சுவாச புழுதியில் பிணைப்பட்ட நானும் எனது காதலும் - சாணக்யசித்தார்த்தன்
This is entry #52 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
ஜீவா தனது பாம்டாப், ஹெட்செட்டை எடுத்துக்கொண்டு தயாராகினான். அவன் கண் முன்னே அது மிகப் பிரம்மாண்டமாய் நின்றுகொண்டிருந்தது. கூர்மையான முன்பகுதி, நீண்ட வால் போன்ற பின்பகுதி, பக்கவாட்டில் கண்ணாடி குமிழ்கள், பார்ப்பதற்கு ராட்சத திமிங்கலம் போல, கம்பீரமாக இருந்தது. ஒரு ஊரே அதில் பயணம் செய்யுமளவு பெரியதாக இருந்தது. உறைந்த பனி, ஆழ்கடல், பாலைவனம், சதுப்புநிலம் என எல்லா சூழலிலும், எந்த இடத்திலும் செல்லக்கூடிய, அனைத்து வசதிகளும் அடங்கிய மனிதனின் மிக சிறந்த படைப்பு அது. ஜீவா உட்பட 200 மனிதர்கள், தங்கள் கனவில் கூட பார்த்திடாத பூமியின் சில பகுதிகளை பார்வையிட தயாராக இருந்தனர். மிக தொண்மையான விஷயங்கள், முன்னோர்களின் வாழ்க்கைமுறை பற்றி அறிய இந்த பயணம், ஒரு நல்ல அனுபவமாக இருக்குமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். 2070 ம் ஆண்டில், இந்த நிகழ்வு ஒரு சாதனையாக அமையும் என எல்லாரும் எண்ணினர்.
இந்த பயணத்த பத்தி சொன்ன நிமிசத்துல இருந்தே ஜீவாக்கு சந்தோசம் தாங்கல, நிகில் - ப்ரிசில்லா இருந்த இடத்த பாக்கபோறோம்னு அவனுக்கு ஆர்பரிப்பு. அவன் இந்த ரெண்டுநாளா நிகில் - ப்ரிசில்லா வ தவிர வேற எதுவும் யோசிக்கல. “எப்ப போவோம், எப்ப போவோம்”னு அவன் மனம், ஆர்வத்தில் அவனை நச்சரித்துக்கொண்டே இருந்தது. அனைவருக்குமே இதே ஆர்வம் தான் இருந்தது, அதுனாலதான் இந்த பயணத்துக்கு நிகில் - ப்ரிசில்லா னு பேர் வச்சாங்க.
அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, “பயணம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகப்போகிறது, இந்த பயணத்தில், உங்களுக்கு எந்த ஒரு உதவி
வேண்டுமானாலும், ஹெச்-2 ரோபோட்டை, …” என்று அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜீவா தனது பாம்டாப்பில் ஹெட்செட்டை மாட்டி, வாய்ஸ் கமாண்டை ஆக்டிவேட்செய்தான். இந்த ரெண்டுநாள்ல, பல தடவ கேட்டிருந்தாலும், கொஞ்சம் கூட ஆர்வம் கொறையாம திரும்ப கேட்டான்.
“நிகில் யார்?”
“இந்த பயணத்துல குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே ஆக்சஸ் செய்ய முடியும். நீங்கள் கேட்கும் தகவல் இல்லை”
“ப்ரிசில்லா யார்?”
“இந்த பயணத்துல குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே ஆக்சஸ் செய்ய முடியும். நீங்கள் கேட்கும் தகவல் இல்லை”
“மதுரையை பற்றி கூறு”
“மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. கோவில் நகரம் என்று அழைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், வைகை ஆற்றுக்கும், புகழ் பெற்றது. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர், ஜல்லிக்கட்டு ....” என்று பாம்டாப் கூறுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன்பு...
நாளை தனது 12-வது பிறந்தநாளை கொண்டாட போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் தூக்கத்தில் மூழ்கினான், ஜீவா. விடியற்காலை 2:70 மணிக்கு கான்றோவின் வெளிச்சம் அவனை துயில் எழுப்பியது. அவனுக்கு அனைத்தும் விந்தையாக இருந்தது. அவன் டெல்தஸ்ஸில் (பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கூடாரம்) பார்க்கும் இடமெல்லாம் தோரணங்களாகவும், வர்ண விளக்குகளாகவும் "ஹாப்பி பர்த்டே டு நிகில் & ப்ரிசில்லா" என்று எழுதியிருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சர்யம், எப்படி எனது டெல்தஸ்ஸில் எந்த ஒரு சத்தமும் இன்றி இதெல்லாம் வந்தது.
டெல்தஸ்ஸில் இருந்து வெளியே வந்து, அவன் பார்க்கும் இடமெல்லாம் தோரணங்களில் நிகில், ப்ரிசில்லா என்ற பெயர்கள் தான். அந்த ஊரே அதை கொண்டாடிக்கொண்டிருந்தது.“யார் இந்த நிகில், ப்ரிசில்லா?, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லையே, நான் பாக்குற எடமெல்லாம் இந்த பேருதான் தெரியுதுன்னு“ கண் கண்ணாடியே தொடச்சுட்டு போட்டான். அப்பயும் அதே தான் தெரிஞ்சது. குழப்பத்தோடயே, ஹோவர் போர்டுல ட்ரைனிங் செக்டார்க்கு போனான். தன்னோட சக நண்பர்கள்கிட்ட கேட்டதுக்கு, ஒரே பதில்தான் அவனுக்கு கெடச்சது, “எங்களுக்கும் தெரியாது”.
ரொம்ப நேரம் ஆகியும் எந்த ஒரு ரோபோட்டும் வரல. மணி 2:97 ஆனது. எஸ்-2 ரோபோட் ஒண்ணு வந்து, அங்க இருக்குற எல்லாத்தையும் க்யூபிகல் ஷாப்டில் கூட்டிட்டு போய், ஒரு பெரிய அரங்கத்துல சேத்தது. அங்க எல்லாருமே இருந்தாங்க. கடைசியா நாங்க வந்ததும், இதுவரைக்கும் நாங்க பாக்காத எக்ஸ்-2 ரோபோட் ஒண்ணு, “15 வருசத்துக்கு ஒரு தடவை இந்த நாள் வரும். இத பத்தி எல்லாத்துக்கும் சொல்லனும்னு நம்ம ஹெச்.ஓ.ஏ. ஆசைப்பட்டார். அதான் உங்க எல்லாத்தையும் இங்க வரவழைச்சுருக்கோம்.”னு சொல்லிட்டு இருக்கும் போது, ஹெச். ஓ. ஏ. கூப்பர்காஃப்டில் வந்தார்.
“இந்த நாள நம்ம வாழ்நாள்ல எப்பயுமே ஞாபகம் வச்சுருக்கணும். இன்னைக்கு நிகில்,ப்ரிசில்லா பிறந்தநாள். நாம இப்போ உயிரோட இருக்கோம்னா அதுக்கு காரணம் அவங்க தான். இந்த மகத்தான நாள்ல அவங்கள பத்தி சொல்றதுல்ல நான் ரொம்ப சந்தோசப்படுறேன்.
நிகில் - சிறந்த கணித மேதை. வானவியல் வல்லுநர். தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்துவளர்ந்தவர். தனது பதினைந்து வயதிலேயே ஹபல் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை தனி ஒருவனாக வடிவமைத்தவர்.