சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 01 - என் ரகசிய ஸ்னேகிதியே - புவனேஸ்வரி கலைசெல்வி
மிகுந்த பரபரப்புடன் திருமண ஏற்பாடுகள் நடக்க அங்கு ஏன் வந்தோம் என ஒவ்வொரு நொடியும் நொந்து கொண்டிருந்தாள் அவள்.
இதோ எதிரில் நிற்கும் இவனை காணத்தான் இத்தனை விரைவான பயணம். இன்று வரை தன்னுயிர் கலந்தவன், நாளை வேறொருத்தியின் கணவனாம்! " சொல்லி இருக்க வேண்டும்! ஒருமுறையாவது உன்னை காதலிக்கிறேன்" என்று அவனிடம். அரற்றுகிறது அவள் மனம்.
அவன் என்ன எதுவுமே அறியாத பாலகனா? ஒரு பெண்ணின் தவிப்பை அறியாத மூடனா? இல்லை ! எனினும் தயாராகிவிட்டான் இன்னொருத்தியின் கணவன் ஆவதற்கு.
"இனி ஏதாச்சும் அதிசயம் நடந்தால்தான் இந்த கல்யாணம் நிற்கும்" அவளின் பெருமூச்சு வசனம் பேசிட, "நீதான் அந்த அதிசயத்தை நிகழ்த்த வேண்டும்" என நினைத்து கை கட்டி நின்று புன்னகைத்தான் அவன்.
"தூங்கலயா டீ"
(ரொம்ப அக்கறை தான்- மனதினுள் புலம்புகிறாள்)
"நாளைக்கு கல்யாணம் ல?"
(உனக்கு தானே... எனக்கென்ன வந்தது!)
"ஒன்னும் பேச மாட்டியா?"
(பேசி பிரயோஜனம் இருக்கா?)
"இப்படி மௌனமா இருக்கத்தான் என் கல்யாணத்துக்கு ஓடி வந்தியா?"
(நான் ஓடி வந்ததும் நீ வந்து என்னை கட்டி பிடிச்சுப்பனு கனவுகள் கண்டது தவறுதான்!)
"என்னடீ? ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லையா?" அவனின் ஆழ்ந்த குரல் அவளை உசுப்பி விட இனி கொஞ்சம் தாமதித்தால் தடுமாற்றம் ஏற்படும் என்றே உணர்ந்தவள்,
தொண்டையை செருமிக் கொண்டு,
"இருக்கு சொல்லுறதுக்கு!" என்றாள்.
"அப்போ சொல்லு..!"
"குட் நைட்.. உன் கடந்த காலங்கள் இன்றோடு முடிவு பெறட்டும்..நிம்மதியாக தூங்கு!" என்று விட்டு நிற்காமல் ஓடி விட்டாள்.
மறுநாள், மணமகன் அறையில் நுழைந்தாள் அவள்.
"ஹேய் வாடீ.. என்ன இந்த நேரத்துல?" மீண்டும் அவனுக்குள் எதிர்பார்ப்பு.
".."
"ஏதோ சொல்ல வரியா?"
(ஏற்கனவே சொல்லி இருக்கனும். ஒன்னு உன் நிராகரிப்பை உணர்ந்து என்றோ விலகி வாழ்ந்திருப்பேன், அல்லது உன் சம்மதத்தால் மணப்பெண் ஆகி இருப்பேன்..)
அவனே மௌனத்தை களைத்தான்.
" டூ லேட்.. எல்லாரும் கூப்பிடுறாங்க. நான் மேடைக்கு போறேன்."
"ஹேய் அஞ்சு நிமிஷம் நில்லு ப்ளீஸ்.." அவன் கைகளை பற்றி நிறுத்தினாள் அவள்.
" என்னடீ??"
"இன்னும் சில நிமிஷத்துல நீ இன்னொரு பொண்ணுக்கு புருஷன். அதற்கு பிறகு எவ்வளவு பக்கம் நின்னாலும் உனக்கும் எனக்கும் ரொம்ப தூரம் ஆகிடும். நீ எனக்கானவனா இருக்கும் போதே உன்னை கண்ணில் நிரப்பிக்கிறேன்."
