23. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
“ச்ச.. நான் எப்படிப்பட்ட ப்ரண்ட் தமிழ்? அவனை இப்படி புரிஞ்சுக்காம விட்டுடேனே.. தேடாமல் விட்டுட்டேனே.. தேடி அவனே வந்தப்போ திட்டினேனே..” இயலாமையுடன் புலம்பினாள் யாழினி. நடந்தவற்றை ஒப்பித்தவுடனேயே ஏதோ சரியில்லை என்று தமிழே உணரும்போது தனக்கு ஏன் அது தோன்றாமல் போனது? குற்ற உணர்ச்சியில் யாழினி தவிப்பதை தமிழால் உணர முடிந்தது. மெல்ல அவளுக்கு தோளை தட்டிக் கொடுத்தான் தமிழ்.
“இது பாரும்மா, நீ புகழுக்கு நல்ல ப்ரண்ட் இல்லைனு எதைவெச்சு சொல்லுற? புகழுக்கும் உனக்கும் நடந்த சண்டையை நீ அப்பாக்கிட்டயோ, இல்லை என் வீட்டுலயோ சொல்லியிருந்தால் என்ன ஆகி இருக்கும்? அவன் போனதே நல்ல விஷயம்னு நினைச்சிருக்கலாம். அவனை தப்பாக நினைச்சிருக்கலாம்.. ஏன் நானே கூட கல்யாணம் நின்ன ஆதங்கத்தில் நடந்ததை தெரிஞ்சிருந்தா புகழை தப்பாக நினைச்சிருக்கலாம்.. அப்படி நடக்க கூடாதுன்னு தானே மூணு வருஷமா நீ இதைப்பத்தி சொல்லவே இல்லை?”. யாழினியை நன்கு புரிந்து வைத்திருந்தான் தமிழ். அது அவனது வார்த்தைகளின் மூலமாக வெளிப்பட்டது.
“அது மட்டுமில்ல. உனக்கு ஆரம்பத்தில் வேணும்னா புகழ் சொன்ன வார்த்தைகள் மேல கோபம் இருந்திருக்கலாம். ஆனா, இந்த மூணு வருஷமா அவன் உன்னை தேடி வரல என்பதுதான் உன்னோட கோபம்.. ரைட்டா?”என வினவினான் தமிழ். தமிழின் கேள்விகள் யாழினியின் குற்ற உணர்ச்சிக்கு பதிலாகின.
“உண்மைதான்.. அவன் என் ப்ரண்டு.. அவனை எப்படி விட்டுகொடுக்க முடியும்.. ஆனா இருந்தாலும்..”
“இருந்தாலும் இல்லன்னாலும்னு எந்த பேச்சும் வேணாம்.. நடந்து முடிஞ்ச நாட்களை மாத்துற சக்தி இன்னமும் இந்த உலகத்துக்கு வரல..அதை மனசுல வெச்சுக்கிட்டு நடக்க போறத கவனி” கொஞ்சம் சிடுமூஞ்சியாக மாறி அவளை சமாதானப்படுத்தினான்.
“நான் என்ன பண்ணுறது தமிழ்?”
“எதுவும் பண்ண வேண்டாம்.. இவ்வளவு நாள் அவன்கூட பேசாமல் இருந்த மாதிரி இன்னும் கொஞ்சா நாள் இரு..”
“ஏன்?”
“எல்லாத்துக்கும் கேள்வி தானா? இன்னொரு விஷயமும் கேளு.. அவன் இன்னைக்கு மட்டும்தான் இங்க தங்குவான். அதுக்கு அப்பறம் அவனுக்கு இன்னொரு இடத்தில் தங்க வேண்டிய வேலை இருக்கு.”
“ஏதாச்சும் ஒரு நல்ல விஷயம் சொல்லுறீங்களா நீங்க? என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு யோசிச்சா எனக்கு தலைதான் வலிக்கிது!” என்று சலிப்பாக சொன்னாள் யாழினி.அவள் எதார்த்தமாக சொல்லியிருந்தாலுமே தமிழ் கலவரமாகினான்.
“சொல்லுற பேச்சை கேட்கவே மாட்டியா நீ? எதுக்கு சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆகுற நீ? தலை வலிக்கிதா?உன் மருந்து எல்லாம் சாப்பிட்டியா? சூடா ஏதும் கொண்டு வரவா?”என்று தமிழ் கலவரமாகிட அவனை நெருங்கிய யாழினி, இமைக்கும் நொடியின் அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
“இப்போ புரியுதா நான் எவ்வளவு நிதானமாக இருக்கேன்னு” என்றவளை துரத்தி பிடிக்கத் தொடங்கினான் தமிழ்.
“கண்டிப்பா நீங்களாக இந்த சண்டையை ஆரம்பிச்சிருக்க மாட்டிங்க புகழ். எனக்கு தெரியும்” என்றாள் ஆயிஷா.
“ம்ம் உண்மைதான் ஆயிஷா. ஆனா இப்போ அதபத்தி கேட்காத. என்னால சொல்ல முடியும்னு தோணல. கொஞ்சம் டைம் வேணும்” என்றாம் அவன் யோசனை படிந்த குரலில்.
“நீங்களே சொன்னால் கேட்டுக்குறேன். இல்லன்னா வேணாம். நான் இப்பவும் இந்த ப்ரச்சனையை உங்களுக்கும் உங்க தோழிக்கான ப்ரச்சனை அப்படிங்குற ரீதியில் தான் பார்க்குறேன். சோ ஃபீல் ஃப்ரீ (feel free) “ என்றாள் ஆயிஷா.
“மணி ஆச்சுடா. என்னத்தான் தமிழ்கிட்ட சொல்லி இருந்தாலும், நான் மறுபடியும் சொல்லாமல் போயிருட்டேன்னு யாழீ கொலை வெறியில் இருப்பா..”
“ஹா ஹா அதுதான் என் ப்ளான் ஏ!”
“அடிப்பாவி!”
“பின்ன, என் அடிக்கு பயப்படுற ஆளா நீங்க? வீட்டுக்கு போங்க ஆத்தா வேப்பிலையோடு வெயிட்டிங்”
“புருஷனை வம்புல மாட்டி விடுறதே பொண்டாட்டிக்கு கொண்டாட்டம் போல..”
“என்ன புருஷன் பொண்டாட்டியா? இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா”
“ஹாஹா நானே மூணு வருஷமா கொடுக்காததை எல்லாம் அப்போ கொடுக்குறதுன்னு தெரியாம இருக்கேன்.. இதுவே ஓவரா தெரியுதாக்கும் உனக்கு?”
“ஆமா, சாருக்கு அதிரடியா திருட்டு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே தெரியும்? பண்ணிக்க தெரியுதா? தலை மறைவு ஆகுறதுதான் ஆகுறிங்க, என்னை கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கலாம்ல?” குறும்புடன் வினவினாள் ஆயிஷா. எனினும் “ஏன் என்னை நிர்கதியாக விட்டுட்டு போன?”என்று அவள் கேட்பதாகவே புகழுக்கு தோன்றியது.