"இந்தாங்க மிச்ச சில்லறைக்கு சாக்லேட்! இங்கே சில்லறை எப்போதும் தட்டுப்பாடு"
"குருவாயூர் எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பாரம்ல வரும்?"
"மூணாவது"
"சரிங்க!"
ஸ்டேஷனுக்கு உள்ளே நடந்து. நடைபாதைப் பாலத்தில் ஏறி, மூன்றாவது நடைமேடையில் இறங்கினார்கள். ரதியையும், மாதவனையும் தவிர யாரும் அங்கு இல்லை. நடைமேடையில் இருந்த ஒரு உலோக பெஞ்சில் அமர்ந்தோம். யாரும் இல்லாத அமைதியான ரயில் நிலையம் ஆச்சரியமாக இருந்தது. அன்று முழுநிலவு தினம். எனவே நிலவின் பிரகாசம் இருவரையும் ஈர்த்தது. மாது, தனது டிஜிட்டல் காமிராவை வெளியே எடுத்து, நிலவைப் புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான். திடீரென்று ஒரு சத்தம் கிளம்பிற்று. மோட்டாரைப் போட்ட சத்தம் கேட்டது, மூன்று பெண்களும் ஒரு ஆணும் வந்தனர். இரண்டு பெண்கள் ஒவ்வொரு பெட்டியாக வந்து பெருக்கினர். ஒரு பெண், தண்டவாளத்தில் கிடந்த குப்பைகளைப் பெருக்கினார். ரயில் நிலையத்தில் கழிவறையைப் பயன்படுத்தக்கூடாது என்று எழுதி வைத்தும், தண்டவாளத்தில் கடந்த கழிவுகளை அவர்கள் அகற்றிக் கொண்டிருந்தைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. அந்த ஆண், ஒவ்வொரு பெட்டியாக வெளிப்புறத்திலும், கழிவறைகளையும் பைப்பில் நீர் வைத்து கழுவி சுத்தம் செய்தார். அவர்களைப் பார்த்துக் கொண்டே ரதி இருக்க, அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக நகர்ந்து, ரதியும் மாதவனும் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து தூரமாகச் சென்றுவிட்டனர்.
மாதவனும் காமிராவும் கையுமாக இருக்க, அவர்கள் அருகே நெருங்கி வந்த ஒரு உருவத்தைக் கவனிக்கவில்லை. திடீர் என்று திரும்பிய ரதி, அவர்களை நோக்கி ஒரு கருப்பு உருவம் வந்து கொண்டு இருந்தததைக் கண்டு அதிர்ந்தாள். மனிதனா, பேயா, ஏதேனும் ரயிலில் அடிபட்டவரின் ஆவியா என்றெல்லாம் ரதிக்குத் தோன்றியது. "மாது, மாது என்று ரதி மிகவும் மெல்லிய குரலில் கூப்பிட, மாதுவின் காதில் விழவில்லை. மாது அங்கே பாரு என்று அவள் கையைப் பிடிக்க, மாதுவும் திரும்பினான். அந்த உருவம் இன்னும் நெருங்கி வரும் போது, அது ஒரு மனிதன் என்பது தெரிந்தது. அந்த மனிதன் கிழிந்த உடைகளை உடலைச் சுற்றி இருந்தார், அவரது கிழிந்த அழுக்கு வேட்டியை ஒரு கையினால் பிடித்து இருந்தார். அவரது தலைமுடியில் பல முடிச்சுக்கள், முகமே தெரியாத அளவுக்குப் படர்ந்த நீண்ட தாடி என்று மொத்தத்தில், அவர் பார்ப்பதற்கே மிக பயங்கரமாகத் தோன்றினார். அவர் கத்தியைக் காட்டிப் பணம் அல்லது நகைகளைக் கொடு என்று தங்களை மிரட்டப்போவதாக ரதி பயந்தாள். “அமைதியா இரு ரதி!” என்றான் மாது. அவர் ரதியும், மாதவனும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மேலும் நெருக்கமாக வந்த போது, ரதி ஒரு கணம் மூச்சுக் கூட விடாமல் மிரண்டு இருந்தாள். அவள் பயந்த அளவு அவர் எந்த தீங்கும் செய்பவரில்லை என்றும் தோன்றியது. அந்த அழுக்கு மனிதர் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து, அங்கே மூடியிருந்த உணவுக்கடையின் வெளியில் இருந்த குப்பைத்தொட்டியின் அருகே சென்றார். அவர் காலை மடித்து அமர்ந்து, அந்த