(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - புருஷ லட்சணம் - K.சௌந்தர்

Purushalatchanam

சுதீர்  , இன்னும்  எவ்வளோ  நேரம்  தூங்கப்போறே ? எழுந்து இந்த  டீயைக் குடி " என்று தேநீர்க் கோப்பையை மேஜை மேல் வைத்தார் சிவநேசன்.

சுதீர் அரைக் கண்ணைத் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. “ச்சு என்னப்பா நீங்க, காலங்காத்தால தொல்லை பண்ணிக்கிட்டு" என்றபடி புரண்டு படுத்தான் .

"வர வர நீ சுத்த சோம்பேறியாயிட்டே சுதீர். பாரு தாடியைக் கூட மழிக்க உன்னால முடியலை”

"அதனால என்னப்பா இது கூட எனக்கு ரொம்ப அழகா இருக்கறதாதான் எல்லோருமே சொல்றாங்க” என்றான் பெருமையாக.

“சரி சரி சீக்கிரம் எழுந்து  இந்த வாத்தியார் வேலைக்கான அப்ளிகேஷன பில் அப் பண்ணி போடு . இன்னிக்குத்கான் கடசி தேதி. போனதடவை  கேட்டப்பவே நீ  போடாம விட்டுட்டே. உன் கூட படிச்ச  சுந்தரம் ஒழுங்கா அப்ளை பண்ணி இப்போ அவனுக்கு வாத்தியார் வேலை கெடச்சிருக்கு. அவனுக்கு கல்யாணம் பண்ணணும்னா பொண்ணுங்க நான், நீ ன்னு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க”  என்றார் சிவநேசன்.  

“அப்பா  நீங்க சொன்ன மாதிரி வேலைக்குப் போயிதான் பொண்ணு தேடனும்ற அவசியம் எனக்கில்லை. இப்போவே  என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தறாங்க தெரியுமா? அவ்வளவு ஏன், நம்ம மாமா பொண்ணு அஞ்சுவுக்கே என்மேல ஒரு கண்தான் . அதனால எனக்கு கல்யாணம் பண்றதப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. கடவுள் எனக்கு அழகை அள்ளிக் கொடுத்திருக்கார், அதை வச்சி நா சினிமா ஹீரோ   ஆகப் போறேன், இந்த வாத்தியார் வேலைக்கு போற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை" என்றான்.

“சுதீர் சினிமாவில் நடிக்கக் கூட வெறும் அழகு மட்டும் போதாது. நிறைய திறமையும் வேணும். அதனால சும்மா நாலுபேரு சொல்றத வச்சி ஏதேதோ கனவு கண்டுக்கிட்டு இருக்காதே. அது நிஜ வாழ்க்கைக்கு நல்லதில்லை" என்றார் சிவநேசன்.

தான் சொன்ன எதையுமே காதில் வாங்காமல் மடமடவென டீயைக் குடித்துவிட்டு மறுபடியும் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் மகனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவாறு வெளியேறினார் சிவநேசன்.

சிவநேசன் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அவருக்கு சுதீர் ஒரே மகன். எல்லோரும் சொல்வது போல  மிகவும் அழகானவன்தான்.  போன வருஷம்தான் எம்.எட்  முடித்தான் , உடனடியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற கற்றுகொண்டான். அவர்கள் தான் அவனை சினிமாவில் நடிக்க தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். அவனும் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்பாவின் பேச்சைக் கேளாமல் நடக்கிறான். இவனை எப்படித் திருத்துவது என்பதே சிவநேசரின் இப்போதைய கவலையாயிற்று.

மேலும் ஒரு மாதம் ஆனது. சுதீரின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றமும் இல்லை. இந்த வருடமும் ஆசிரியர் பணிக்கு அவன் விண்ணப்பிக்கவில்லை.

அன்று காலை அஞ்சனாவின் தகப்பனார் வேதாசலம்  திடீரென சிவநேசனை பார்க்க வந்தார்.

"வாங்க மச்சான் , என்ன விஷயம், காலங்காத்தால நம்ம வீடு தேடி வந்திருக்கீங்க?" என்றார் சிவநேசன்.

"ஒரு முக்கியமான விஷயமா உங்களைக் கலந்து பேசிட்டு போக வந்தேன் சிவா. நம்ம அஞ்சுவை மேலத்தெரு ராகவனோட மகன் சுந்தரத்துக்கு பெண் கேக்கறாங்க. எனக்கு பூரண சம்மதம் , பெண்ணும்  சரி ன்னுட்டா. என்ன இருந்தாலும் சுதீர் தான் முறை மாப்பிள்ளை. அதான் உங்ககிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு வந்தேன்" என்று தயங்கியபடி கூறினார் வேதாசலம்.

"என்ன மச்சான் திடீர்னு இப்படி சொல்றீங்க? நம்ம சுதீருக்கு என்ன கொறைச்சல், நீங்க ஏன் வெளியில மாப்பிள்ளை பாக்கணும்? இதுக்கு  உங்க பொண்ணு எப்படி சம்மதிச்சா" என்றார் சிவநேசன்.

“என்னப்பா சிவா ,உனக்குத் தெரியாததா? சுதீர் வேலைக்குப் போகாம ஊரை சுத்திக்கிட்டிருக்கான். என் பொண்ணும் அவனுக்கு நல்ல வேலை கெடைக்கும்னு இத்தனை நாளா நம்பிக்கிட்டு இருந்தா. ஆனா அவன் வேலைக்கு முயற்சி பண்றாமாதிரி தெரியலை. அவன்  உண்மையா முயற்சி பண்ணி அவனுக்கு  வேலை கிடைக்கலைன்னா கூட என் பொண்ணு காத்திருக்க தயாரா இருந்தா. ஆனா அவன் வேலைக்கு  முயற்சிகூட பண்ணாம ஏதோ எட்டாத கனவுல வாழ்ந்துக்கிட்டு இருக்கான் . அவ  எந்த நம்பிக்கையில காத்திருக்கறது,  எத்தனை நாளைக்குதான் காத்துக்கிட்டு இருக்கறது? இன்னிக்கு நல்ல வேலைல இருக்கிற சுந்தரம் கேக்கறப்போ என்னால மறுக்க முடியலை. அவளும் சரின்னுட்டா. இந்த காலத்துப் பொண்ணுங்க சரியா தாம்பா முடிவு எடுப்பாங்க.    நீங்களும் பிரச்னை எதுவும் பண்ணாம வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்" என்றார் வேதாசலம்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுதீருக்கு அவமானமாக இருந்தது. அஞ்சனா எப்படி இதற்கு சம்மதித்தாள்? ஹீரோ மாதிரி இருக்கும் தன்னை  விட்டுவிட்டு கருப்பாக ஒல்லிக் குச்சியாக இருக்கும் சுந்தரை எப்படி அவளால்   மணக்க   முடியும்? இதை  அவளிடமே   நேரடியாக  கேட்டுவிடுவது  என்ற  முடிவுடன்  பைக்கை  எடுத்துக்கொண்டு வழக்கமாக அவள் வரும் அம்மன் கோவில் வாசலில் காத்திருந்தான் சுதீர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.