2017 போட்டி சிறுகதை 11 - மறக்க முடியுமா? - ஜான்சி
This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை - முடிவுக்கான கதை
எழுத்தாளர் - ஜான்சி
நவம்பர் 1 2016:
அம்மா சம்பளம் வந்திடுச்சி…..இந்த மாசம் எப்படியாவது நீங்க சேர்த்து வச்சிருக்கிற பணம் எல்லாம் சேர்த்து அந்த நெக்லஸை வாங்கிடலாம்மா………..
மகளின் பேச்சைக் கேட்டு அம்மாவின் முகம் பிரகாசித்தது. எத்தனை கால ஆசை இது, இதோ இப்போது தான் கைக் கூடப் போகிறது. அந்த நகைக் கடையில் விலைக் கேட்டு வந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாய் ரூபாய் சேர்த்து இப்போது தான் எப்படியோ முழுதாக ஒரு லட்சம் சேர்த்து விட்டாள். அத்தனையும் சூதாடியான தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் சேர்ப்பதற்க்குள் அவள் பட்டப் பாடு.
வீட்டில் எங்கு வைத்திருந்தாலும் அதை தேடி எடுத்துக் கொண்டுச் சென்று விடும் கணவனின் சமார்த்தியத்தை விட அவள் மிஞ்ச வேண்டியதாகி விட்டது. ஒரு நேரம் அரிசி டப்பாவில் என்றால் மறு நேரம் தலைகாணிக்குள்ளாக என்று தினமும் பத்திரப் படுத்தி வைப்பதற்க்குள் அவளுடைய ரத்த அழுத்தம் எகிறிப் போகும்.
பக்கத்திலிருக்கும் பள்ளியில் ஆயா வேலைப் பார்த்துச் சிறுக சிறுகச் சேர்த்த பணத்தோடு பள்ளிப் படிப்பை முடித்தது முதலாக மேலும் படிக்க வழியில்லாமல் எக்ஸ்போர்ட்டில் சில வருடங்களாக பணிபுரிந்து மகள் தந்த சம்பளப் பணமும் சேர்த்து வைத்தது தான் அந்தப் பணம்.
கதவை தாழிட்டு அன்னையும் மகளும் ஐநூறும், ஆயிரமுமாக இருந்த அந்த நோட்டுக்களை மறுபடியும் எண்ணி முடித்தனர். மனதிற்க்குள் பரவசம். இத்தனை ரூபாய்களை அவர்கள் மறுபடியும் , மறுபடியும் பார்க்க கூடியதா என்ன? வாஞ்சையோடு தங்கள் சேமிப்பை பார்வையிட்ட தாயும் மகளும் உருப்படாத அவர்கள் குடும்பத்தின் தலைவனுக்கு தெரியாமல் அதை ஒளித்து வைத்தனர்.
இந்த ஞாயித்துக் கிழம நாம நகைக் கடைக்கு போவோமா சுமி?
சரிம்மா…..
கவனம் கவனம் உங்க அப்பாக்கு தெரியாம பார்த்துக்கணும், இப்படி கொஞ்சம் நகையை சேர்த்தா தான் உன் கல்யாணத்துக்கு கொஞ்சமாவது நகையை சேர்க்க முடியும் , உங்க அப்பனை நம்பிக்கிட்டு இருந்தா அவ்வளவுதான்…. பெருமூச்செரிந்த அன்னையை
என்னம்மா எப்ப பார்த்தாலும் சோகமா பேசிக்கிட்டு…… எதுக்கு கவலப் படுற அடுத்தால ரூவா சேர்த்து உன் கைக்கு வளையல் செய்யணும்னு இல்ல நான் நினைச்சிட்டு இருக்கேன்.. என்றாள் சுமி என்னும் சுமித்ரா.
ஆமா இப்போ நான் தான வாலிப பிள்ளை எனக்கு தான் வளையல் செஞ்சு போடணும்…. பேச்சப் பாரு…… மகளின் பேச்சை மறுத்துப் பேசினாலும் மகிழ்வாகவே அடுத்தடுத்து செய்ய எண்ணியுள்ளவற்றை கண்களில் கனவுகள் மலர்வுற உரையாடிக் கொண்டிருந்தனர்.
6 Nov 2016 ஞாயிற்றுக் கிழமை:
என்னம்மா இது அப்பா இன்னிக்கு வெளியவே போகாம இருக்காரு ……..
ஆமாடி……..
இப்ப என்னச் செய்யிறது இவரு முன்னாடி எப்படி ரூவாய எடுக்கிறது…..
அதானே…..
சற்று நேரம் கழித்து….
ஏண்டி அறிவுக் கெட்டவளே ………இன்னிக்கு சாப்பாடு எதுவும் போடுறதா இருக்கியா இல்லியா….
இதோ வரேங்க……
…………….
அம்மா இன்னிக்கு முழுசும் இப்படி நாம கடைக்கு போக முடியாம ஆகிப் போச்சே….
ஸ்ஸ்… சும்மாயிரு அப்பா முழிச்சிடாம… நீ.போய் தூங்கு …….அடுத்த ஞாயித்துக் கிழம போகலாம்……….
சரிம்மா……..
8th Nov 2016:
அம்மா அம்மா என்னாச்சும்மா ஏம்மா இப்படியிருக்கிற……..எதுக்கும்மா அழற?
பாவி மகளே நாம கஷ்டப் பட்டு சேர்த்த பணமெல்லாம் வீணாப் போச்சேடி..
என்னாச்சும்மா…
நம்ம பணமெல்லாம் இனி செல்லாதாம் இன்னிக்கு ராத்திரி வரைக்கு தான் செல்லுமாம்………….சொல்லி ஓவென ஒப்பாரி வைத்தாள் அந்த எளியப் பெண்மணி.
என்னது யாரு சொன்னா அப்படி, பொறும்மா என் ஃபிரண்டு முகேஷ் கிட்ட கேட்டுட்டு வரேன். அவனுக்கு எப்படியும் எல்லா விபரமும் தெரியுமா இருக்கும்..
சுமித்ராவும் முகேஷூம் பள்ளி நண்பர்கள் இவள் படிப்பை இடையில் விட்டது குறித்து அவனுக்கு வருத்தமே. தற்போது கல்லூரிப் படிப்பை நிறைவுச் செய்து விட்டு தனியார் அலுவலகத்தில் பனி புரிந்து வருகின்றான் அவன். சுமித்ராவுக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலில் முன் நிற்பான்.
அம்மா அம்மா இங்க பாருங்க நான் சொன்னா நம்ப மாட்டீங்கன்னு முகேஷையே கூட்டிட்டு வந்துட்டேன்….அழாதீங்கமா அவன் என்னச் சொல்லுறான்னு கேளுங்க ……