குப்பைத்தொட்டிக்குள் தனது கையை உள்ளே விட்டு எதையோத் தேடத் தொடங்கினார். அவர் செய்வது புதிராக இருந்தது. டக்கென்று ஒரு விசித்திர ஒலி கிளம்பியது. அவரைப் பார்க்காதது போல் ஓரக்கண்ணால் அவரைக் கவனித்துக் கொண்டு இருந்த ரதிக்குத் தூக்கிவாரிப்போட்டது. வீடாக இருந்தால் இந்நேரம் அவள் அலறி இருப்பாள். அவர் குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து வெளியில் எடுத்துப் போட்டது ஒரு பெருச்சாளி. அந்த பெருச்சாளி மீண்டும் குப்பைத்தொட்டியின் அருகே வர முயற்சி போது, அவர் அதைக் காலால் உதைக்க அது தடுமாறி ரதி உட்கார்ந்த இடம் நோக்கி ஓடி வந்தது. பயந்து காலைத் தூக்கி மேலே வைத்துக் கொண்டாள். அவரின் தேடல் தொடர்ந்தது. மாது இதையெல்லாம் கவனியாதவன் போல அமைதியாக நின்றுகொண்டு இருந்தான். பின்னர் அவர் அந்த குப்பைத்தொட்டியில் அனைத்துப் பொட்டலங்கள் மற்றும் வாழையிலைகளில் இருந்து திரட்டப்பட்ட உணவு கழிவுகள் எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு பார்சல் மாதிரி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், அங்கு ஒரு வெற்று தேநீர் காகித கோப்பையை எடுத்துக்கொண்டார். மீண்டும், அவர் ரதி, மாதவன் இருந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் ரதி உட்கார்ந்து இருந்த பெஞ்ச் மிக அருகில் வந்த அவர் சடாரென்று குனியவும், ரதிக்கு இருதயமே ஒரு நிமிடம் நின்று விட்டது. கீழே இருந்த தேநீர் கோப்பையில் பாதி தேநீர் இருந்திருக்கிறது, அதை எடுத்துக் கொள்ளக் குனிந்து இருக்கிறார். அவரைத் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை. ஒரு கையில் அந்த உணவுப் பொட்டலம், இன்னொரு கையில் தேநீர் கோப்பை எடுத்துச் சென்றார். வந்த மாதிரியே ஒரு கருப்பு உருவமாய் தூரத்தில் மறைந்து விட்டார். "அவரை நம்பியும் சாப்பாட்டுக்குச் சில ஜீவன்கள் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் எடுத்துட்டுப் போறாரு!" வாய் திறந்தான் மாது. ஏற்கனவே ரதி மனதில் பல கேள்விகள் "ஏன் அவர் உழைத்துப் பிழைக்க வேலைக்குச் செல்லவில்லை? அவர் ஏன் குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து எச்சில் உணவு சாப்பிட வேண்டும்? "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி சொல்லியும் ஜகத்தினை யாரும் இன்னும் அழிக்கவில்லை? ஏன் இன்னும் பாரதத்தில் பசி மரணங்கள்? ஏன் பிச்சை இருக்கிறது? ஏன் நமது அரசியல்வாதிகள் இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செல்லுத்தவில்லை..ஏன்?ஏன்?ஏன்?இவ்வளவு கேள்விகளுக்கு நடுவில், நம்மிடம் சாப்பாடு தான் இல்லை, வாங்கி வைத்த நேந்திரம் சிப்ஸ் பாக்கெட்டையாவது கொடுத்து இருக்கலாம். கொடுக்கவில்லையே..ஏன்?” என்ற கேள்வி பெரிதாக நின்றது. நம் நகை, பணம் போய்விடுமோ என்ற பயம் தான் பெரிதாக நின்றது. அதை விட அந்த மனிதனின் பசி பெரிதல்லவா? ரயில் நிலையத்தில் ரயிலின் வருகையை அறிவிப்பு செய்யத் தொடங்கினர். நடைமேடையில் இன்னும் சில மனிதர்களும் வந்தனர். ரயிலும் வந்தது.அவர்களுக்கான பெட்டியில் ஏறும் போது ரதி சொன்னாள், "கனமா இருக்குங்க!" என்றால் வலியுடன்.
"என்ன பெட்டியா? என்றான் மாது"
"இல்லை..மனசு!"
{kunena_discuss:785}