2017 போட்டி சிறுகதை 43 - அவன் கொடுத்த சாபம் - அமுதா
This is entry #43 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி / கல்லூரி நாட்கள்
எழுத்தாளர் - அமுதா
மரங்கள் அடர்ந்த கல்லூரி சாலை. நயனா நடந்து கொண்டிருந்தாள்.
“ஹலோ, என் பேரு சிவா, எம்.காம்.பைனான்ஸ்...”, திடீரென ஒரு மாணவன் அவள் குறுக்கே வந்து நின்றான். “இவன் யார்...? நான் எதையும் கேட்க வில்லையே....! என்னிடம் எதற்கு இந்த அறிமுகம்...?”, மனதில் கேள்விகளோடு முதன்முதலாக அவனைப் பார்த்தாள்.
மாநிறம், களையான முகம், 5’9” உயரம், மெலிதான புன்னைகை, நிறைவான அறிவுடையவன் போல் தோற்றம்...! அவனுக்கு என்ன பதில் தருவது எனத் தெரியாமல், அமைதியாக தலை அசைத்து விட்டு தன் வழி நடந்தாள்.
மற்றொரு நாள், மறுபடியும் “ஹலோ, என் பேரு சிவா, எம்.காம்.பைனான்ஸ்...”, அதே அறிமுகம். “மனநிலை சரியில்லாதவனோ...?”, இம்முறை தலை அசைக்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
சிவா உருவம் முழுவதுமாக அவள் மனதில் பதியவில்லை. அவன் மெலிதான புன்னகை, வார்த்தைகள் மட்டுமே அவனை காட்டிக் கொடுத்தன.
இதைத் தொடர்ந்து, கல்லூரியில் பல இடங்களில் “என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா...? உங்க கூட பேசியிருக்கேன்...”, அவளிடம் ஆண் யாராவது அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தனர்.
தன் தோழியிடம் “எங்க போனாலும்...ஏன் எல்லாரும் என்னை தெரியுமான்னு கேட்கிறாங்க...?”, குழம்பினாள். தோழியும் சேர்ந்து குழம்பினாள். “ஒருவேளை பிரமையோ...?”, தன் மனநிலை குறித்து நயனாவுக்கு சந்தேகம் வந்தது.
ஒருநாள் கேண்டினில் அவள் காபி குடித்துக் கொண்டிருந்த போது, எதிரில் அவன் வந்து உட்கார்ந்தான். “தெரிந்தவர் யாரும் பார்த்து விடுவார்களோ...!”, என்ற படபடப்பில் அடிக்கடி பின்னால் திரும்பி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னர் அவளிடம் ஏதோ பேச முயற்சித்தவன் தலையை லேசாக அசைத்து விட்டு குனிந்து கொண்டான். அவன் செய்கையால், அங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற நினைப்போடு வேகமாக காபி குடித்து எழுந்தாள் நயனா. அவனும் உடனே எழுந்து விட்டான்.
கேண்டினுக்கு வெளியே வந்தவுடன் “என்னங்க, கொஞ்சம் நில்லுங்க. நான் உங்கள கல்யாணம் பண்ணனும். உங்க அம்மா, அப்பாகிட்ட பேசணும். உங்க அட்ரஸ் கொடுங்க...”, என்றான். மொபைல் போன் புழக்கத்தில் இல்லாத காலம் அது.
“அய்யோ, படிக்க வந்த இடத்தில இந்த மாதிரி பசங்களோட பேசுறதே தப்பு. இதுல கல்யாணம் பண்ணும்னு வீட்டுல கேட்டா...!”, நினைக்கவே அவளுக்கு படபடப்பானது. அதனால், அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓடிவிட்டாள்.
நாட்கள் சென்றன. நூலகத்தில் அவள் படித்துக் கொண்டிருந்த போது ஏதோ உள்ளுணர்வில் நிமிர்ந்து பார்த்தாள். உள்ளே அவன் நுழைந்து கொண்டிருந்தான். புன்னகை அவனைக் காட்டிக் கொடுத்தது.
“பேசிக் கொண்டிருக்கும் போதே...ஓடியதற்காக சத்தமாக திட்டுவானோ...?”, சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள். அவள் எதிரில் உட்கார்ந்தவன்... எதுவும் பேசவில்லை....இம்முறை அவனிடம் படபடப்பு இல்லை. வலது கை விரல்களால் கண்களையும் மறைத்துக் கொண்டான்.
ஐந்து நிமிடமாக அப்படியே இருந்தான். நயனா சத்தமில்லாமல் எழுந்து தனது இருக்கையை மெல்ல நகர்த்தினாள். பட்டென்று கண்களிலிருந்து விரல்களை விலக்கியவாறு ”என்ன...?”, கண் ஜாடையில் கேட்டான்.
மாட்டிக் கொண்டவளாய் “ஒன்றுமில்லை...”, தலையை மட்டும் அசைத்தாள். முக பாவனையில் மீண்டும் உட்கார சொல்லி மிரட்டினான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல், விரித்த புத்தகத்தை கெட்டியாக பிடித்து சிரத்தையாக படிப்பவள் போல் குனிந்து கொண்டாள்.
பழையபடி கண்களை விரல்களால் மறைத்துக் கொண்டவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். சிரிப்பை அவன் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. “விரல் இடுக்கில் ஏதும் பார்க்கிறானோ....?”, விரல் இடைவெளிகளை சோதித்தாள். இடைவெளி இல்லை.
மிகவும் கவனமாக இருக்கையை விட்டு எழுந்து சத்தமின்றி நுழைவாயில் நோக்கி வேகமாக நடந்தாள். இம்முறை அவன் ஏதும் செய்யவில்லை. கண்களை மறைத்திருந்த ஆள்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையே இடது கண்ணால் அவள் செல்வதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
பின்பு சில காலம்...அவள் வழியில் அவன் காத்திருப்பதும், அவனைப் பார்த்ததும் பூச்சாண்டியைப் பார்த்தது போல் அவள் ஓடுவதும் தொடர்ந்தது. கொஞ்ச நாட்கள் கழித்து அவள் பார்வையில் அவன் படவில்லை. அத்தோடு அவளும் அவனை முற்றிலுமாக மறந்து விட்டாள்.
பட்ட மேற்படிப்பின் இறுதி நாட்கள் நெருங்கியது. நிறைய நேரத்தை அவள் நூலகத்தில் செலவிட வேண்டிய கட்டாயம். படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் சலிப்பை தரும் போது கவிதை, சமையல், ஓவியம் சம்பந்தமான புத்தகங்களை பார்வையிடுவாள்.