சிறுகதை - மீண்டும் நான்!! - குரு
"ஏசப்பா!! ஒரு வழியா தூங்கப்போனான். இவன தூங்கவைக்கறதுக்குள்ள நமக்கு டயர்டாகிடுது. இவன விட்டுட்டு அப்படி என்ன "ணொண்ணன் (அண்ணன்) க்ரஹப்ரவேசம் வேண்டிக்கெடக்கு அவளுக்கு!!
புலம்பியபடி வந்து சோபாவில் சாய்ந்து. "ப்ளே" பட்டனை அமுக்கினான்.
டிவியில் படம் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக உட்கார்ந்து திகில் படம் பார்ப்பது என்பது தாமசுக்கு (Thomas) ஒரு கிக்தான். வியாழன் இரவு, அடுத்தநாள் மெடிக்கல் லீவின் காரணமாக ஆபீஸ் போக வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அவனுடைய 10 வயது மகனுடன் மாரடித்து ஓட்ட வேண்டிய நிர்பந்தம். ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்பா தாமஸ்.
காலில் அடிபட்டிருந்தபடியால், எமியின் அண்ணன் விழாவிற்கு அழைத்தும் செல்ல முடியவில்லை. வீட்டில் மனைவி இல்லையென்றால் குஷிக்குப் பஞ்சமா என்ன!!
அன்று, அக்டோபர் 12, அவனது மூத்த சகோதரன் ஜாஸனின் (Jason) நினைவு நாள்கூட. திடீரென்று அவன் நினைவு நிழலாடியது தாமசுக்கு!!
உயிரோடு இருந்த வரை எவ்வளவு பிரச்சனை, சொத்துத் தகராறென்றாலும், அரக்கன் போல தாமசைத் தாக்கியிருந்தான் அவன். ஆனாலும், அவனது துர்மரணம் தாமசுக்கு ஒரு இழப்பாகத் தான் இருந்தது. உதகையில் ஏற்பட்ட ஆக்சிடென்ட் ஒன்றில், தனது மனைவியுடன், காரிலேயே எரிந்து சாசொன்னதுகிப் போயிருந்தான் ஜாஸன். அவன் இறந்து 13 வருடங்களாகிறது. அவனது சொத்துக்களும் தாமசுக்கே கிடைத்தது. அவனது தாயாருக்கு ஜாஸன் என்றால் ஒரு தனி அக்கறை. ஜாசனுக்கும், அவனது தாய் மேல் உயிர். அவன் உயிரோடிருந்தவரை அம்மாவை அவனுடனேயே வைத்துப் பார்த்துக்கொண்டான்.
அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, தாமஸ், அம்மா மற்றும் தன் மனைவி எமியுடன் திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டான். பிறகென்ன, தாயார் மரணம், குழந்தை, வேலை, வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக வர, பிசியாகிப் போனான் எல்லாவற்றையும் மறந்து. ஊருக்கு வெளியே, ஒரு பழைய வீட்டை லோனில் வாங்கி செட்டில் ஆகியிருந்தான். ஒதுக்குப்புறமான வீடு. அமைதியான வாழ்வு!! ஆனால் இந்த வருடம் என்னவோ போலிருந்தது.
அக்டோபர் 13!! நேரம் 12:05 AM.
படம் ஆரம்பித்தவுடன், சோபாவில் என்னவோ முதுகுப்பக்கம் இடிக்க, கைகளால் வெளி எடுத்தான்.
"The Holy Bible". திடீரென்று எதோ துர்நாற்றம்!!
சட்டென்று கரண்ட் போக, கும்மிருட்டில், செய்வதறியாது
"எபி!! (Ebbie)" என்று குரலிட்டான். எபி தாமசின் 10 வயது மகன். படு சுட்டி. அவனைக் காண்போர் அனைவருமே, "அப்படியே பெரியப்பா சாயல்" என்று சொல்லும்போதெல்லாம், தாமசுக்கு கோபமாய் வரும். கோபமும் அப்படியே அவன் பெரியப்பனைப் போலத்தான். முறைத்தால் கண் சுருங்கும், கன்னம் சிவக்கும்.
"எபி".. தூங்கறியாடா?
பதிலில்லை.. தூங்கிட்டான் போல!! முனகிக்கொண்டே தாமஸ் சோபாவிலேயே கண்ணசற.. நிசப்தம்.
" டமார்" என்னமோ பெரிய சத்தம் மாடியில் இருந்து.
"எபி.. டேய் என்னடா பண்ற", என்று பதறிய தாமஸ், எமர்ஜென்சி டார்ச் எடுக்க, பெட்ரூம் போனான்.
"வச்சது வச்ச இடத்துல இருக்காதே, அதானே இருந்துட்டா அது நம்ம வீடே இல்லையே. நம்மள சொல்லுவாளுக பொறுப்பில்லைன்னு.. இவளுக..
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
அந்த இருட்டினில், காலை உரசிக்கொண்டு எதோ ஓடியது.
" அம்மா!!" என்று அலறியேவிட்டான் தாமஸ். திடீரென்று காலருகே, சூடான ஒரு திரவக்கசிவு. தொட்டுப் பார்த்தவன் பதறிப்போனான். பிசுபிசுவென, ரத்தம் போன்ற ஒரு வாடை. அவன் அடிபட்ட காலில் இருந்து வருகிறதா என்று சோதித்துப் பார்த்தான். இல்லை. அவன் முனகிக்கொண்டே தாமஸ்
"ஐயோ!! எபிக்கு எதுவும் ஆகியிருக்குமா? "
"எபி.. டேய் எங்கடா இருக்க" என்று படுக்கையில் தேடினான். எபி அங்கு இல்லை.
மாடியில் சத்தம் கேட்டதே என்று நினைத்துக்கொண்டே, தீப்பெட்டி மட்டும் எடுத்துக்கொண்டு இருட்டில் மாடிப்பக்கம் ஏறினான். படிக்கட்டுகள் வந்தபோது குச்சி அணைந்தது. இன்னொரு குச்சி ஒன்றை எடுத்துப் பற்றவைத்து நிமிர, தூரத்தில் படியில் இரு பளிச் கண்கள் அவனை நோக்கித் தாவ, பதறிப்போய் கீழே விழுந்தான் பயத்தில். பட்ட காலிலேயே மீண்டும் அடிபட, எழ முடியாத வலியில் துடித்தான்.
"எபி.. எபி கண்ணா. எங்கடா இருக்க!!" வலியில் சத்தமும் கம்மியாகத்தான் வந்தது. ம்ஹூம், சுற்றி நிறைந்திருந்த இருட்டின் ஊளைச் சத்தம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.