்காமல் அதனைப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார் அந்தத் தாய்.
காளியின் சன்னிதானம்.சன்னிதானத்திற்கு நேரெதிரே காளி சிலையைப் பார்த்தவாறு தியானத்தில்
அமர்ந்திருந்தார் ராமகிருஷ்ணர்.அவர் தியானத்திலிருந்து எப்போது மீள்வார் என்பதை யாரும் சொல்ல முடியாது.சில நேரங்களில் பல மணி நேரம் பிடிக்கும் அவர் தியானத்திலிருந்து மீள.
அவ்விடம் போய் அமர்ந்து கொண்டார் ராமகிருஷ்ணரின் தாய்.கையில் புகையிலைப் பொட்டலம்.
நெடு நேரம் ஆகிய பின் கண்களைத் திறந்தார் ராமகிருஷ்ணர்.ஜெய்...மகா காளீ..என்று சப்தமிட்டபடி காளியை வணங்கினார்.எழுந்தவரின் கண்களில் தாய் அம்ர்ந்திருப்பது படவே.. தாயே..என்றார்.
ராமகிருஷ்ணா இங்கே பார்..வலது கையைப் பிரித்துக்காட்டினார்.
என்ன தாயே இது?
புகையிலைப் பொட்டலம்..
ஏது இது.?.எதற்காக?
பல்வலிக்கு வைத்தால் சரியாகும்...
எப்படிக்கிடைத்தது..?
நடந்த அனைத்தையும் விபரமாகச் சொன்னார் அந்தத் தாய்...
ராமகிருஷ்ணரின் முகத்தில் மிகுந்த வருத்தம்..பிறரிடமிருந்து எந்த உதவியையும் கேட்டுப் பெற
மாட்டேன் என்று தனக்களித்த சத்தியத்தை தாய் மீறிவிட்டாரே என்ற வருத்தமா?அல்லது காலணாவுக்குப் புகையிலை வாங்கித்தரக் கூட தன்னிடம் வசதியில்லையே என்ற வருத்தமா?
தாய்க்கு பதில் ஏதும் சொல்லாமல் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார் ராமகிருஷ்ணர்.
புகையிலையைப் பயன்படுத்துவதா வேண்டாமா ஒன்றும் புரியாமல் கையிலிருக்கும் பொட்டலத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார் மக்களின் அறியாமையைப் போக்கவும்,
உலகெங்கும் ஆன்மிகம் வளர்க்கவும் தன் வாழ் நாளையே அர்ப்பணித்த தெய்வ மகனைப் பெற்ற
அந்தத் தாய்...
சில்சீயில் மலரும் கதைகளெல்லாம் அழகும் வாசமும் நிறைந்த ரோஜாப்பூக் கதைகள்..
அந்த ரோஜாக் கூட்டதின் நடுவில் அல்லிப் பூவாய் இக்கதையும் இருந்தால் யாரும் ரசிக்காமல் போகமாட்டார்கள் என நம்பி இக்கதையை எழுதியுள்ளேன்..நன்றி
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.