தொடர்கதை - என் நிலவு தேவதை – 01 - தேவிஸ்ரீ
கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது, அதனுள் அமர்ந்திருந்தவர்கள் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். அதில் வாசுதேவன் மனதில் தன் தங்கையை நினைத்து சிறு நிம்மதி உண்டாயிற்று, இனி அவளை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை, ஆனால் தன் அருகில் அமர்ந்திருந்த தங்கை மகளை நினைத்து சிறு கவலை வந்தது.அவள் கவலையாகவும், குழப்பத்துடனும் இருப்பது புரிந்தது.அவள் மடியில் தலைவைத்து குழந்தை யமுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த தன் தம்பி மகனை பார்த்தார், அவன் யோசனையுடன் இருப்பதை புரிந்து கொண்டார், ஆனால் அனைவருக்கும் ஒன்று மட்டும் நிச்சயம், இது கண்டிப்பாக தனது குடும்பத்தினர்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்…
வாசுதேவன் இப்போது தன் கைக்கடிகாரத்தை பார்த்தார், மணி காலை 8.10, விடியகாலையில் புறப்பட்டது, நிச்சயமாக அனைவருக்கும் பசித்திருக்கும், ஆனால் அதை உணரும் நிலையில் யாரும் இல்லை, ஒரு பெருமூச்சுடன் டிரைவரின் பக்கம் திரும்பி
“பாலா ஏதாவது ஒரு ஹோட்டலில் நிறுத்தப்பா, சாப்பிட்டு விட்டுச் செல்லலாம்” என்றார்,
இதற்காகவே காத்திருந்த பாலா உடனே பக்கத்தில் இருந்த மிகப்பெரிய ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான். வாசுதேவன் தன் தம்பி மகனான தமிழ்க்கதிர்-ஐ அழைத்தார்,
“வாப்பா சாப்பிட போகலாம்”.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தமிழ்
“நான் யமுனா குட்டியோடு முன்னே போகிறேன், நீங்கள் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வாங்க” என கூறி யமுனாவை எழுப்பி
“வாங்க யமுனா குட்டி நாம போய் உங்களுக்கு பிடிச்சத வாங்கி சாப்பிடலாம்” எனவும்
அப்போ பூரி சாப்பிடலாமா? என்றாள்.
ம்ம் நீங்க என்ன கேட்கரீங்களோ அதுவே வாங்கலாம்! என்று தன்னுடன் அழைத்துக்கொண்டு ஹோட்டலில் நுழைந்தான்..
வாசுதேவன் தன் தங்கை மகளை பார்த்தால், அவளோ கார் நின்றது கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள். அவளை அப்படி பார்க்க முடியாமல் அவள் தோள்தொட்ட அவர்
“அமிர்தா, கவலைப்படுவதால் எந்தத் துன்பமும் குறைய போவதில்லை, உனக்காக உன் அம்மா தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றாள், நீ இப்படி கவலையோடு இருந்தால் உன் அம்மா கண்டுபிடித்து விடுவாள். உன் நிலை பற்றி நான் அவளுக்கு கூறப்போவதில்லை, இது தெரிந்தால் அவளால் தாங்கமுடியாது. நீ இப்படியே இருக்காதேயம்மா, மனதை தேற்றிக்கொள் என்று கூறிவிட்டு சாப்பிட அழைத்தார்,
அதுவரை அமைதியாக இருந்த அமிர்தா அம்மாவின் நிலை புரிந்ததும் சிறிது தெளிவுற்றவளாய் மெல்ல தலையாட்டிவிட்டு காரை விட்டு இறங்கினாள், அதன் பின் இருவரும் ஹோட்டல் உள்ளே நுழைந்தனர்.
அமிர்தா நேராக ரெஸ்ட்ரூம் சென்று ரெஃப்ரஷ் ஆகிக்கொண்டு வெளியே வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த மற்ற இருவரும் அவளைப் பார்த்து புன்னகைத்தனர்,அவளும் மெல்லிய புன்னகையுடன் அவர்கள் அருகே அமர்ந்தாள், யமுனாவும் ரெஃப்ரஷ் பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தது புரிந்தது, தமிழைப்பார்த்து நன்றி உரைத்தாள், அவன் நோ மென்சன் என்றான்.பின் அனைவரும் சாப்பிட ஆர்டர் கொடுத்து சாப்பிட ஆரம்பித்தனர். முதலில் அமிர்தா யமுனாவிற்க்கு ஊட்டி விட்டாள். யமுனா சாப்பிட்ட பின், அவள் சாப்பிட ஆரம்பித்தாள், அதாவது அவள் சாப்பிடுவதாய் பேர்ப்பண்ணிக்கொண்டிருந்தாள், அதைப் பார்த்த தமிழ் அவளை கலகலப்பாக்க, பேச ஆரம்பித்தான்.
என்ன அமிர்தா டிபன் பிடிக்கலயா? இன்நேரம் என் தங்கச்சி வாலுக்கிட்ட இந்த டிபன குடுத்திருந்தா ஒரு நிமிசத்துல காலி பண்ணிருப்பா. அவள பாக்கத்தான போற, அப்ப நீயே சொல்லு, என்ற தமிழ் பிறகு
“அங்கப்போனா எல்லோருக்கும் உன்ன பிடிக்கும், அட உனக்கு குடும்பத்தில யார்யார் இருக்காங்கனு தெரியாதுல்ல, நான் சொல்றேன்” என ஆரம்பித்த தமிழை இடைநிறுத்திய வாசுதேவன்,
“அவள சாப்பிட விடுடா, நம்ம குடும்பத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சா ஒருநாள் பத்தாது அத்தனை பேரு இருக்காங்க” என்றார்.
இதைக் கேட்ட அமிர்தா, ஒருதடவை தன் குடும்பத்தினை நினைத்து பார்த்தாள். அவளால் தானே அவள் குடும்பத்தினரை இழந்து தவிக்கின்றாள், யமுனாவும் அனாதையாகி விட்டாளே! எல்லாம் என்னால் தானே என்று வருந்தினாள். பிறகு, நான் இருக்கும் வரை யமுனா அனாதையில்லை, அவளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என நினைத்து கொண்டாள். பின் தன் எண்ணவோட்டத்தை நிறுத்திக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அனைவரும் சாப்பிட்டபின் மறுபடியும் கார் பயணம் தொடங்கியது, யமுனா மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.
இப்போ சொல்லு குடும்ப நபர்கள பத்தி என வாசுதேவன் கூறியதும் தமிழ் சொல்ல ஆரம்பித்தான்.