"உன் பேச்சே சரி இல்லை. என்ன சொல்ல நினைக்கிற?"
"என் நினைப்பு உனக்கு அவசியம் இல்லாதது. பேசாம அஞ்சு நிமிஷம் நில்லு!"
கசந்திடுமா அவனுக்கு? கை கட்டி நின்றான் வசீகரமாய். அவனை நிரப்பி கொள்ள நினைத்த விழிகளில் கண்ணீர் துளிகள். அவனை தவிர அனைத்தையும் பார்த்தன அவளின் விழிகள்.
" போதும் டா..இப்ப போ!"
" ஹேய், அஞ்சு நிமிஷம் முடியல!"
"இது என் கடிகார கணக்கு.. போ" என்றவளின் கண்கள் அவனை அள்ளி பருகி கொண்டன. அவன் மேடைக்கு செல்ல வெளியேற, அவள் அதே மண்டபத்தின் அருகில் இருந்த கோவிலில் தஞ்சம் புகுந்து கொண்டாள்.
" கடவுளே, போன ஜென்மத்துல யாரையாச்சும் பிரி்ச்சுட்டேனா? அதுக்கான தண்டனையா இது? இந்த வலியை தாங்கவே முடியலையே.இதில் இருந்து தப்பிக்க முடியாதா?
இந்த ஜென்மம் போகட்டும். அடுத்த ஜென்மத்தில் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு வேண்டாம். நட்பெனும் கரையில் என் காதல் ஒதுங்க வேணாம். நட்பை கலங்க படுத்த வேண்டாம் னு காதலையும் என்னையும் சேர்த்து கொன்னுட்டேன். அடுத்த ஜென்மத்தில் ஆச்சும் காதல்னா காதல் மட்டும் தான் னு தெளிவினை கொடு. அவனையே காதலிச்சு அவனுக்கே மனைவியாகனும். ப்ளீஸ் ப்ளீஸ் இந்த வரம் கொடு. " கெஞ்சிவிட்டு திரும்பியவளின் நேரெதிரே அவன்!
"இ...இங்க என்ன பண்ணுற? எல்லாரும் தேடுவாங்க.. நான் சும்மா சாமி கும்பிட வந்தேன்!" தந்தியடித்தன வார்த்தைகள்.
"நில்லுடீ"
".."
"உனக்கு என் கல்யாணத்துல இஷ்டமா?" துளைக்கும் நேத்திரங்களுடன் நோக்கினான்.
" நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சந்தோசமா இருப்பியா?"
".."
"சொல்லுடீ கல்யாணம் பண்ணிக்கவா?" பாரபட்சமின்றி அவன் பார்வை தூண்டிட , அவனது பாறை மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
" போகாத டா. என்னை விட்டுட்டு போகாத.. நீ இல்லாம எப்படி இருப்பேன்... நான் உன்னை தான் காதலிக்கிறேன். நீ எனக்கு மட்டும் தான். ! " அவளின் இறுக்கமான அணைப்பினில் அவர்களுக்குள் பிணைந்த காற்றும் நசுங்கியது. அவளை ஆரத் தழுவினான் அவன்.
"லூசு உன்ன விட்டுட்டு எங்கடீ போவேன்? சாமியாராத்தான் போகனும்..எல்லாம் சின்ன டிராமா என் ரகசிய ஸ்னேகிதியே!" என அவளின் நெற்றியோடு அவன் நெற்றி முட்டி கொள்ள இந்த கற்பனை நிறைவு பெற்றது.
இந்த ஹீரோவுக்கு ஹீரோயினுக்கு என்ன பேரு வைக்க போறீங்க. அந்த பெண்ணின் பிரதிபலிப்பு என்ன? அதை உங்கள் கற்பனையில் விடுகிறேன். கமெண்ட் பண்ணுங்க ஜீ..பாய் :)
{kunena_discuss:785}