சிறுகதை - பிறந்தநாள் பரிசு - பூர்ணிமா செண்பகமூர்த்தி
"சஞ்சய்! உன் செல்போன் தான் அடிக்குது! எடுத்துப் பாரேன் "பிரியா சொல்ல
வெளியில் எடுத்துப் பார்த்தான் "ப்ரீத்தி தான் "
செல்பேசி அழைப்பை எடுத்துப் பேசவில்லை. அப்படியே செல்பேசியை அணைத்து வைத்தான். அப்புறம் அவளை அழைத்து பொறுமையாகப் பேசிக் கொள்ளலாம். சஞ்சய் 'நிலா' தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் ஒரு பரபரப்பான தொலைக்காட்சி நிருபர். ஊர் ஊராகச் சுற்றிப் பல நிகழ்ச்சிகளைப் படமெடுக்கும் பணியும் உண்டு. அடுத்ததாகச் செல்ல வேண்டிய இடங்கள் பற்றித்தான் தன் குழுவினருடன் பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் பேசி முடித்தவுடன் எல்லாரும் அறையில் இருந்து வெளியில் சென்றனர். சஞ்சயும் அறையில் இருந்து வெளியில் வந்த பின்பு, கைபேசியை எடுத்து ,ப்ரீத்தியின் எண்ணுக்கு அழைத்தான். ப்ரீத்தி சஞ்சயின் காதல் மனைவி. ப்ரீத்தி ஒரு ஓவியர். நிதானமான வாழ்க்கை முறை அவளுடையது. எதையும் ரசித்து அனுபவிக்கும் கலை ரசனை உடையவள். சஞ்சய் வாழ்க்கை முறை சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது. ஓய்வாய் உணவருந்தக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருப்பவன். இரு துருவங்களை இணைத்து வைக்கும் அற்புதம் தானே காதல். ப்ரீத்தியின் ஓவியக் கல்லூரிக்குச் செய்தி சேகரிக்க வந்த சஞ்சயின் அறிமுகம், காதலாகி இன்று திருமண பந்தத்திலும் அவர்கள் இருவரையும் இணைத்து வைத்தது.
வீட்டில்...ப்ரீத்தி தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்தாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் பிறந்தநாள் ஞாபகம் இருந்தது. எத்தனை ஆர்வமா நடுராத்திரிக்கே வாழ்த்து சொல்லணும்னு துடிப்பான். இப்போ என் முகம் பார்த்து பேசுறதுக்குக் கூட நேரம் இல்ல "போன் போட்டாக் கூட அதை எடுத்துப் பேசுறதில்ல. வரட்டும்! இன்னிக்கு இரண்டில் ஒன்னு பார்த்திடத் தான் போறேன்.
கைபேசி ஒலித்தது. சஞ்சய் தான். எடுத்துப் பேசினாள் ப்ரீத்தி.
"என்ன? சொல்லு?"
"கோபமா செல்லம்?"
"..."
"ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கற ப்ரீத்தி?"
"..."
"சரி! வீட்டுக்கு வந்து பேசுறேன்! வைக்கவா? ஆபிஸ்ல இருந்து கிளம்பறேன்!"
"பார்த்து பத்திரமா வா. ஹெல்மெட் மறக்காம போட்டுக்கோ! "
"வைக்கிறேன் "
"ம்"
அழைப்பை முடிக்கவும் சமையலறைக்குச் சென்றாள் ப்ரீத்தி, தக்காளி ரசமும், அப்பளமும் செய்து வைத்திருந்தாள். எளிமையான உணவென்றாலும் அதில் ருசி இருக்க வேண்டும் என்று சஞ்சய் எதிர்ப்பார்ப்பான். ப்ரீத்திக்குப் புலால் உணவு பிடிக்காதென்று அவனும் இறைச்சி சாப்பிடுவதையே நிறுத்தி விட்டான். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவின் விழித் துவாரம் வழியே பார்த்து விட்டு சஞ்சய் தான் என்று கதவைத் திறந்தாள்.
"என்ன ப்ரீத்திச் செல்லம்.. தக்காளி ரசமா? அபார்ட்மென்ட் முழுதும் மணக்குது".
"ம்" ஒலி மட்டும் பதிலாய் அவளிடமிருந்து
"என்னடா கோபம். போனைக் கட் பண்ணேன்னு தானே. முக்கியமான மீட்டிங் டா!".
"உனக்கு என்னிக்குத் தான் முக்கியமான வேலை இல்லாம இருந்திருக்கு? என்னை விட எல்லாமே முக்கியம் தானே" என்று சமயலறையில் இருந்தே கத்தினாள் ப்ரீத்தி.
"எனக்குத் தெரியும் நீ ஏன் இவ்வளவு கோபப்படுறன்னு?"
"எதுக்காம்?"
"நான் உன் பிறந்தநாளை மறந்துட்டேன்னு நினைச்சு தானே. ஞாயிற்றுக்கிழமை உனக்கு அருமையான பிறந்தநாள் பரிசு காத்துட்டு இருக்கு."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ பிறந்தநாளுக்குப் பரிசு தரன்னும்னு யாரும் இங்கே தவிக்கல."
"அது சரிதான். பரிசுக்கே பரிசா?"
ஆமா! டிவில வேலை பார்க்கிறனால பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. பேசாம சாப்பிடு.
"சரி, நாளைக்கு நாம வெளிய போறோம். இரண்டு நாளைக்குத் தேவையான டிரஸ்லாம் எடுத்து வை!".
"வெளிய போறதுக்கு எதுக்கு டிரெஸ்?"
"வெளியூர் போறோம்".
"வெளியூரா? எங்க போறோம்? எதுக்குப் போறோம்?"
"எல்லாம் உன் பிறந்தநாளைக் கொண்டாடத் தான் போறோம். எங்கன்னு உனக்கு அங்கே போறப்பத் தெரியும்".
"பார்க்கலாம் என்ன தான் பண்ணப் போறன்னு."
மறுநாள் இரவில் ரயில் பயணம். வாரம் முழுவதும், வேலை செய்த அசதி அல்லவா. சஞ்சய் அயர்ந்து தூங்கிவிட்டான். இறங்கும் இடம் வந்தது. அவளை ஊர் பெயர் கூட வாசிக்க விடவில்லை. நேரம் ஆகுது. சீக்கிரம் வா. என்று இழுத்துக் கொண்டு வந்துவிட்டன. வெளியே தயாராக இருந்த ஒரு காரில் ஏறி, மீண்டும் பயணம் தொடர்ந்தது.